தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (13)

ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (13)

ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (13)


PUBLISHED ON : அக் 26, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 26, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: வளர்ப்பு மிருகங்கள் மீது அன்பு கொண்டிருந்த சிறுவன் மகிழ் ஆர்வத்தை அறிந்து, காவல்துறையில் ஓய்வு பெற்ற மோப்பநாய் செங்கிஸ்கானை தத்தெடுத்தார் அவன் தந்தை. எதிர்ப்பை மீறி அடுக்குமாடி குடியிருப்பில் வளர்த்தனர். குடியிருப்பின் எல்லா பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்தது செங்கிஸ்கான். காவல்துறையில் மோப்பநாய் பயிற்சியாளர் காண்டீபன், செங்கிஸ்கான் நாயை பிரிய முடியாமல் தவித்து, அதை கடத்தப் போவதாக கூறினான். இனி -



உறைந்த நிலையில் இருந்து மீண்டார் காண்டீபனின் மனைவி.

''என்ன பேசுகிறீர். நாம் மனிதாபிமானிகள்; குற்றங்களை மனதால் கூட செய்ய துணியக் கூடாது. இறைவன் உங்களை மன்னிக்கட்டும்...''

''நீ என்ன கூறினாலும், என் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டேன். தயவுசெய்து, செங்கிஸ்கான் விஷயத்தில் தலையிடாதே...''

''நான், உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். ஒரு யோசனை கூறுகிறேன்; செங்கிஸ்கான், எட்டு ஆண்டுகள் தங்களிடம் இருந்தது. மகிழுடன் கடந்த ஒரு வாரமாக தான் இருக்கிறது. நேராக அவன் வீட்டுக்கு சென்று, 50 ஆயிரமோ அல்லது 1 லட்சம் ரூபாயோ பேரம் பேசி வாங்குங்கள்...''

''அவர்களிடம் இல்லாத பணமா... இதுக்கு எல்லாம் மசிய மாட்டர்...''

''அப்படியென்றால், அவர்களை ஒரு காவலராக மிரட்டுங்கள்...''

''சரி வராது...''

எதிர்மறையாய் தலையாட்டினான் காண்டீபன்.

''மகிழ் குடும்பத்தார் கால்களில் விழுந்து கதறி அழுங்கள்; செங்கிஸ்கானை பிச்சையாகவோ, தானமாகவோ கொடுங்கள் என, இருகரம் நீட்டுங்கள்...''

''அதற்கும் அவர்கள் இறங்கி வரவில்லை என்றால்...''

''இறுதியாக செங்கிஸ்கானை கடத்துவோம். இந்த கடத்தலில் உங்களுக்கும், செங்கிஸ்கானுக்கும் இடையே, சமுத்திரம் அளவு அன்பை உணர்ந்து, இறைவன் மன்னிப்பார்...''

''என் வழிக்கு இறங்கி வந்தாயே...''

மனைவியின் கைகளை பற்றி முகத்தில் ஒற்றினான் காண்டீபன்.

''அதேசமயம், செங்கிஸ்கான் கடத்தலில் யாருக்கும் காயம் ஏற்படக்கூடாது. என் தலையில், கை வைத்து இறைவனின் பெயரால் உறுதி செய்யுங்கள்...''

''எக்காரணத்தை முன்னிட்டும், வன்முறையில் இறங்க மாட்டேன்: இது உறுதி...''

தெருமுனைக்கு வந்து, மேலே தலையை உயர்த்தி விடாமல் குரைத்தது செங்கிஸ்கான்.

தெரு நாய் ஒன்று, அங்கு வந்து நின்றது.

செங்கிஸ்கான் குரைப்புக்கு பதில் கூறும் விதமாய் அது குரைத்தது.

'யார் நீ...'

'நான் செங்கிஸ்கான். மகிழ் வீட்டு வளர்ப்பு நாய்...'

'அப்படியா... நாங்கள் தெரு நாய்கள். எங்களுக்கு பெயர் எல்லாம் கிடையாது...'

'உனக்கு, நான் பெயர் வைக்கிறேன். தெருவில் வசிக்கும், உன்னை போன்ற மற்ற சகோதரர்களை அழைத்துவா... அவற்றை பார்க்க வேண்டும்...'

தெரு நாய் செந்நிறமாய் இருந்தது. ராஜபாளையம் வகை; எக்காளம் வாசிப்பது போல தொடர்ந்து குரைத்தது.

அப்போது, 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அங்கு வந்து நின்றன.

'எதுக்கு எங்களை அழைத்தாய்...'

'புதிதாய் வந்திருக்கும் செங்கிஸ்கான் உங்களை பார்க்க விரும்பியது...'

'அது எங்களுக்கு முதலாளியா... அழைத்தவுடன் ஓடோடி வந்து நிற்க...'

'நீங்கள் எந்த இடங்களில் இருந்தாலும் அங்கு வந்து, உங்களை பார்ப்பேன்...'

நெகிழ்ச்சியாக கூறியது செங்கிஸ்கான்.

'அரசியல்வாதி மாதிரி பேசாதே...'

கிண்டல் செய்தது ஒரு தெருநாய்.

'எங்களுக்கு ஒரு வேளை சோறு கிடைக்கிறதே கஷ்டம். இறந்த எலி கிடைத்தாலும் விட மாட்டோம்...'

மற்றொன்று வாழ்வின் கசப்பை சொன்னது.

'உங்கள் சாப்பாடு பிரச்னை ஒழிய ஏற்பாடு செய்கிறேன்...' என்ற செங்கிஸ்கான், 'இரவில், இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துகிறீரே ஏன்...' என விசாரித்தது.

கருவாய் செவலை, கரு நாய், பச்சை நாய் எல்லாம் ஒன்றையொன்று பார்த்து சிரித்தன.

'குடும்ப தலைவனா, லட்சணமா இரவு, 9:00 அல்லது 10:00 மணிக்கு வீடு செல்லாமல், மது குடித்து, ஊர் சுற்றுவோரை குரைத்து எச்சரிக்கிறோம். இது ஒரு சேவை; கொச்சைப்படுத்தாதே செங்கிஸ்கான்...'

'இனி, தெருவில் சென்று, வருவோரை கடிக்க மாட்டோம் என, உறுதி செய்யுங்கள்...'

'யாரையும் கடிக்க மாட்டோம். அதே நேரம், எங்களை மனிதர்கள் கல்லால் அடிக்க கூடாது என, அறிவுறுத்து...'

இவ்வாறு செங்கிஸ்கானும், தெரு நாய்களும் பேசிக் கொண்டிருந்த போது, தெரு முனையில் பிரவேசித்தான் காண்டீபன்.

அவனை பார்த்ததும், செங்கிஸ்கான் இதயம், ஒரு நொடி நின்று துடித்தது.



- தொடரும்...

- ஆர்னிகா நாசர்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us