தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மகனே!

மகனே!

மகனே!


PUBLISHED ON : அக் 12, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 12, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காவிரி நகரில், பெருஞ்செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருடைய முதுமைக் காலத்தில் அவருக்கு ஒரு மகன் பிறந்தான். மகனுக்கு மாணிக்கம் என்று பெயர் வைத்தார்.

அவன் ஜாதகத்தைக் கணித்த சோதிடர்கள், ''இவன் பத்து வயது வரை உங்களுடன் இருக்கலாம். பிறகு உங்களைப் பிரிந்து பத்தாண்டுகள் இருக்க வேண்டும். அப்போதும் நீங்கள் இருவரும், ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்க்க நேர்ந்தால் இருவருக்குமே கெடுதி ஏற்படும்,'' என்றனர்.

மாணிக்கத்திற்குப் பத்து வயது தொடங்கியது.

''மகனே! நீயும், நானும் பத்தாண்டுகள் பிரிந்து இருக்க வேண்டும். உன்னைக் காசி மாநகருக்கு அனுப்பி வைக்கிறேன். அங்கே எல்லாக் கலைகளையும் கற்றுக் கொள். சிறந்த அறிஞனாகத் திரும்பி வா,'' என்றார்.

அவனும் காசிக்குப் புறப்பட்டான். அவனுக்குத் துணையாகச் சிலர் வந்தனர்.

காசியை அடைந்தான். அங்கே கலைகள் பலவற்றை ஆர்வத்துடன் கற்றுக் கொண்டான். வில் போர், வாள் போரிலும் தேர்ச்சி பெற்றான்.

ஆண்டுகள் பல சென்றன-

அங்கே மாணிக்கத்தின் தந்தை கடுமையான நோயில் விழுந்தார். உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. நகரத்து நீதிபதியைத் தன் மாளிகைக்கு வரவழைத்தார்.

'' என் ஒரே மகன் காசி மாநகரத்தில் கல்வி கற்று வருகிறான். அவன் இங்கிருந்து சென்று ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. என் சொத்துகள் அனைத்தும் அவனுக்கே சேர வேண்டும். அவன் இங்கே வரும் வரை என் சொத்துக்களை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அவன் வந்ததும், அவனிடம் ஒப்படையுங்கள்,'' என்று நீதிபதியிடம் வேண்டினார் மாணிக்கத்தின் தந்தை.

நீதிபதியும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

அடுத்த வாரமே, அவர் மூச்சு நின்றது.

அவரின் சொத்துக்களை மாணிக்கத்திடம் ஒப்படைக்க நினைத்தார் நீதிபதி.

'<உங்கள் தந்தை இறைவனடி சேர்ந்து விட்டார். அவருடைய சொத்துக்களை நகரத்து நீதிபதியாகிய நான் கவனித்துக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் வந்தால் உங்களிடம் ஒப்படைத்து விடுவேன். விரைவில் வரவும்' என்று மாணிக்கத்திற்கு கடிதம் எழுதினார்.

காசிக்குச் செல்லும் ஒருவரிடம், அந்த கடிதத்தைக் கொடுத்து, ''இதை எப்படியாவது மாணிக்கத்திடம் சேர்த்து விடுங்கள்,'' என்றார்.

பல நாட்கள் பயணம் செய்த அவர் மாணிக்கத்தைச் சந்தித்து, கடிதத்தைத் தந்தார்.

கடிதத்தைப் படித்த அவன், '' ஐயோ! அப்பா! என்னைவிட்டுப் போய் விட்டீர்களா?'' என்று கதறி அழுதான்.

ஒருவாறு உள்ளம் தேறிய அவன் பல நாட்கள் பயணம் செய்தான். காவிரி நகரை அடைய இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று நினைத்தான். மாலை நேரம் வந்தது. களைப்புடன் இருந்த அவன், சத்திரம் ஒன்றில் தங்கினான்.

அவனைப் போலவே, ரங்கன் என்ற இளைஞனும் அங்கே தங்கி இருந்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டனர். அவனும் வாள் போரிலும், வில் போரிலும் வல்லவன் என்பதை அறிந்தான் மாணிக்கம்.

