தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/டானியா ஓடானியா!

டானியா ஓடானியா!

டானியா ஓடானியா!


PUBLISHED ON : மார் 11, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னொரு காலத்தில் சிவந்தபுரி என்ற கிராமத்தில் டானியா என்ற அழகிய பெண் தந்தையுடன் வசித்து வந்தாள். அவள் அழகியாக இருந்ததுடன் நல்ல அறிவுள்ளவளாகவும் இருந்தாள்.

டானியாவின் தந்தை தன் மகளுடைய யோசனையைக் கேட்டு அதன்படி நடப்பான்.

ஒரு முறை சிவந்தபுரி கிராமத்திற்கு வந்த அந்நாட்டு மன்னன், டானியாவின் அழகில் மயங்கி, அவளை மணக்கத் தீர்மானித்தான். இதனால் டானியாவின் தந்தையிடம் பெண் கேட்டான். அவனும் சரி என்று கூறிவிட்டான். தன்னைக் கேட்காமல் மன்னனுக்கு வாக்குக் கொடுத்தது டானியாவுக்கு கோபத்தை உண்டாக்கியது.

''மகளே! மன்னன் உன்னை மணக்க விரும்புகிறான். மன்னனை மணந்தால் நீ சுகமாக வாழலாம் என்ற எண்ணத்தில் நானும் சரி என்று கூறிவிட்டேன்,'' என்று தன் மகளை சமாதானம் செய்ய முயன்றார் தந்தை.

''அப்பா! இந்த ஏற்பாட்டில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. முன்பின் தெரியாத மனிதனுடன் நான் எப்படி வாழ முடியும். நம் நிலைமைக்கும், மன்னன் நிலைமைக்கும் ஒத்து வருமா?'' என்று டானியா கேட்டாள்.

''அம்மா! நீ மன்னனை மணக்காவிட்டால் அவருக்கு கோபம் உண்டாகும். இதன் காரணமாக நமக்கு ஆபத்து வரலாம். என்ன இருந்தாலும் மன்னன் நல்லவர்; புத்திசாலி; நீ அவரை மணப்பதால் ஒன்றும் கெட்டு விடாது,'' என்று தந்தை பதிலளித்தான்.

''சரி அப்பா! உங்கள் விருப்பப்படியே நடக்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. மன்னன் ஏதாவது ஒரு தொழிலைக் கற்றவராக இருக்க வேண்டும். என்றாவது ஒரு நாள் மன்னனுக்கு ஆபத்து என்றால் நாங்கள் எப்படி தப்பிப்பது? தொழில் தெரிந்திருந்தால் அதைக் கொண்டு பிழைத்துக் கொள்ளலாம். ஆகவே, நீங்கள் மன்னனிடம் என்னுடைய நிபந்தனையை எடுத்து சொல்லுங்கள்,'' என்று டானியா தெரிவித்தாள்.

தந்தை மன்னனிடம் சென்று தன் மகளுடைய விருப்பத்தைத் தெரிவித்தான். மன்னனும் நிபந்தனையை ஏற்று ஒரு தொழிலை கற்பதாகக் கூறினான். மன்னன் நெசவுத் தொழிலை மேற்கொண்டு ஒரு அழகிய கைக் குட்டையை நெய்து முடித்தான். அதை டானியாவிற்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தான். 'என்னுடைய அன்பளிப்பான இந்த கைக்குட்டை, டானியாவிற்கு பிடித்தமாக இருந்தால் அவள் நிச்சயம் என்னை மணப்பாள்,'' என்று எண்ணத் தொடங்கினான்.

மன்னன் அனுப்பி வைத்த கைக்குட்டை டானியாவை மிகவும் கவர்ந்தது. வேலைப்பாடுகள் நிறைந்த அந்தக் கைக்குட்டையை அன்பளிப்பாக மன்னன் அனுப்பியதால், மன்னன் தன்னை மிகவும் விரும்புகிறார் என்பதை டானியா உணர்ந்தாள். மன்னரை மணக்க, தந்தையிடம் சம்மதம் தந்துவிட்டாள்.

