PUBLISHED ON : ஜூலை 06, 2012

அந்தக் காட்டில் வசித்த சிங்கத்திற்கு அன்று ஒரு விலங்கு கூட தீனியாகக் கிடைக்கவில்லை. மேலும், அங்குமிங்கும் அலைந்தது சிங்கம். பசி அதிகமாகவே, களைத்துப் போய் வழியிலிருந்த ஒரு குகையினுள் சென்றது.
'இதனுள்ளேயே ஒளிந்து கொள்வோம்! இந்தக் குகைக்குள்ளே இரவு நேரத்திலேனும் ஏதாவது ஒரு விலங்கு வராமலா போகும்!' என்று நினைத்தது சிங்கம்.
அந்தக் குகையில் வசித்து வந்த நரி ஒன்று வெளியே சென்றிருந்தது. அது அப்போது வந்து வாயிலில், நுழைய இருந்த சமயம், தரையில் தெரிந்த சிங்கத்தின் காலடிகளை கண்டு அதிர்ந்தது. உள்ளே சிங்கம் இருக்கிறதா இல்லையா என தெரிய ஒரு திட்டம் தீட்டியது.
'குகையே! குகையே!' என்று ஊளையிட்டது.
''ஏ குகையே! இன்றைக்கு ஏன் என்னோடு பேசமாட்டேன் என்கிறாய்? வழக்கமாய் என்னிடம் பேசி வந்தாயே... நீ பேசவில்லை என்றால், என்னோடு பேசக்கூடிய வேறு குகைக்கு போய் விடுகிறேன் நான்,'' என்று சொல்லியது நரி.
அந்த குரல் உள்ளேயிருந்த சிங்கத்திற்கு நன்கு கேட்டது.
வழக்கமாக இந்தக் குகை நரியுடன் பேசும் போல் தெரிகிறது. என்னைப் பார்த்துவிட்டது அல்லவா, உடனே அதற்குப் பயம் வந்துவிட்டது போலும். பயத்தால் நடுங்குகிறவர்களுக்கு கை, கால்கள் உதறல் எடுப்பதோடு பேசவும், குரல் வராது. அதனால்தான் குகை பேசவில்லை. அதற்குப் பதிலாக இப்போது நான் பேசினால் என்ன? அதனால் நரி உள்ளே வரலாமல்லவா! தற்சமயம் அதையேனும் சாப்பிட்டு பசியாறிக் கொள்ளலாமே!' என்று எண்ணியது.
ஆகவே, அதை வரவேற்கும் பாவனையில் சிங்கம் உள்ளிருந்தபடியே, ''உள்ளே வா, உள்ளே வா!'' என்றது.
அவ்வளவுதான், சிங்கத்தின் குரலை கேட்ட நரி தலை தெறிக்க ஓடியது. புத்திசாலித்தனத்தினால் நரி உயிர் பிழைத்தது.
***
