sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வேழமலைக்கோட்டை! (8)

வேழமலைக்கோட்டை! (8)

வேழமலைக்கோட்டை! (8)


PUBLISHED ON : ஏப் 20, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 20, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: வேழமலை நாட்டில் முடிசூட்டு விழா நடக்க இருந்த நிலையில் இளவரசர் மாயமானதாக தகவல் வந்தது. நாட்டின் எல்லை பகுதி காட்டில் எதிரி நடமாட்டத்தை முறியடிக்க நடந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. வீரர்கள் பலரை இழந்து, அரண்மனை திரும்பிய படை தளபதியிடம் விபரம் தெரிவித்தது. இனி -



கோபம், குழப்பம் கலந்த மனநிலையில் இருந்தார் தளபதி. படையை வழி நடத்திய மகேந்திரன் தந்த தகவல்களுடன் ஆலோசனை கூடத்திற்கு புறப்பட்டு வந்தார்.

அங்கு காத்திருந்தனர் அமைச்சரும், ராஜகுருவும்.

'தளபதி... உங்கள் அனுமானம் என்ன...' என்று கேட்டார் ராஜகுரு.

'காட்டில், படையுடன் இருக்கின்றனர் எதிரிகள். அவர்களின் படை, பலம் மிக்கது; இல்லையெனில், அவர்களால் இத்தனை பேரை சிறைப் பிடிக்க இயலாது...'

'முறையாக ஓலை அனுப்பாமல், போர் அறிவிப்பு செய்யாமல், இப்படி களம் இறங்கி இருப்பது நியாயம் அல்லவே...'

'நாம் முன் கூறியது போல் எதிரிகள், இங்கு இருந்தாலும், வியூகங்களை அமைப்பதற்கு உளவு வேளையில் மட்டுமே தற்சமயம் ஈடுபடுவர். உடனே, போர் தொடுக்க மாட்டர்...'

'அதனால் தான், எதிரிகள், கோட்டையின் வாசல் இருக்கும் கிழக்குப் பகுதியை விடுத்து, பக்கவாட்டின் தென்பகுதியில் முகாம் அமைத்துள்ளனர்... கோட்டையை தகர்க்க, முழு திட்டம் அமைந்தவுடன் போர் அறிவிப்பு செய்வர்...'

'இதற்கிடையில், நம் வீரர்கள், எதிரிகளை தேடி செல்வதால், கண்ணில் படுவோரை எல்லாம் சிறைப் பிடிக்கின்றனரா...'

'அப்படி தான் தோன்றுகிறது...'

'இப்போது என்ன செய்வது...'

'வேறு வழியில்லை. உடனே, போருக்கு ஆயத்தமாக வேண்டும். இல்லையெனில், நிலைமை கை மீறும்...'

'மன்னரின் ஆணை வேண்டுமே...'

'மன்னருக்கு, நாட்டின் நிலையை புரிய வைப்போம். அவர், நோய்வாய்ப்பட்டிருப்பதால், படையின் முழுக் கட்டுப்பாட்டை பெறுவோம்...'

'மக்கள் ஒப்புக்கொள்வரா...'

'மன்னரே இதை அறிவிக்குமாறு செய்ய வேண்டும்...'

'ஒவ்வொரு முறையும், சந்திக்கும் போது, இளவரசரை காண வேண்டும் என்கிறாரே மன்னர்...'

'இந்த சூழ்நிலையில், இளவரசர் எங்கு இருக்கிறார் என, வெளியில் தெரிந்தால், எதிரிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கூறி, அவரது வேண்டுகோளை மறுக்க வேண்டியது தான்...'

இப்படி ஆலோசனை கூறினாலும், அமைச்சரிடம் உள்ளூர ஒரு சோர்வு இருந்தது.

'அதிகாரத்தை கைப்பற்றி ஆனந்தமாய் இருக்கலாம் என நினைத்தால், போரை எதிர்கொள்ளும் சூழ்நிலை வந்து விட்டதே' என நினைத்தார் அமைச்சர்.

'நிம்மதியாய் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்காமல், வியூகங்கள் அமைத்து, போர் நடத்துவதில் காலம் கடக்கிறதே' என போர் நடத்துவதில் உள்ள சிரமங்களை நினைத்து கவலைப்பட்டார் தளபதி.

