sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/புத்திசாலி!

புத்திசாலி!

புத்திசாலி!


PUBLISHED ON : பிப் 01, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 01, 2013


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வங்க நாட்டுச் சிற்றூரில் பாண்டு என்பவன் இருந்தான். அறிவுக்கூர்மையில் சிறந்து விளங்கிய அவன், தன் பரம்பரைத் தொழிலான முடிதிருத்தும் தொழிலைச் செய்து வந்தான். அந்த ஊரில் யாருக்கு எந்தச் சிக்கல் ஏற்பட்டாலும், தன் அறிவுக் கூர்மையால் அவர்களின் சிக்கலைத் தீர்த்து வைப்பான். இதனால், அவன் புகழ் எங்கும் பரவியது. பல ஊர்களிலிருந்து அவனைத் தேடி நிறைய பேர் வந்தனர். அவனும் அவர்களுக்கு நல்ல வழி காட்டினான்.

அரசர் கிருஷ்ண சந்திரரும் பாண்டுவைப் பற்றி கேள்விப்பட்டார். 'எல்லோரும் அவனைப் புகழ்ந்து பேசுகின்றனர். அவர்கள் பேசுவது போல உண்மையிலேயே அவன் அறிவு உடையவனா? சோதித்துப் பார்க்க வேண்டும்' என்று நினைத்தார்.

வழக்கம் போல அரசவை கூடியிருந்தது. அரியணையில் வீற்றிருந்தார் அரசர்.

மக்கள் சிலர் கூட்டமாக வந்து அரசரை வணங்கினர்.

''உங்களுக்கு என்ன குறை? எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்,'' என்று கேட்டார் அரசர்.

''அரசர் பெருமானே! உங்களிடம் நாங்கள் முன்னரே இரண்டு முறை முறையிட்டுவிட்டோம். இந்த நகரத்தில் செல்வந்தன் ஒருவன் இருக்கிறான். செலவு செய்ய அவனுக்கு உள்ளமே வராது. எல்லாரையும் ஏமாற்றுவதே அவன் வேலையாக உள்ளது. உணவு விடுதிக்கு வருவான். வயிறு முட்டச் சாப்பிடுவான். கடைசி உருண்டை உணவை வாயில் போட்டுக் கீழே துப்புவான். 'உணவா இது? வாயில் வைக்கவே சகிக்கவில்லை. இதற்கு யார் பணம் தருவர்? நான் தர மாட்டேன்!' என்று கோபத்துடன் கத்திவிட்டுச் சென்று விடுவான்.

இதே போல, மளிகைக் கடைக்குப் போவான், காய்கறிக் கடைக்குப் போவான். அங்கும் அடாவடி செய்வான். அவன் தொல்லையை எங்களால் தாங்க முடியவில்லை. நீங்கள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்,'' என்று வேண்டினர்.

''நீங்கள் முன்னரே இப்படி என்னிடம் முறையிட்டீர்கள். நான் அவனை இங்கே அழைத்து விசாரித்தேன்.

என்னிடம் அவன், 'நான் பெருஞ்செல்வன். நல்ல உணவு போட்டிருந்தால் நான் ஏன் பணம் தர மறுக்கப் போகிறேன்? மளிகைக் கடையிலும் நல்ல பொருள் விற்பது இல்லை. காய்கறிக் கடையும் அப்படித்தான்' என்றான்.

''உங்கள் மீது அவன் குற்றம் சுமத்துகிறான். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. விரைவில் இதற்குத் தீர்வு காண்கிறேன். போய் வாருங்கள்,'' என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

'இந்தச் சிக்கலை எப்படித் தீர்ப்பது' என்று சிந்தித்தபடியே இருந்தார். அப்போது அவருக்கு பாண்டுவின் நினைவு வந்தது.

மறுநாள் காலை, பாண்டுவை அரசவைக்கு வரவழைத்தார்.

''பாண்டு! உன் அறிவுக்கூர்மையைப் பலரும் புகழ்ந்து பேசக் கேட்டேன். நான் உனக்கு ஒரு சோதனை வைக்கப் போகிறேன். நீ அதில் வெற்றி பெற்றால் இங்கேயே என் உதவியாளனாக இருக்கலாம்; வளமாக வாழலாம். என்ன சொல்கிறாய்?'' என்றார் அரசர்.

''அரசர் பெருமானே! என்ன சோதனை? சொல்லுங்கள்,'' என்று கேட்டான்.

''இந்த நகரத்தில் செல்வந்தன் ஒருவன் இருக்கிறான். அவன் மக்களை எல்லாம் திறமையாக ஏமாற்றி வருகிறான். என்னால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. இனிமேல் அவன் யாரையும் ஏமாற்றக் கூடாது; ஏமாற்ற நினைக்கவும் கூடாது. அப்படிப்பட்ட நல்ல பாடத்தை நீ அவனுக்குச் சொல்லி தர வேண்டும். உன்னால் முடியுமா?'' என்று கேட்டார்.

