PUBLISHED ON : செப் 05, 2020

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், பட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 2010ல், 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி ஆண்டு விழாவில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடந்தன.
தொடர்ந்து, மூன்று ஆண்டுகளாக பேச்சுப் போட்டியில் வென்றதால், முதல் பரிசு எனக்குத்தான் என நம்பி, 'பெண் கல்வி' என்ற தலைப்பில் பேசினேன். தேர்வாகவில்லை என்பதை, தமிழாசிரியர் கணேசன் மூலம் அறிந்து அதிர்ந்தேன்.
வருந்தி துவண்டிருந்த என்னை தேற்றி, 'பிற்பகலில் நடக்கும் கட்டுரை போட்டியில் முயற்சி செய்...' என, ஊக்கமளித்தார் தமிழாசிரியர். நம்பிக்கையுடன், 'ஒழுக்கம் விழுப்பம் தரும்' என்ற தலைப்பில் எழுதினேன். விழாவில், 'கட்டுரைப் பூக்கள்' என்ற புத்தகத்தையும், வெற்றிக் கேடயத்தையும் பரிசாக பெற்றேன்.
இப்போது, என் வயது, 24; தனியார் பள்ளியில் ஆங்கில பயிற்றுனராக பணியாற்றுகிறேன். தமிழ் மீதான பற்றால் சிறப்பு வகுப்புகளில், சிறுவர்மலர் இதழில் வரும் கதைகளை கூறிவருகிறேன். அந்த பற்றுதலை உருவாக்கிய தமிழாசிரியரை மனதில் கொண்டுள்ளேன்.
- க.கார்த்திகா, திண்டுக்கல்.
தொடர்புக்கு: 85262 06008
