PUBLISHED ON : ஜூலை 26, 2019

கத்திரிக்காபாளையம் கிராமத்தில், கோவிந்தன் என்பவர், கொடிய நோயால் அவதிப்பட்டார். படுக்கையில் இருந்தவரைப் பார்க்க, ஆன்மிக குரு ஒருவர் வந்தார். உடலும், மனமும் சோர்ந்து போயிருந்த, கோவிந்தனைக் கண்டதும், 'பிரார்த்தனை செய்தால் நலம் பெறுவாய்...' என்று கூறி, மனமுருக வேண்டினார். கோவிந்தனின் நண்பர்களும், உறவினர்களும் அதில் பங்கேற்றனர்.
பிரார்த்தனை முடிவில், 'அருள் பேராற்றல் கருணையால் நோய் குணமாகி விடும்; இத்தனை பேரும் பிரார்த்தனை செய்துள்ளோம்; கவலைப்பட வேண்டாம்...' என, நம்பிக்கையூட்டினார் குரு.
அப்போது, அங்கிருந்த சோம்பேறி ஒருவன் ஏளனமாக, 'என்ன உளறுகிறாய்; வெறும் வார்த்தைகள் நோயை குணமாக்கி விடுமா... இப்படி எல்லாம் சொல்லி ஏமாற்ற முயற்சிக்காதே...' என்று அலட்சியமாக சிரித்தான்.
இதைக் கேட்டு, 'இங்கு இருப்பதிலேயே, மிகவும் முட்டாள், மூடன் என்றால், அது நீ தான்...' என, கோப பாவனை முகத்துடன் கூறினார் குரு.
சோம்பேறியின் கண்கள், கோபத்தில் சிவந்தன; கடும் ஆத்திரமடைந்தவன், 'என்னையா முட்டாள் என்கிறாய்; கீழ்த்தரமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்கா விட்டால், உன்னை அடித்து துவைத்து விடுவேன்...' என்றான்.
நிதானமாக புன்னகைத்த குரு, 'முட்டாள், மூடன், என்பது எல்லாம் வெறும் சொற்கள் தானே... அவற்றால் எப்படி உனக்கு கோபம் ஏற்பட்டது; அந்த சொற்கள் உன்னை மாற்றியது போல, நல்ல சொற்கள், நல்லவித மாற்றங்களை உண்டாக்கும் அல்லவா...' என்றார்.
அதை புரிந்து கொண்ட சோம்பேறி, வெட்கி தலை குனிந்தான். குருவிடம் மன்னிப்புக் கேட்டு திருந்தி வாழ்ந்தான்.
குட்டீஸ்... எப்போதும் நல்ல சிந்தனையை தரும் சொற்களையே பேசி மகிழுங்கள்.
பிரேமா சாந்தாராம்
