sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு - ரவுலிங்கின் வெற்றி பாதை!

அதிமேதாவி அங்குராசு - ரவுலிங்கின் வெற்றி பாதை!

அதிமேதாவி அங்குராசு - ரவுலிங்கின் வெற்றி பாதை!


PUBLISHED ON : ஜன 06, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 06, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விதியை, கற்பனை திறத்தால் மாற்றியமைத்து மதியால் வென்றவர், பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங். சிறுவர், சிறுமியர் விரும்பும், 'ஹாரி பாட்டர்' கதை புத்தகங்களின் ஆசிரியர். உறுதியோடு போராடினால் முன்னேறலாம் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார். எந்த பின்புலமும் இன்றி, உலகை தன் பக்கம் திரும்ப வைத்துள்ளார்.

ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, யேட் நகரில் ஜூலை, 31, 1965ல் பிறந்தார். இயற்பெயர், ஜோன் ரவுலிங். இவரது பெற்றோர் பீட்டர் ஜேம்ஸ் ரவுலிங் - அன்னே.

குழந்தை பருவத்தில் புத்தகங்கள் வாசிப்பதில் நேரத்தை செலவிட்டார். ஆறு வயதில் முயலை மையப்படுத்தி ஒரு கதை எழுதினார். தொடர்ந்து, 11ம் வயதில், 'சபிக்கப்பட்ட வைரம்' என்ற கருவை உடைய நாவல் எழுதினார். இவற்றுக்காக தாயிடம் பாராட்டு பெற்றார்.

பள்ளி, பல்கலைக் கழக நுாலகங்களில் புத்தகங்கள் படித்து, மொழி, கற்பனை திறனை மேம்படுத்தினார். பட்டப் படிப்பை முடித்ததும், லண்டனில் குடியேறினார். சர்வதேச மனித உரிமை அமைப்பான, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தில் ஆராய்ச்சி பணி கிடைத்தது. அது நெகிழ்வு பண்பு, பணிவு, ஊக்கம், தீவிர செயல்பாடு என, பலவற்றை கற்றுக் கொடுத்தது. உலக அனுபவமும் பெற்றார்.

விழிப்புணர்வு இல்லாதவர்களை, இச்சமூகம் எப்படி நடத்துகிறது என்பதை நன்கு அறிந்தார், ரவுலிங்.

மனித நேயத்துடன் வாழக் கற்று, 'உலகின் சிந்தனைப் போக்கை மாற்ற மந்திரம் தேவையில்லை; உழைப்பும், கற்பனையும் போதுமானது' என உணர்ந்தார்.

அந்த நேரத்தில் நோயால் பாதிக்கப்பட்டார் அவரது தாய். அன்பு, அக்கறையுடன் கவனித்து கொண்டார் ரவுலிங். இந்த நிலையில், 1990ல் காலமானார் தாய். தாங்க முடியாத சோகத்தில் மன வலிமை இழந்தார். கடும் வேதனை வாட்ட, மான்செஸ்டர் நகரில் இருந்து லண்டனுக்கு வந்தார். மறக்க முடியாத பயண அனுபவமாக அது அமைந்தது.

கற்பனைத்திறன் தான் எல்லா புதுமைகளுக்கும் அடித்தளமாக இருக்கிறது என்பதை உணர்ந்தார். அது, வாழ்க்கையை புரட்டி போட்டது. அந்த பயணத்தில் தான், ஹாரி பாட்டர் கதைக்கான, கரு மனதில் உதித்தது. முதலில், சிந்தனையில் தோன்றிய கருத்தை குறிப்புகளாக எழுதினார். பின், பாத்திரங்களை மேம்படுத்தி நாவலாக வடிவமைத்தார்.

ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலில் ஆங்கில ஆசிரியர் பணி கிடைத்தது. அங்கு, ஜார்ஜ் அரான்டெஸ் என்பவரை திருமணம் செய்தார். ஜெசிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. சில மாதங்களிலே, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தார். மீண்டும் லண்டன், எடின்பர்க் நகருக்கு வந்து பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார்.

ஓய்வு நேரத்தில், எழுத்து பணியை தொடர்ந்தார். எழுதி முடித்த நாவலின் கையெழுத்து பிரதியை, பல பதிப்பாளர்களுக்கு அனுப்பினார். அதை பிரசுரிக்க மறுத்து, 'மாய, மந்திர கதைகளை மக்கள் விரும்பமாட்டார்கள்' என திருப்பி அனுப்பினர்.

அனைத்து கதவுகளும் மூடிவிட்டதாக எண்ணி தளர்ந்தார் ரவுலிங். ஆனாலும், தோல்வியை எதிர்த்து எழுந்து நிற்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். மீண்டும், பதிப்பகங்களை நாடினார். அதன் பயனாக, லண்டன் புளூம்ஸ்பரி என்ற பதிப்பகம் அந்த நாவலை வெளியிட முன் வந்தது.

தலைப்பில் சிறிய மாற்றம் செய்து, 'தத்துவஞானியின் கல்' என்ற பெயரில் முதல் புத்தகம் வெளியானது. அது, நெஸ்லே ஸ்மார்ட்டீஸ் புக், பிரிட்டிஷ் புக் போன்ற விருதுகளை வென்றது. அமெரிக்காவிலும் பிரபலமானது. தொடர்ந்து, அவர் எழுதிய ஆறு நாவல்கள் விற்பனையில் சாதனை படைத்தன. உலக அளவில் பெரும் புகழ் பெற்றார் ரவுலிங்.

அதன் தொடர்ச்சியாக, 2001ல் முதல் நாவலை திரைப்படமாக எடுக்க, வார்னர் புருஸ் என்ற நிறுவனம் உரிமை பெற்றது. பின், அனைத்து நாவல்களும் படமாக்கப்பட்டன.

எழுத்து பணியுடன் ஆதரவற்ற குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரசாரம் செய்து வருகிறார்.

எழுத்தில் உலக சாதனை படைத்த ரவுலிங் வாழ்க்கை, போராட்டங்கள் நிறைந்தது.

அவரது வாழ்வு, 'உலகில் எப்படி வளர போகிறீர் என்பதே முக்கியம்' என்ற பொன்மொழியை பாடமாக தந்து உற்சாக மூட்டுகிறது.

உறுதியான நம்பிக்கையுடன் உழைத்தால் நிச்சயம் சாதிக்கலாம்.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us