தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பெரிய பானை!

பெரிய பானை!

பெரிய பானை!


PUBLISHED ON : ஜன 09, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 09, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மந்தையூர் என்னும் ஊரில் குணசீலன் என்பவன் துணி வெளுக்கும் தொழிலைச் செய்து வந்தான். அரண்மனைத் துணிகளையும் அவன்தான் வெளுப்பான். அவன் சிறப்பாக வேலை செய்வதால், மகிழ்ந்த அரசர் அவனைப் பாராட்டிப் பரிசு வழங்கினார்.

அவன் பக்கத்து வீட்டில் மட்பாண்டங்கள் செய்யும் சுப்பு என்பவன் குடி இருந்தான். குணசீலன் பேரும், புகழும் பெற்றதைப் பார்த்து, பொறாமை கொண்டான் சுப்பு.

அரசரிடம் வந்து ''அரசர் பெருமானே! நீங்கள் வெள்ளை யானையில் அமர்ந்து பெருமிதமாக உலா வர வேண்டும். இந்நாட்டு மக்கள் அதைப் பார்த்து மகிழ வேண்டும்,'' என்றான்.

''வெள்ளை யானையில் அமர்ந்து வந்தால் பெருமையாகத்தான் இருக்கும். வெள்ளை யானைக்கு எங்கே போவது?'' என்றார்.

''அரசே! துணி வெளுக்கும் குணசீலன் திறமையை நீங்கள் அறிவீர்கள். எப்படிப் பட்ட அழுக்குத் துணியையும் அவன் வெளுத்து விடுவான். உங்கள் பட்டத்து யானையை அவனிடம் தாருங்கள். அதை அழகிய வெள்ளை யானையாக்கித் தருவான்,'' என்றான்.

அதை உண்மை என்று நம்பிய அரசர் குணசீலனை அழைத்தார்.

''குணசீலா! பட்டத்து யானையை நீ வெள்ளை யானையாக்கித் தர வேண்டும்,'' என்றார்.

''அரசே! அது எப்படி முடியும்?'' என்று தயக்கத்துடன் கேட்டான் குணசீலன்.

''அது எனக்குத் தெரியாது. பட்டத்து யானையை நீ வெள்ளை யானையாக்க வேண்டும். இல்லையேல், உன் உடலில் உயிர் இருக்காது,'' என்று கண்டிப்புடன் சொன்னார்.

அங்கிருந்த சுப்புவைப் பார்த்தான் குணசீலன். இது சுப்புவின் சூழ்ச்சிதான் என்பதைப் புரிந்து கொண்டான்.

அறிவு நிறைந்த குணசீலன், சுப்புவைப் பழி வாங்க நினைத்தான்.

''அரசே! அழுக்குத் துணிகளை நாங்கள் ஒரு பானைக்குள் போடுவோம். பிறகு அந்தப் பானையை வெள்ளாவி வைப்போம். துணிகளில் உள்ள அழுக்குப் போய்விடும். அதே போல, பட்டத்து யானையை வெள்ளாவி காட்டினால், வெள்ளை யானை யாகி விடும். துணிகளைப் போடும் அளவு பானைதான் என்னிடம் உள்ளது. யானை நுழையும் அளவு பெரிய பானை என்னிடம் இல்லை.

''மட்பாண்டங்கள் செய்வதில் சுப்பு திறமைசாலி. அவனிடம் யானை நுழையும் அளவு பெரிய பானை செய்து தரச் சொல்லுங்கள். பானை கிடைத்த அடுத்த நாளே பட்டத்து யானையை வெள்ளை யானையாக்கித் தருகிறேன்,'' என்றான் குணசீலன்.

சுப்புவைப் பார்த்த அரசர், ''உனக்குப் பதினைந்து நாள் அவகாசம் தருகிறேன். அதற்குள் யானை நுழையும் அளவு பெரிய பானை செய்து தர வேண்டும்,'' என்று கட்டளை இட்டார்.

சுப்பு சொன்ன எந்த சமாதானத்தையும் அரசர் ஏற்றுக் கொள்ளவில்லை.

பதினைந்து நாட்கள் கடினமாக உழைத்த சுப்பு, யானை உள்ளே செல்லும் அளவு பெரிய பானை ஒன்று செய்தான்.

அந்தப் பானைக்குள் யானை அடி எடுத்து வைத்தது. அதன் எடை தாங்காமல் பானை உடைந்து நொறுங்கியது.

இதைப் பார்த்த அரசர், ''சுப்பு! முதன் முறை என்பதால் உன்னை மன்னிக்கிறேன். அடுத்து நீ செய்யும் பானை உறுதியாக இருக்க வேண்டும். யானை உள்ளே சென்றால் உடையக் கூடாது,'' என்று கட்டளை இட்டார்.

அவ்வளவு உறுதியான பானையை யாராலும் செய்ய முடியாது என்பது அவனுக்குப் புரிந்தது.

வீடு வந்த அவன், 'பொறாமை கொண்டு குணசீலனுக்கு தீங்கு செய்தேன். அந்தப் பொறாமை என் வாழ்விற்கே உலை வைத்து விட்டதே... என்ன செய்வேன்?' என்று உள்ளம் நொந்து இறந்து போனான்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us