PUBLISHED ON : ஜூலை 31, 2015

முன்னொரு காலத்தில் பவள நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவருக்கு முட்டாளான வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
அந்த அரசருக்கு இசையில் ஈடுபாடு இருந்தது. முத்துக்களும், வைரங்களும், மரகதமும் பதிக்கப் பெற்ற விலை உயர்ந்த வீணை ஒன்றை வைத்திருந்தார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அந்த வீணையை மீட்டிப் பயிற்சி செய்தார்.
ஒருநாள்-
வீணையை எடுத்த அவர் சுருதி கூட்டுவதற்காகத் தந்திகளைத் தட்டினார். பிறகு, முறுக்காணியைப் பிடித்துப் பல தடவை முறுக்கிச் சீர் செய்தார்.
பக்கத்திலிருந்த வேலைக்காரன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். வீணையைப் பற்றியோ, சுருதி கூட்டுவது பற்றியோ அவனுக்கு ஏதும் தெரியாது.
'அரசர் அந்த வீணையை உடைக்க முயற்சி செய்கிறார்; அவரால் முடியவில்லை' என்று நினைத்தான்.
அப்போது வீணையை வைத்துவிட்டு ஏதோ வேலையாக அரசர் உள்ளே சென்றார்.
உடனே வேலைக்காரன் அந்த வீணையைக் கையில் எடுத்தான். அரசர் அதனை அறுப்பதற்கு மிகவும் கஷ்டப்படுவதாக நினைத்தான். தன் வலிமை எல்லாம் காட்டி அந்த முறுக்காணியை முறுக்கினான்.
அவ்வளவுதான் முறுக்காணி உடைந்தது. மென்மையான அந்த வீணை கீழே விழுந்து பல துண்டுகள் ஆயிற்று.
அங்கு வந்த அரசர் வீணை நொறுங்கிக் கிடப்பதைக் கண்டு திகைத்தார். வேலைக்காரன்தான் உடைத்திருக்க வேண்டும் என்று நினைத்தார்.
'பல துண்டுகளாகும்படி இதை எப்படி உடைத்தாய்?'' என்று கோபத்துடன் கேட்டார்.
அரசர் தன்னைப் பாராட்டுவதாக நினைத்தான் வேலைக்காரன்.
'அரசே! நீங்கள் போட்ட உணவின் வலிமைதான் வீணை பல துண்டுகளாகும்படி ஒரே அடியில் உடைக்க முடிந்தது,'' என்று பெருமையுடன் சொன்னான்.
'முட்டாள் என்று அறியாமல் இவனை வேலைக்கு வைத்தேனே... எனக்கு இந்த இழப்புத் தேவைதான்,' என்று வருந்தினார் அரசர்.
***
