PUBLISHED ON : ஜன 09, 2015

செழியனும், கார்த்திக்கும் நண்பர்கள். செழியன் கடுமையான உழைப்பாளி; மிகவும் நல்லவன். ஆனால், கார்த்திக்கோ செழியனுக்கு நேர்மாறானவன். உழைக்க மாட்டான். சரியான சோம்பேறி. அவனுக்கு பல கெட்ட பழக்கங்களும் இருந்தன.
செழியன் தன் தந்தையிடம் சிறிது பணம் வாங்கி, பத்து கறவை மாடுகளை வாங்கி, பால் கறந்து வீடு வீடாக அந்தப் பாலை ஊற்றி, இரவும், பகலும் கண் விழித்துக் கடுமையாக உழைத்தான். விரைவிலேயே அழகான மாளிகையை அவன் கட்டினான். இப்போது அவனிடம் நிறைய கறவைமாடுகள் இருந்தன. அவன் பால் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தான்.
கார்த்திக்கும் தன் தந்தையிடம் பெரும் பணம் வாங்கினான். அவன் சோம்பேறி என்பதால், அந்த பணத்தை ஊதாரித்தனமாகச் செல விட்டான். இதன்மூலம் அவனுக்கு பல தீய நண்பர்கள் கிடைத்தனர்.
கார்த்திக் தன்னுடைய பணத்தை அவர்களுக்குச் செலவழித்தான். விரைவில் அவன் ஓட்டாண்டி ஆனான். ஊர்மக்கள் அவனையும், அவனுடைய நண்பர்களையும் பழித்துப் பேசினர். மாறாக, செழியனை, கார்த்திக் முன்னறே வாயார புகழ்ந்தனர்.
''செழியனும் உன் நண்பன்தானே, அவன் எப்படி இருக்கிறான். பால் வியாபாரத்தில் அவன்தான் கொடிக்கட்டி பறக்கிறான். ஆனால் நீ, தீய நண்பர்களுடன் சேர்ந்து இப்படி சோம்பேறியாகவும், ஊதாரித் தனமாகவும் இருக்கிறாயே...'' என்று ஊர்மக்கள் அவனை ஏளனம் செய்தனர்.
செழியன் மீது கார்த்திக்குக்கு பொறாமை ஏற்பட்டது. ஒரு காலத்தில் தன்னுடன் சுற்றிக் கொண்டிருந்த அவனை, எல்லாரும் இப்படிப் புகழ்கிறார்களே என்று.
'செழியனை ஊர்மக்கள் முன்பு அவமானப்படுத்த வேண்டும்' என்ற தீய எண்ணம் உதித்தது கார்த்திக்குக்கு.
'செழியன் ஊர்மக்களுக்கு விற்கும் பாலில் சரிபாதியாகத் தண்ணீரைக் கலக்குகிறான்' என்ற பொய்யான வதந்தியை தன்னுடைய நண்பர்கள் மூலம் ஊரில் பரப்பினான் கார்த்திக்.
'இதனால் ஊர்மக்கள் கோபமுற்று செழியனை அவமானப் படுத்துவர். அதைக் கண்டு சந்தோஷப்படலாம்' என்று நினைத்தான்.
ஆனால், கார்த்திக்கும் அவனுடைய நண்பர்களும் பரப்பிய பொய் வதந்தியை ஊர்மக்கள் நம்பவில்லை.
''செழியன் மிகவும் நல்லவன். நீ அவன் வளர்ச்சியைக் கண்டு பொறுக்காமல் அவனைப் பற்றி பொய் வதந்தி பரப்பு கிறாய்... இனிமேல் இப்படி செய்யாதே!'' என்று கார்த்திக்கை கடுமையாக எச்சரித்தனர் ஊர்மக்கள்.
'தன் திட்டம் இப்படி நொறுங்கி விட்டதே...' என்று அவமானம் தாங்காமல், அந்த ஊரைவிட்டே ஓடிவிட்டான் கார்த்திக்.
நேர்மையாகப் பால் வியாபாரம் செய்து வந்த செழியன் தன் மனைவி, குழந்தை களுடன் அந்த ஊரில் மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.
***
