PUBLISHED ON : ஏப் 23, 2022

இந்திய தடகள விளையாட்டு வீரர்களின் தங்கப் பெண்ணாக ஜொலிப்பவர், பி.டி.உஷா. கேரள மாநிலம் கோழிக்கோடு, பயோலி கிராமத்தில், ஜூன் 27, 1964ல் பிறந்தார். இவரது முழுப்பெயர், பிலாவூள்ளகண்டி தேக்கேபரம்பில் உஷா.
இந்தியா சார்பாக ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்தவர். அதிவேக ஓட்டப் பந்தயங்களில் சாதனைகள் புரிந்தவர். தங்கப்பதக்கங்களை குவித்ததால், இந்திய தங்க பெண் என்ற பெருமைக்குரியவர்.
விளையாட்டு வீரர்களை உருவாக்க பள்ளி ஒன்றை, கண்ணனுாரில் துவங்கியது, கேரள அரசு. தெற்கு ரயில்வே ஊழியரான, பி.டி.உஷா
அதில் சேர்ந்தார்; பயிற்சிக்கு தேவையான உதவிகளை, ரயில்வே நிர்வாகம் வழங்கியது.
அந்த பள்ளியில் அவரது திறனை கண்டறிந்தார், பயிற்சியாளர் ஓ.பி.நம்பியார். அவரது திறனை மெருகேற்றி நம்பிக்கையூட்டினார். சர்வதேச போட்டிகளில் விளையாடும் ஆர்வத்தை வளர்த்தார்.
அண்டை நாடான பாகிஸ்தான், கராச்சி நகரில், 1980ல் நடந்த தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றார்; அதே ஆண்டு, ஆசிய, ஐரோப்பிய நாடான ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வானார். அதிவேக ஓட்டப் பந்தயங்களில் மிக இளம் வயதில் பங்கேற்றவர் என்ற பெருமையை பெற்றார்.
டில்லி, ஆசியாட் விளையாட்டு போட்டியில் பங்கேற்று, 1982ல் வெள்ளிப் பதக்கங்கள் வென்றார். அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 1984ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார்.
ஓட்டப் பந்தயத்தில் துயர அனுபவம் கிடைத்தது. ஆனால், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில், ஆசிய அளவில், 55.42 வினாடிகளில் வந்து சாதனை படைத்தார்.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா, ஜாகர்தாவில், 1985ல் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஐந்து தங்கப் பதக்கங்கள் வென்றார். சர்வதேச போட்டியில் இது மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது; இதனால், இந்தியாவின் தங்கப் பெண் என்ற மகுடம் சூட்டப்பட்டது.
கிழக்கு ஆசிய நாடான தென்கொரியா தலைநகர் சியோலில், 1986ல் நடந்த, ஆசிய விளையாட்டு போட்டியில், நான்கு தங்கப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றார்; ஆசியாவின், அதிவேக ஓட்ட அரசி என்ற பட்டத்தை பெற்றார்.
பின், பயிற்சியின் போது, முழங்காலில் காயம் ஏற்பட்டது; இதனால், ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இயலவில்லை; இந்த நிலையில், போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
விளையாட்டு சாதனைக்காக வழங்கப்படும் உயர்ந்த அர்ஜுனா விருதையும், இந்திய அரசின், பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம், மத்திய மைதானத்தில், பி.டி.உஷா விளையாட்டு ஆலோசனை சபை ஒன்றை அரசு நிறுவியுள்ளது. கடுமையாக உழைப்பவர்களின் கதவை, வெற்றி தட்டும் என்பதை, பி.டி.உஷாவின் வாழ்க்கை அனுபவம் நிரூபித்துள்ளது.