அவனுடன் இனிமையாகப் பேசத் தொடங்கினான்.

''நீ யார்? எங்கே செல்கிறாய்?'' என்று விசாரித்தான் ரங்கன்.

''காவிரி நகரிலேயே பெருஞ்செல்வந்தர் என் தந்தை. அரசருக்கு இணையான செல்வம் எங்களிடம் உள்ளது. நான் சிறுவனாக இருந்தே போதே தந்தையைப் பிரிந்து கல்வி கற்க காசி சென்று விட்டேன். ஒன்பது ஆண்டுகளாகக் காசி நகரத்தில் இருந்தேன். காவிரி நகர நீதிபதியிடம் இருந்து, எனக்கு ஒரு கடிதம் வந்தது.

அதில், என் தந்தை இறந்துவிட்டார். என் சொத்துக்கள் அனைத்தும் அவர் பொறுப்பில் உள்ளன. விரைவில் வந்து பெற்றுக் கொள்ளவும் என்று இருந்தது. என் தந்தையின் திரண்ட சொத்துக்களைப் பெறவே காவிரி நகர் செல்கிறேன்.

இதில் வியப்பு என்ன வென்றால், அந்த நீதிபதி என்னைப் பார்த்தது இல்லை. அந்த நகரத்தில் உள்ள யாருக்கும் என்னை அடையாளம் தெரியாது. இந்தக் கடிதம்தான் நான் மாணிக்கம் என்பதற்கு அடையாளம். இது இல்லாவிட்டால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது,'' என்று தன்னைப் பற்றி விரிவாகச் சொன்னான் மாணிக்கம்.

வஞ்சகனான ரங்கன், மாணிக்கத்தின் சொத்துக்களைத் தானே பெற வேண்டும் என்று நினைத்தான். மாணிக்கத்தின் குடும்ப விவரங்களைப் பற்றி மேலும் விசாரித்துத் தெரிந்துக் கொண்டான்.

இனிமேல் தன்னை மாணிக்கம் என்று நம்ப வைக்க முடியும் என்று நினைத்தான்.

''நாளை நாம் பயணம் செய்ய வேண்டும். இப்படியே பேசிக் கொண்டிருந்தால் பொழுது விடிந்து விடும். நாம் தூங்குவோம்,'' என்றான் ரங்கன்.

இருவரும் தூங்கத் தொடங்கினர்.

நள்ளிரவில் எழுந்த ரங்கன், மாணிக்கத்திடம் இருந்த கடிதத்தை எடுத்துக் கொண்டான். மாணிக்கத்தின் குதிரையில் அமர்ந்தான். யாரும் அறியாமல் அங்கிருந்து புறப்பட்டான்.

ˆபடிழுது விடிந்தது. கண் விழித்த மாணிக்கம் நண்பன் ரங்கனை தேடினான். தன் கடிதமும், குதிரையும் இல்லாததை அறிந்து திகைத்தான். என்ன நடந்து இருக்கும் என்பது அவனுக்குப் புரிந்தது.

'என்னைப் பற்றிய எல்லா உண்மைகளையும் அவனிடம் சொன்னது தப்பாகி விட்டதே... கடிதத்துடன் அங்கே சென்று என் தந்தையின் சொத்துக்களை எல்லாம் பெற்று இருப்பானே. எப்படியாவது அதைத் தடுக்க வேண்டும்' என்று நினைத்தான்.

குதிரை இல்லாததால் காவிரி நகரத்தை நோக்கி வேகமாக நடந்தான்.

அங்கே காவிரி நகரத்தை அடைந்த ரங்கன் நீதிபதியிடம் சென்றான்.

அவரை வணங்கிய அவன், கடிதத்தை அவரிடம் தந்தான்.

''கடிதத்தை பார்த்த நீதிபதி, உன் சொத்துக்களை எல்லாம் கணக்கு எடுத்து, இரண்டு நாட்களில் ஒப்படைக்கிறேன்,'' என்றார்.

இரண்டு நாட்கள் சென்றன-

சொத்துக்களை அவனிடம் ஒப்படைக்க தயாரானார் நீதிபதி.

