PUBLISHED ON : செப் 28, 2018

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள, லேடி வெலிங்டன் பள்ளியில் படித்த காலம் அது! நான், சூடாமணி, லோகேஸ்வரி மூவரும் நெருங்கிய தோழிகள். இதில், லோகேஸ்வரி மிகவும் நல்லவள்; நேர்மையானவள்; யாரிடமும் கடினமாக பேச மாட்டாள்; எப்போதும் இன்முகத்துடன் இருப்பாள்.
தமிழாசிரியை அமுதவல்லி, மிகவும் கண்டிப்பானவர்; நல்லவர். முதல்நாள் நடத்திய பாடத்தில், அடுத்தநாள் கேள்விகள் கேட்பார். சரியான விடை சொல்ல வேண்டும்... இல்லை என்றால், தமிழ் பாடவேளையில் வகுப்பிற்கு வெளியே நிற்க வேண்டும்.
அன்று, 'எங்கள் தமிழ்' என்ற பாரதிதாசனின் கவிதைகளை வீட்டுப் பாடமாக, எழுதி வர சொல்லியிருந்தார். எல்லாரும் எழுதி வந்து விட்டோம்; லோகேஸ்வரி மட்டும் எழுதவில்லை.
'ஏன் எழுதவில்லை...' என்று கேட்டார் ஆசிரியை.
'தோழி என்ன பதில் சொல்வாளோ...' என்று எங்களுக்கு கவலையாக இருந்தது.
'நேற்று மாலை அம்மா கேட்டதற்காக, இட்லி மாவு ஆட்டினேன்; பின், இரவுக் காட்சி படத்திற்கு வற்புறுத்தி அழைத்து சென்று விட்டனர்; இரவு துாங்காததால் காலையில், தலைவலி வந்து விட்டது. அதனால் தான், வீட்டுப் பாடம் எழுதவில்லை...' என்றாள்.
வகுப்பே ஆடிப் போய் விட்டது; நாங்கள் அச்சத்துடன் பார்த்தோம். ஒரு நொடியில், ஆசிரியையின் கோபம் மறைந்தது.
அவள் முதுகில் தட்டி, 'உன் நேர்மைக்கு என் வாழ்த்துகள்... உண்மையைச் சொன்னதற்காக, உனக்கு எந்த தண்டனையும் இல்லை; நாளை எழுதி வா; உட்கார்...' என்று புன்னகையுடன் சொன்னார்.
நாங்கள் திகைத்துப் போனோம்; தோழி தண்டனை பெறவில்லை என்று உள்ளுக்குள்ளே மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.
- வி.லட்சுமி, சென்னை.
