
சென்னை, பெரம்பூர், ராவ் பகதுார் கலவல கண்ணன் செட்டி உயர்நிலைப் பள்ளியில், 1970ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தேன். ஆங்கில பாட ஆசிரியர் ராஜகோபால். ஆங்கிலம் வழியில் கற்கும் மாணவர்கள் மொழிப்புலமையில் தனித்துவமாக ஜொலிக்க வலியுறுத்துவார்.
ஆங்கில நாளிதழில் செய்தி படிப்பதை ஒவ்வொரு நாளும் உறுதி செய்வார்; வகுப்பில் அன்றாடம் ஒரு புது சொல்லை விளக்கி, வாக்கியத்தில் அமைத்து பேச வைப்பார்.
ஆங்கில நாளிதழ் வாங்கும் சூழல் என் குடும்பத்தில் அப்போது இல்லை. இரவல் வாங்கி மாலை நேரத்தில் தான் படிப்பேன். என் நிலையை எடுத்துக் கூறினேன். அதை புரிந்து, பள்ளி நுாலகத்தில் மதிய உணவு இடைவேளையில் செய்தித்தாள் படிக்க வசதி செய்தார். மாலை நேர வகுப்பில் பயிற்சிகள் மேற்கொள்ள வைத்தார்.
அத்துடன், 'பொதுத் தேர்வில் ஆங்கில பாடத்தில், 85 சதவீதத்துக்கும் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு கல்லுாரி புகுமுக வகுப்புக்கான புத்தகங்கள் வாங்கி தருகிறேன்...' என அறிவித்தார்.
அதன்படி, பயன் பெற்றோம். ஆங்கில மொழி மீது ஏற்படுத்திய பற்று குறையாமல் உள்ளது.
எனக்கு, 69 வயதாகிறது; வழக்கறிஞராக தொழில் செய்கிறேன். சைபர் பாதுகாப்பு மற்றும் குற்றவியல் பிரிவில் கவனம் செலுத்துகிறேன். கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளராகவும் உள்ளேன்.
ஒரு புதிய ஆங்கில சொல்லை கேட்டால், அந்த ஆசிரியர் முகம் நினைவுக்கு வருகிறது. அவரிடம் படித்த, 28 பேர் தொடர்பில் உள்ளோம். அடிக்கடி சந்தித்து நினைவை புதுப்பிக்கிறோம். கவனம் எடுத்து பிரத்யேக பயிற்சி தந்த அந்த ஆசிரியர் சமூகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு!
- வி.ராஜேந்திரன், சென்னை.
தொடர்புக்கு: 94440 73849