PUBLISHED ON : ஏப் 23, 2022

மனவலிமையால் சாதனைகள் புரிந்து, உலகில் புகழ்பெற்ற சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களின் தொகுப்பு தொடர்...
ராக்பெல்லருக்கு அறிவுரை!
அமெரிக்கா, சிகாகோ நகருக்கு சென்றார், சுவாமி விவேகானந்தர். அவரை சந்திக்க விரும்பி, தங்கியிருந்த வீட்டுக்கு சென்றார் பிரபல தொழிலதிபர் ராக்பெல்லர். பணியிலிருந்த காவலரை பிடித்து தள்ளி, முன் அனுமதி பெறாமல் அறைக்குள் நுழைந்தார்.
அப்போது, ஏதோ எழுதி கொண்டிருந்தார் விவேகானந்தர்.
வந்தது யார் என்பதை கவனிக்கவில்லை.
ராக்பெல்லருக்கு மட்டுமே தெரிந்திருந்த கடந்த கால நிகழ்வுகளை திடீர் என கூற ஆரம்பித்தார் விவேகானந்தர். இறுதியில், 'உங்களிடம் இருக்கும் பணம் உண்மையில் உங்களுடையது இல்லை; உலகிற்கு நன்மை செய்ய இறைவன் கொடுத்து வைத்திருக்கிறார். அதன்படி செலவு செய்யுங்கள்...' என்று அறிவுரைத்தார்.
இது, ராக்பெல்லருக்கு பிடிக்கவில்லை.
பணக்கார திமிரில், 'நான் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்னொருவர் முடிவு செய்வதா' என எண்ணியபடி வெளியேறினார்.
விவேகானந்தரின் ஆன்மிக சக்தி, ராக்பெல்லரிடம் வேலை செய்தது.
ஒரு வாரத்திற்குப் பின், பொது தொண்டுக்காக, பெரும் தொகையை நன்கொடையாக அளிக்க முடிவு செய்தார் ராக்பெல்லர்.
அதற்கு ஒரு திட்டத்தை விரிவாக எழுதி, விவேகானந்தரை சந்திக்க சென்றார்.
முன் போலவே, முன் அனுமதியின்றி அறைக்குள் நுழைந்தார்.
அன்றும் ஏதோ படித்து கொண்டிருந்தார் விவேகானந்தர்.
ராக்பெல்லர், 'இதோ, இதை படித்து பாருங்கள்... இப்போது உங்களுக்கு திருப்தி தானே! நீங்கள் தான் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்...' என்றார்.
விவேகானந்தர் அசையவும் இல்லை; ராக்பெல்லரை பார்க்கவும் இல்லை. காகிதத்தில் ராக்பெல்லர் எழுதி வந்திருந்ததை எழுத்து பிசகாமல் கூறினார். அதை கேட்டதும், அதிர்ந்து விட்டார் ராக்பெல்லர்.
அதுதான் ராக்பெல்லர் அளித்த முதல் பெரிய நன்கொடை. அவரது செல்வத்தை மக்களுக்குப் பயன்படும் வகையில், செலவு செய்ய வழிகாட்டினார், விவேகானந்தர்.
இளைஞர்களின் சோதனை!
அமெரிக்காவில், 'இறைவனை அனுபூதியில் உணர்ந்த நிலை' என்ற தலைப்பில், ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார், சுவாமி விவேகானந்தர்.
அதில், 'இறைவனை பற்றிய உயர்ந்த அனுபவத்தை நேரடியாக பெற்ற ஒருவர், எந்தச் சூழ்நிலையிலும் கலங்குவதில்லை;- பதற்றப்படுவதில்லை...' என்று குறிப்பிட்டார்.
சொற்பொழிவை இளைஞர்கள் சிலரும் கேட்டனர்; உயர்கல்வி கற்றிருந்த அவர்கள் மனம் போனபடி வாழ்ந்திருந்தனர். விவேகானந்தரை பரிசோதித்து பார்க்க முடிவு செய்தனர்.
ஒரு சொற்பொழிவு நிகழ்த்த வரவேண்டும் என அழைத்தனர். தயக்கமின்றி அவர்களுடன் சென்றார் விவேகானந்தர். வழியில் ஒரு மரத்தொட்டியை கவிழ்த்து, 'இதுதான் சொற்பொழிவு மேடை; இதில் நின்று தான் பேச வேண்டும்...' என்று கூறினர்.
எந்த மறுப்பும் கூறாமல், அதில் நின்று சொற்பொழிவு நிகழ்த்த ஆரம்பித்தார்.
சிறிது நேரத்தில் கருத்தில் மனம் ஒன்றி, சூழ்நிலையை மறந்து பேசினார்.
திடீரென, அவரை சுற்றி துப்பாக்கி குண்டுகள் வெடித்தன. சில குண்டுகள் விவேகானந்தரின் காதருகே உரசியபடி பாய்ந்தன; சுற்றிலும் பதற்றமும், கூக்குரலும் எழுந்தது.
விவேகானந்தரிடம் எந்த சலனமும் இல்லை. அந்த சூழ்நிலையால் அவர் சிறிதும் பாதிக்கப்படவில்லை. தொடர்ந்து, மடை திறந்த வெள்ளம் போல் சொற்பொழிவு நிகழ்த்தி கொண்டிருந்தார்.
சோதிக்க நினைத்த அமெரிக்க இளைஞர்கள் தோற்றனர். உரிய நேரத்தில் சொற்பொழிவை முடித்தார். அந்த இளைஞர்கள், 'சுவாமி... நீங்கள் அப்பழுக்கற்றவர்; மற்றவர்களுக்கு என்ன போதிக்கிறீர்களோ, அப்படியே வாழ்கிறீர்கள்...' என பணிந்து மன்னிப்பு கேட்டனர்.
- தொடரும்...