'போர் தொடுக்க ஆயத்தமாகி கொண்டிருப்பது எந்த நாடு என தெரிந்தால், அவர்களுடன் சமாதான பேச்சு நடத்தி போரை தவிர்த்து விடலாம். ஆனால், படையை களமிறக்கி இருப்பது யார் என்பதே தெரியவில்லையே' என்று குழம்பினார் ராஜகுரு.

இப்படி மூவரின் மனநிலையும் இருக்க, மன்னரை சந்திக்க சென்றனர்.

மிகுந்த சோர்வுடன் படுத்திருந்தார் மன்னர். இவர்களை கண்டதும், வழக்கம் போல, 'இளவரசர் எப்படி இருக்கிறார்...' என்று விசாரித்தார்.

'அவருக்கென்ன நலமுடன் இருக்கிறார். நாட்டின் வாரிசை, நாங்கள் எவ்வித சிரமத்திற்கும் உள்ளாக்க மாட்டோம்...' என்றார் அமைச்சர்.

'ராஜகுருவின் முகத்தில், கவலை சூழ்ந்து இருப்பது போல தெரிகிறது...'

'ஆம் மன்னா... நடக்கிற நிகழ்வுகள், மகிழ்ச்சிக்குரியதாக இல்லை...'

ராஜகுரு கூறியதும், மன்னர் முகத்தில் குழப்பம் தெரிந்தது.

'ஏன்... என்ன நடக்கிறது...'

'காட்டில், எதிரிகளை தேடி சென்ற வீரர்களில் சிலரை, எதிரிகள் சிறைப் பிடித்துள்ளனர்...'

'நம்முடைய காட்டில், நம் வீரர்களையே எதிரிகள் சிறைப் பிடித்தனர் என்பது அவமானம் தர கூடிய விஷயம்...'

கோபம் கலந்த குரலில் கூறினார் மன்னர்.

'இளவரசரை விடுவித்து, போருக்கு அனுப்புங்கள்; நான், வியூகங்களை வகுக்கிறேன்; எதிரி படையை சிதறடிப்போம்...'

'மன்னா... சிறுவனாக இருக்கும் இளவரசர் போர்களம் சென்றால், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்...'

'நாட்டை பகைவரிடம் இழப்பதை விட, வீரமரணம் எவ்வளவோ மேல்; நீங்கள், நிர்வாகம் செய்தது போதும். நாட்டை காப்பது தான் முக்கியம்...'

'கவலைப்படாதீர். எதிரிகளை விரட்டியடிக்க, அமைச்சர் ஆலோசனை தருவார். ராஜகுரு நிர்வாகம் செய்வார்; நான், வீரர்களை ஒருங்கிணைத்து சென்று, போர் புரிந்து வெற்றி வாகை சூடி வருவேன்...' என்றார் தளபதி.

'எத்தனை வீரர்கள், சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர்...'

'நம்முடைய படையில், 11 வீரர்கள்...'

'இதிலிருந்தே தெரிகிறது; எதிரிகள், நம்மை விடவும் பலமிக்கவர்கள்...'

'அதனால் தான் ஆயுதப் பயிற்சி பெற்ற இளைஞர்கள், பொதுமக்களை ஒன்று திரட்டி, புது படைப்பிரிவை உருவாக்க போகிறோம்...'

'என்ன செய்வீர்களோ... எதிரிகளை முதலில் விரட்டுங்கள்...'

'மன்னா... நாட்டில், போர் எச்சரிக்கை பிரகடனம் செய்ய வேண்டும்; அதற்கு, உங்களிடமிருந்து முறைப்படியான முத்திரையிட்ட அனுமதிக் கடிதம் வேண்டும்...'

'ஏதாவது சிறு தவறு நேர்ந்தாலும், நாட்டையே இழக்க நேரிடும்...'

'மன்னா... அப்படி எதுவும் ஆகாது; எங்களுக்கும் நாடு முக்கியம்...' என்றார் ராஜகுரு.

'நீங்கள், பிரகடன கடிதத்தை கொடுங்கள்; நாங்கள், இளவரசரை பார்த்துக் கொள்கிறோம்...' என்றார் அமைச்சர்.

குரலில், மறைமுக மிரட்டல் இருந்ததால், அரைகுறை மனதுடன் அந்த ஏற்பாட்டுக்கு தலையசைத்தார் மன்னர்.



- தொடரும்...

ஜே.டி.ஆர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us