PUBLISHED ON : ஏப் 11, 2026

தோட்டக் காவலாளியாக பணி செய்து வந்தார், கன்னியப்பன். அவரது மகன் குப்புசாமி, 5ம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு சுட்டுப்போட்டாலும், படிப்பு ஏறுவதில்லை.
மகன் சிறப்பாக படித்து உயர்வு பெற விரும்பினார், கன்னியப்பன். அவனோ ஆர்வமின்றி இருந்தான்.
குப்புசாமிக்கு தெரிந்ததெல்லாம் தோட்ட பராமரிப்பு ஒன்று தான்; கூடப்படிக்கும் நாலு பேருடன் சிநேகிதம் கூட இல்லை. அவனுக்கும் நன்றாக படிக்க வேண்டும், எல்லாருடனும் நெருங்கி பழக வேண்டும் என்று ஆசை தான். வெறும் ஆசையை மட்டும் வைத்து என்ன செய்வது...
குப்புசாமி அரையாண்டு தேர்வு எழுதினான். வழக்கம் போல் எல்லா பாடங்களிலும் 5 -10 மதிப்பெண் தான் கிடைத்தது. அதைப்பற்றி அவனுக்கு சிறிதும் கவலை இல்லை. ஆனால், அவன் கவலை எல்லாம், வகுப்பு மாணவர்கள் யாரும், தன்னுடன் சிநேகிதம் வைத்துக் கொள்வதில்லை என்பதாகவே இருந்தது.
அன்று காலை, மகனை தோட்டத்திற்கு அழைத்து வந்தார், கன்னியப்பன்.
ஒரு மாமரத்தை சுற்றிலும் சிறுவர் கூட்டத்தினர், மரத்தின் மீது கல் எறிந்து கொண்டிருந்தனர்.
கன்னியப்பனை கண்டதும் ஓடினர்.
அந்த மரத்தடியில் போய் நின்றான், குப்புசாமி.
பின், ''ஏனப்பா, இந்த மரத்தை சுற்றிலும் மட்டும் இத்தனை பசங்க கூடுறாங்க...'' என்று, அப்பாவிடம் கேட்டான்.
''மரம் நன்கு காய்க்கிறது... கொத்துக் கொத்தா மாம்பழங்கள். எங்கு சரக்கு இருக்கோ அங்குதான் போவாங்க. இதில் என்ன ஆச்சரியம். அந்த மரத்தை பார்... அது காய்க்காது. அந்த மரத்தின் பக்கம் யாரும் போவதில்லை. நண்பர்கள் கிடைப்பதும் இப்படித்தான்...'' என்றார், கன்னியப்பன்.
குப்புசாமிக்கு உண்மை உறைத்தது. சிறப்பாக படித்தால் தான், நண்பர்களும் கிடைப்பர் என்று புரிந்தது.
''அப்படியா அப்பா... நல்லா படித்து, நிறைய மார்க் வாங்கினா, எனக்கும் நிறைய சிநேகிதம் கிடைக்குமா...''
''நிச்சயமாக... எல்லாரும் தேடி வந்து, சிநேகிதமாக இருப்பாங்க...''
''நானும் நிறைய மார்க் வாங்கிக் காட்டுகிறேன்...'' என, உற்சாகத்தோடு சபதமேற்றான், குப்புசாமி. அதை நிறைவேற்றியும் காட்டினான்.
இப்போது, தன் நண்பர்களுடன் அமர்ந்து படிப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ளான், குப்புசாமி.
பட்டூஸ்... படிப்பு நட்பை தரும்; வாழ்வில் உயர்வை ஏற்படுத்தும்.
ரகுநாதன்