மன்னனுக்கும், டானியாவிற்கும் திருமணம் நடந்து முடிந்தது. இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். மன்னனுக்கு உதவியாக ஆலோசனைகளைக் கூறி மன்னனை மகிழ்வித்தாள், ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, மன்னன் ''டானியா! குடிமக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள்; அவர்களுடைய தேவைகள் என்ன என்பதை அறிய வேண்டும்; அதற்கு வழி என்ன?'' என்று கேட்டான்.

''அரசே! மக்களின் எண்ணங்களை நன்கு அறிய வேண்டுமேயானால், அவர்களில் ஒருவராக வாழ்ந்து, அவர்களுடன் பேசி, பழக வேண்டும். தாங்கள் அவர்களைப் போன்று உடையணிந்து, தாங்கள் யார் என்பதை அவர்கள் அறியாமல் வாழ்ந்து, அவர்களை வீதிகளிலும், சந்தைகளிலும் சந்தித்தால், மக்கள் கருத்தை அறிய முடியும்,'' என்று கூறினாள்.

டானியா கூறிய கருத்து மன்னனுக்கு பிடித்தமாக இருந்தது மன்னன் மறுநாள் தன் மந்திரிகள் இருவர் உடன்வர, அனைவருமாக மாறு வேடத்தில் நகரத்தின் தெருவில் நடந்து சென்றனர். மதியம் வந்ததும் மன்னனுக்கு பசி ஏற்பட்டது. உடனே அவர்கள் ஒரு உணவு விடுதிக்கு சாப்பிடச் சென்றனர். அவர்கள் தனி அறைக்கு அனுப்பப்பட்டனர். தனி அறைக்குள் அவர்கள் கால் எடுத்து வைத்ததுமே மூவரும், கால் சறுக்கி கீழே விழுந்தனர். மூவரும் கூக்குரல் எழுப்பியும் ஒருவரும் உதவிக்கு வரவில்லை.

'சே! ஒரு மன்னனை இப்படியா வரவேற்பது' என்று எண்ணி, மன்னன் கோபத்தில் கத்தினான். அது சமயம் சிரிப்பொலி கேட்டது. ஒரு குரூரமான கிழவன் ஒருவன் சிரித்துக் கொண்டு நிற்பதை கண்டனர்.

''ஆஹா! ஆஹா! நல்ல கனமான உருவம்; இன்னும் மூன்று நாட்களில் உன்னைக் கொன்று உனது உடல் கறியைக் கொண்டு நல்ல சுவையான உணவு சமைக்கச் செய்வேன். எங்களின் சுவையான உணவை விரும்பி மக்கள் இங்கே நிறைய வருகிறார்கள்; அவர்கள் உன் உடல் கறியை ரசித்துச் சாப்பிடுவார்கள்,'' என்று மாறு வேடத்திலிருந்த மன்னனிடம் கூறிவிட்டு, அந்த அழகற்ற கிழவன், ஆஹா! ஆஹா! என்று மகிழ்ச்சியுடன் சிரித்தவாறு அங்கிருந்து சென்றுவிட்டான்.

''நாம் யார் என்பதை அந்தக் கிழவன் திரும்பி வந்ததும் தெரிவித்து விடலாமா,'' என மந்திரி, மன்னனிடம் கேட்டான். ''வேண்டாம், வேண்டாம், நான் மன்னன் என்று தெரிந்தால் இன்றே என்னைக் கொன்று விடுவான். நாம் யோசித்து முடிவு செய்யலாம்,'' என்று கூறி, மன்னன் சிந்திக்கத் தொடங்கினான்.

சற்று நேரம் கழித்து அந்தக் குரூரமான, அழகற்ற கிழவன் திரும்பி வந்து, ''நீ நன்றாகக் கொழுத்திருக்கிறாய். உனக்கு உணவு தரமாட்டேன். தண்ணீர் மட்டுமே தருகிறேன் குடி'' என்று மன்னனிடம் கூறினான்.

