PUBLISHED ON : ஜூலை 19, 2025

கடலுார் மாவட்டம், நெய்வேலி நகர அரசு நடுநிலைப் பள்ளியில், 1970ல், 8ம் வகுப்பு படித்த போது, மேடையில் பேசுவதற்கு ஆர்வமுடன் பயிற்சி செய்து வந்தேன். பள்ளியில் அவ்வப்போது பேச்சுப் போட்டி நடக்கும். அதில் ஆசிரியர் ஒருவரின் மகனுக்கே முதல் பரிசு கிடைத்து வந்தது. கடும் முயற்சி எடுத்தபோதும் என் போன்றோருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.
இதை கவனித்த தலைமையாசிரியர் வைத்திய நாதேஸ்வரன், அதில் மாற்றம் ஏற்படுத்த முயற்சி எடுத்தார். ஒருமுறை போட்டியில் அவரே நடுவராக வந்து அமர்ந்தார். அன்று முடிவு மாறியது. எனக்கும், இன்னொருவனுக்கும் பரிசு கிடைத்தது. சமன் செய்து சீர்துாக்கிய பாங்கால் உற்சாகம் ஏற்பட்டது.
தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொண்டேன். பின்னாளில் பட்டிமன்றம், 'டிவி' நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பாக அமைந்தது.
என் வயது, 67; நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் முதன்மை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தஞ்சையில், 85 வயதை கடந்து ஆரோக்கியமுடன் வாழ்ந்து வருகிறார், என் தலைமையாசிரியர் வைத்திய நாதேஸ்வரன். போட்டியை சமன் செய்து சீர்துாக்கி நம்பிக்கை ஏற்படுத்தியவரை சமீபத்தில் சந்தித்து ஆசி பெற்று மகிழ்ந்தேன்.
- மு.பாண்டியன், சென்னை.
தொடர்புக்கு: 99523 28676
