PUBLISHED ON : செப் 10, 2022

ராமநாதபுரம், பரமக்குடி, ஆர்.எஸ்.அரசு மேல்நிலைப் பள்ளியில், 1982ல், பிளஸ் 2 வகுப்பில், தொழிற்கல்வியை முதன்மை பாடமாக பயின்றேன். வகுப்பு ஆசிரியர் அய்யப்பன், அலுவலக மேலாண்மை பாடம் கற்பிப்பார். அதில் மிகுந்த புலமை பெற்றிருந்தார்.
பொது சேவையிலும் ஆர்வம் உள்ளவர். ரத்த தானம் செய்யும் குழு ஒன்றை உருவாக்கியிருந்தார். அந்த குழுவைக் கொண்டு ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளில், சிகிச்சைக்கு தேவையான ரத்தத்தை வழங்கி உதவி வந்தார். அந்த சேவைப் பணியில் மாணவர்களையும் ஈடுபட வைத்தார்.
அவரது அறிவுரையால் ரத்த தானம் செய்வதை கடைபிடித்து வருகிறேன்.சமீபத்தில், உடல் நலக்குறைவால் இறந்தார் அந்த ஆசிரியர். அதை ஏற்க முடியவில்லை. பலன் தந்த விருட்சம் மறைந்தது போல் மனம் விம்முகிறது.என் வயது, 57; அந்த ஆசிரியர் நினைவில் நெகிழ்கிறேன்.
- கே.வீரபாண்டி, ராமநாதபுரம்.
