PUBLISHED ON : டிச 21, 2019

சிறையிலிருந்து விடுதலையான திருடன், தவறுகளை உணர்ந்து திருந்தி வாழ முடிவு செய்தான்.
முதலில், தலைமுடியை வெட்டி, முகச்சவரம் செய்தான். குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனை வழிப்பட்டான். வேலை தேட முடிவெடுத்தான்.
சாலை ஓரத்தில், அரிசி கடை ஒன்றை கண்டான். அது பரபரப்பாக காணப்பட்டது. மெல்ல அங்கு நுழைந்தான்.
கடை முதலாளிக்கு வணக்கம் தெரிவித்து, 'ஐயா... வேலைக் கேட்டு வந்துள்ளேன்; எந்த வேலையைக் கொடுத்தாலும், சிறப்பாக செய்து முடிப்பேன்...' என்று பணிவுடன் கூறினான்.
அவனை ஏற இறங்கப் பார்த்த முதலாளி, 'நன்றாக வேலை செய்வாய் என்று தான் தெரிகிறது; இதற்கு முன், என்ன வேலை செய்தாய்... எங்கு இருந்தாய்...' என்றார்.
'ஐயா... நான் சிறை தண்டனை பெற்று விடுதலையாகி, புதிய மனிதனாக பிழைக்க வந்துள்ளேன். முன்பு, திருடனாக இருந்தேன். அதற்கான தண்டனைக்குப் பின், திருந்தி விட்டேன்... உழைத்து வாழ ஆசைப்படுகிறேன்...' என்று கூறினான்.
முதலாளி யோசனை செய்தபடி, 'நீ திருந்திய நிலையில் வந்துள்ளாய்... நிச்சயமாக உனக்கு வேலை உண்டு; இங்கேயே தங்கிக் கொள்ளலாம். எல்லா வசதிகளும் செய்து தரப்படும்...' என்றார்.
பணிவோடு அவரை வணங்கி, 'எனக்கு வேலை கொடுக்க முன்வந்துள்ள உங்கள் நல்ல மனதுக்கு நன்றி...' என்றான்.
'திருந்தியவர்களுக்கு வாழ்வு கொடுப்பதும், ஒரு வகை தொண்டு. நீ உண்மையை கூறினாய். அது எனக்கு பிடித்திருந்தது...' என்று, மனநிறைவுடன் கூறினார்.
அரும்புகளே... எப்பவும் உண்மை பேச பழகுங்கள். அது உயர்வை தரும்.
பதிப்பகம்: சுந்தர் நிலையம்