''நான் இப்படித் தான் சாக வேண்டும் என்று விதியிருந்தால், சாக வேண்டியதுதான். உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். அதன்படி நடந்தால் உனக்கு நிறைய பணம் கிடைக்கும்,'' என்றான் மன்னன்.

''எனக்கு நிறைய பணம் கிடைக்குமா? அப்படியானால், உடனே சொல்; எனக்கு நிறைய பணம் வேண்டும்,'' என்று கிழவன் பதில் அளித்தான்.

''நான் ஒரு நெசவாளி, என்னுடைய கைவினைப் பொருட்கள் இந்நாட்டு ராணிக்கு மிகவும் பிடிக்கும். நான் ஒரு கைக்குட்டையை நெய்து தருகிறேன். அதை நீ அவளிடம் கொடுத்தால் உனக்கு நிறைய பணம் கிடைக்கும். அதைக் கொண்டு உன் உணவு விடுதிக்கு தேவையான பண்டங்களை வாங்க முடியும்,'' என்று மன்னன் சொன்னான்.

அந்தக் கொடூரமான, அழகற்ற கிழவன் உடனே நெய்வதற்கான தறியையும், நூலையும் கொண்டு வந்து கொடுத்தான். மன்னன் தறியில் அமர்ந்து நெய்யத் தொடங்கினான். தன் ராணி டானியாவிற்காக அழகிய கைக்குட்டையைத் தயாரித்தான். அந்தக் கைக்குட்டையைக் கிழவனிடம் கொடுத்து அரண்மனைக்கு எடுத்துச் செல்லுமாறு கூறினான். கிழவனும் கைக்குட்டையுடன் அரண்மனை நோக்கி நடந்தான்.

கிழவன் நீண்ட நேரம் காத்திருந்து, ராணியைச் சந்தித்தான். ''மிக அழகிய வேலைப்பாடுள்ள இந்தக் கைக்குட்டையை, கைதேர்ந்த நெசவு கலைஞன் தயாரித்துள்ளான்; இதை விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்களா,'' என்று ராணியிடம், கிழவன் கேட்டான். ராணி கைக்குட்டையைக் கண்ணுற்றதும், அது தன் கணவனால் தயாரிக்கப்பட்டது என்பதை உடனே புரிந்து கொண்டாள். அத்துடன் மன்னன் ஆபத்தில் சிக்கியுள்ளார் என்பதையும் அறிந்து கொண்டாள்.

''ஆஹா! அற்புதமான வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த கைக்குட்டையை நான் வாங்கிக் கொள்கிறேன்,'' என்று கூறி கிழவனுக்கு நிறைய பணத்தைக் கொடுத்து அனுப்பினாள். கிழவன் மகிழ்ச்சியுடன் வெளியேறினான்.

ராணி டானியா, உடனே தன் சேவகர்களை அழைத்து அந்த கிழவனைத் தொடர்ந்து செல்லுமாறு கூறி, தானும் குதிரை மீது ஏறி அவர்களைப் பின் தொடர்ந்தாள் சேவகர்கள் உணவு விடுதிக்குள் சென்றனர். டானியா வெளியில் காத்து நின்றாள். சேவகர்கள் உணவு விடுதியில் உள்ள பணியாட்களுடன் சண்டையிட்டு மன்னனையும், மந்திரிகளையும் மீட்டனர்.

''எனது அருமை டானியா! நீ என்னைக் காப்பாற்றிவிட்டாய். ஒரு தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும் என்று திருமணத்தின் போது நீ விதித்த நிபந்தனை இன்று என் உயிரைக் காக்க உதவியது; நான் உன்னை, முன்னை விட அதிகமாக நேசிக்கிறேன்,'' என்று ராணி டானியாவை, புகழ்ந்துரைத்தான் மன்னன்.

டானியாவும், மன்னனும் மந்திரிகளும் மகிழ்ச்சியுடன் அரண்மனை திரும்பினர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us