அப்போது புழுதி படிந்த தோற்றத்தோடு, மாணிக்கம் அங்கே வந்தான்.

''நீதிபதி அவர்களே! நான்தான் அவரின் ஒரே மகன். நண்பனைப் போல நடித்து இவன் என்னை ஏமாற்றி விட்டான். நீங்கள் எனக்கு அனுப்பிய கடிதத்தைப் திருடி வந்துள்ளான். இவன் குதிரை என் குதிரைதான். இவனிடம் என் தந்தையின் சொத்துக்களை ஒப்படைக்காதீர்கள்,'' என்றான் மாணிக்கம்.

''இவன் என்னுடன் சத்திரத்தில் தங்கி இருந்தான். என்னைப் பற்றி இவனிடம் சொன்னேன். இந்தச் சொத்துக்களை அடைய பொய் சொல்கிறான். இவன் பேச்சை நம்பாதீர்கள்,'' என்றான் ரங்கன்.

இருவருமே அவரின் மகன் என்கின்றனர். இவர்களை அறிந்தவர்கள் யாரும் இங்கே இல்லை. இவர்களில் யார் செல்வந்தரின் மகன்? உண்மையை எப்படி அறிவது என்று சிந்தித்தார் நீதிபதி.

நல்ல வழி ஒன்று அவருக்குத் தோன்றியது.

''நீங்கள் இருவருமே குறி பார்த்து அம்பு எய்வதில் வல்லவர் என்கிறீர்கள். யார் சிறப்பாக அம்பு எய்கிறீர்களோ, அவரே இந்தச் சொத்துக்களுக்கு உரிமையாளர்,'' என்றார்.

இதைக் கேட்ட இருவருமே, ''நாங்கள் போட்டிக்கு ஒப்புக் கொள்கிறோம்,'' என்றனர்.

தன் வேலையாளை அழைத்த அவர், ''இந்த இரண்டு ஓவியங்களையும் இரண்டு மரங்களில் மாட்டுங்கள்,'' என்றார்.

அவர்களும் அப்படியே மாட்டினர்.

ரங்கனையும், மாணிக்கத்தையும் பார்த்து, ''நீங்கள் இருவரும் அந்த ஓவியத்தின் முகத்திற்குக் குறி பார்த்து, அம்பு எய்ய வேண்டும். வெற்றி பெறுவர்களுக்கு சொத்து உரியது,'' என்றார்.

ரங்கன் அந்த ஓவியத்தின் முகத்திற்குக் குறி பார்த்து அம்பு எய்தான். அவன் குறி சிறிதும் தவறவில்லை.

எப்படி என் திறமை என்பது போலப் பெருமிதத்துடன் நீதிபதியைப் பார்த்தான் ரங்கன்.

ஆனால், மாணிக்கமோ வில்லில் அம்பு பூட்டவில்லை. அவன் கையில் இருந்த வில்லும், அம்புகளும் நழுவிக் கீழே விழுந்தன. கண்களில் கண்ணீர் வழிய நின்றான்.

இதைப் பார்த்த நீதிபதி, ''உனக்குக் குறி பார்த்து அம்பு எய்யத் தெரியாதா? வில் போரில் வல்லவன் என்று சொன்னாயே...'' என்று கேட்டார்.

''எந்த மகனாவது தந்தையின் முகத்தில் அம்பு எய்வானா? அந்த ஓவியம் என் தந்தையின் ஓவியம் அல்லவா?'' என்று கதறி அழுதான் மாணிக்கம்.

இதைக் கேட்ட ரங்கன், தன் குட்டு வெளிப்பட்டு விட்டதே... என்று கலங்கினான்.

''உண்மையை அறிவதற்காகவே, இப்படி ஒரு போட்டி வைத்தேன். செல்வந்தரின் உண்மையான மகனைக் கண்டுபிடித்து விட்டேன். மாணிக்கம், நீதான் அவரின் உண்மையான மகன். உன்னிடம் சொத்துக்களை ஒப்படைக்கிறேன். ஏமாற்ற முயன்றதற்காக, இவனுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கிறேன்,'' என்றார் நீதிபதி.

மாணிக்கம் அவருக்கு நன்றி கூறினான்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us