''அரசே! எளிய சோதனைதான். என் திறமையைப் பாருங்கள்,'' என்ற அவன் அங்கிருந்து புறப்பட்டான்.

அடுத்த நாளே அவன் தன் முடிதிருத்தும் பெட்டியை எடுத்துக் கொண்டான். அந்தச் செல்வந்தன் வீட்டை நெருங்கினான். அப்போது அந்தச் செல்வந்தன் திண்ணையில் அமர்ந்திருந்தான்.

''ஐயா! உங்களுக்கு முடி வெட்ட வேண்டுமா? அழகாக வெட்டி விடுவேன்,'' என்றார்.

'நம்மிடம் ஏமாறுவதற்கு வெளியூரில் இருந்து வந்திருக்கிறான். இவனிடம் முடி வெட்டிக் கொள்ள வேண்டும். கூலி ஏதும் தரக் கூடாது' என்று நினைத்தான் செல்வந்தன்.

''நான் சொல்வது போல உன்னால் எனக்கு முடி வெட்ட முடியாது,'' என்றான்.

''நீங்கள் எப்படிச் சொல்கிறீர்களோ அப்படியே முடி வெட்டி விடுகிறேன். என் திறமையை நீங்கள் பாராட்டத்தான் போகிறீர்,'' என்றான் பாண்டு.

''உன் திறமையை நீயே மெச்சிக் கொள்கிறாய். நான் சொல்வது போல யாராலும் முடி வெட்ட முடியாது. உன்னால் மட்டும் எப்படி முடியும்?'' என்றான் செல்வந்தன்.

''உங்களுக்கு எப்படி முடி வெட்ட வேண்டும்? அதைச் சொல்லுங்கள்,'' என்றான்.

''நீ எனக்கு முடி வெட்ட வேண்டும். முடி வெட்டிய பிறகு என் தலையைப் பார்ப்பேன். அதில் உள்ள எல்லா முடிகளும் ஒரே அளவாக இருக்க வேண்டும். எந்த முடியும், நீளமாகவும் இருக்கக் கூடாது. குட்டையாகவும் இருக்கக் கூடாது. உன்னால் முடியுமா?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டான் செல்வந்தன்.

''ஐயா! என் திறமைக்குச் சவாலானதைத்தான் சொன்னீர்கள். நான் அப்படி உங்களுக்கு முடி வெட்டி விட்டால் எனக்கு என்ன தருவீர்கள்?'' என்று கேட்டார்.

அப்படி யாராலும் முடி வெட்ட முடியாது. இவன் தோற்கத்தான் போகிறான் என்று உறுதியாக நினைத்தான் செல்வந்தன்.

''நீ அப்படி முடி வெட்டி விட்டால் உனக்கு நூறு பணம் தருகிறேன்,'' என்றான்.

அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டான்.

செல்வந்தனைத் திண்ணையில் அமர வைத்தான். முடிதிருத்தும் பெட்டியைத் திறந்தான். செல்வந்தனுடைய தலையில் மெல்லத் தட்டினார். அப்படியே தடவியும் கொடுத்தான்.

அவன் செய்தது இதமாக இருந்ததால், செல்வந்தனுக்கு தூக்கம் வந்தது. அப்படியே தூங்கி விட்டான். விழிப்பு வந்த செல்வந்தன் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தான். அவன் தலை முழுவதும் மழுங்க மொட்டை அடிக்கப்பட்டு இருந்தது.

''டேய்! முட்டாளே! என்ன வேலை செய்து விட்டாய்,'' என்று அலறினான்.

''நீங்கள் எப்படி முடி வெட்டச் சொன்னீர்களோ அப்படித்தான் முடி வெட்டி உள்ளேன். உங்கள் தலையில் உள்ள முடி அனைத்தும் ஒரே அளவாக இருக்க வேண்டும் என்றீர். இப்படி மொட்டை அடித்தால்தான் தலையில் உள்ள முடி அனைத்தும் ஒரே அளவாக இருக்கும். அதனால் தான் உங்களுக்கு மொட்டை அடித்தேன். சொன்னபடி நூறு பணம் தாருங்கள். இல்லையேல், என்னை ஏமாற்ற முயன்றதாக அரசரிடம் முறையிடுவேன்,'' என்றான் பாண்டு.

பாவம் என்ன செய்வான் அந்தச் செல்வந்தன், வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது அவனுக்குப் புரிந்தது.

நூறு பணத்தை பாண்டுவிடம் தந்தான்.

மொட்டை அடித்ததற்கு அந்தச் செல்வந்தன் நூறு பணம் தந்தது நகரம் எங்கும் பரவியது. எல்லாரும் அவனைக் கேலி செய்து சிரித்தனர். அவனால் வெளியே தலை காட்ட முடியவில்லை.

நடந்ததை அறிந்த அரசர், பாண்டுவை பாராட்டினார். அவனைத் தன் உதவியாளராக அரண்மனையில் வைத்துக் கொண்டார்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us