PUBLISHED ON : செப் 05, 2020

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம், அரசு மேல்நிலைப் பள்ளியில், 1982ல், 12ம் வகுப்பு படித்தபோது ஆண்டுவிழாவில் போட்டிகளில் பங்கேற்க மாணவர்களின் ஆர்வத்தை கேட்டறிந்தார் சிறப்பு தமிழாசிரியர் தருமராசன்.
என்னையும், 'ஏதேனும் தலைப்பில் கவிதை எழுதி வா...' என்றார். மிகுந்த ஆர்வத்துடன், 'சாதி என்பது ஏதடா' என்ற தலைப்பில் எழுதிக் காட்டினேன்.
மேடையில் அதை வாசிக்க அனுமதித்தார். பரிசும், பாராட்டும் கிடைத்தது. போட்டிகளில் பங்கேற்க உற்சாகப்படுத்தினார். கவிதை எழுதும் ஆர்வம் வளர்ந்தது.
பாரதிதாசன் நுாற்றாண்டு விழா, 1991ல் சென்னையில் நடந்தது; அதில், என் கவிதையும் இடம் பெற்றிருந்தது. தமிழகத்தின் சிறந்த, 100 கவிஞர்களில் ஒருவனாக, 'பாவந்தேர் பட்டயம்' பெற்றேன். தமிழறிஞர்கள் முன்னிலையில் நடந்த விழாவைக் காண அந்த ஆசிரியர் இல்லையே என வருந்தினேன்.
என் வயது 55; அந்த பட்டயத்தை பார்க்கும் போதெல்லாம் ஆசிரியர் நினைவில் கண் கலங்குவேன். என் எண்ணம், எழுத்தில் அவர் வாழ்கிறார்.
- எஸ்.பாலசுப்ரமணியன், சென்னை.
தொடர்புக்கு: 98405 58675.
