PUBLISHED ON : ஜன 06, 2024

பாலைவனம் என்ற பொருள் தரும், 'சஹ்ரா' என்ற அரபு மொழி வார்த்தையே, சஹாரா எனப்படுகிறது. இது, மிகப்பெரிய பாலைவனம். உலகில் அடர்ந்து விரிந்த மணல் திட்டுகளும், சுட்டெரிக்கும் வெயிலும் அதிகம் உள்ள பகுதி.
இந்த பாலைவனம், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், பச்சை பசேலென இருந்தது.
மனித வாழ்வும், பரிணாமமும் பிரிக்க முடியாதவை. பரிணாமத்தால் தான், சஹாரா பாலைவனம் உருவானதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்கா கண்டத்தில், 31 சதவீத நிலப்பரப்பை கொண்டுள்ளது. இன்னும், 15 ஆயிரம் ஆண்டுகளில் பசுமையாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள்.
ஆப்பிரிக்காவின் வட பகுதியில், 94 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவில் உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளான அல்ஜீரியா, சாட், எகிப்து, மேற்கு சகாரா, லிபியா, மாலி, முருட்டானியா, மொராக்கோ, நைஜர், சூடான், துனுசியாவில் விரிந்துள்ளது.
மொத்தப் பரப்பில், 30 சதவீதம் மணல் மூடி உள்ளது. சரளைக் கற்கள், 70 சதவீத இடத்தில் உள்ளன. வெப்பம் மிகுந்த பகுதியாக இருந்தாலும், 2 கோடி பேர் இங்கு வாழ்கின்றனர்.
இதில் நைல் நதி பாய்கிறது. மிகக் குறைந்த அளவில் மட்டுமே மழை பெய்கிறது.
பகலில் வெப்பம் வதைக்கும்; இரவில் குளிர் வீசும். மணல் புயல் காற்று மிகவும் ஆபத்தானது.
இங்கு, 2,800 வகை தாவரங்கள் வளர்கின்றன. இதில் புற்கள் தான் அதிகம்; 70 வகை விலங்கினங்கள் வசிக்கின்றன; அவற்றில், 20 பாலுாட்டி வகை. சிறுத்தை, மான், முயல், காட்டு ஆடு, காட்டு நாய், நரி, தீக்கோழியும் காணப்படுகின்றன.
சஹாராவில் செம்பு, இரும்பு உலோகத் தாதுகள் அதிகம் உள்ளன.
- மு.நாவம்மா
