PUBLISHED ON : ஜன 09, 2015

பொங்கல் - தமிழர்கள் பண்டிகை. விவசாயத்திற்கு உறுதுணையாய் இருந்தவைகளுக்கு அன்பு பாராட்டும் பண்டிகை. உழவர்களின் உன்னத பண்டிகை.
'போகி' என்னும் சொல்லிற்கு 'மகிழ்ச்சி' என்பது பொருள். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை நெல் பயிரிடும் காலம். உழவர்கள், இடைவிடாத தம் உழைப்பின் பயனை மார்கழி இறுதியில் வீட்டிற்கு நெல்மணியாக கொண்டு வருவர். இது தவிர குறுகிய காலப் பயிர்களான அவரை, துவரை, காய்கறிகள் முதலியனவும், மார்கழி மாத இறுதியில் வீட்டிற்கு வந்து சேரும்.
சுற்றமும் நட்பும் சூழ, மனைவி மக்களுடன் உழவர்கள் மகிழ்ச்சியாக இருப்பர்.
இதனால் இதற்கு 'போகிப் பண்டிகை' என்ற பெயர் வந்தது.
இப்பண்டிகை தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும் வேறு வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் 'லோரி' என்ற பெயரிலும், ஆந்திர மாநிலத்தில் 'கொப்பிப் பண்டிகை' என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.
தை மாதத்தின் முதல் நாள் பொங்கலாகும். தமிழர் இதனைப் 'பொங்கல் திருநாள்' என அழைப்பர்.
பொங்கல் எனும் சொல், 'பொங்கு' எனும் அடிச்சொல்லிலிருந்து தோன்றியது.
இச்சொல்லிற்கு சமை, பொங்கவை முதலிய பொருள்கள் உண்டு.
மாட்டுப் பொங்கல்: உழவுக்கு உதவி, விளைச்சலை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்ல உதவும் விவசாயியின் உற்ற தோழனான மாட்டுக்கு நன்றி சொல்லும் நாள் இது.
'இப்போதைய விவசாயியின் நண்பன் டிராக்டர்தானே!' என்று யாரோ ஒரு சுட்டிப் பெண் கேட்கிறாள்.
அது, வளர்ந்த விஞ்ஞான நிலை. ஆனாலும், ஆரம்ப வளர்ச்சிக்கு உதவி, இன்றும் கூட பல விவசாயிகளின் உற்ற தோழனாக விளங்கும் மாடுகளைச் சீராட்டிப் பாராட்டும் பண்டிகைத் திருநாள் இது.
பொங்கலின் இறுதி நாள் விழா, காணும் பொங்கல். கன்னிப் பெண்கள் பொங்கல் வைப்பதால், இதனை 'கன்னிப் பொங்கல்' எனவும் அழைப்பர்.
இன்ச் இன்ச்சாக இனிக்கும்
தை பிறப்பதற்கு அடையாளமாக தெருவெங்கும் கரும்பு கட்டுக்கள் குவிக்கப்பட்டிருக்கும். அனைவரும் விரும்பி சுவைத்து மகிழும் கரும்பு, பொங்கலில் பிரதானமாக இடம் பெறுகிறது.
கரும்பு என்றதும் நமக்கு சர்க்கரையை தருகிறது என்று மட்டும்தான் தெரியும். ஆனாலும், கரும்பு பல்வேறு முறைகளில் பொருளாதார முறையிலும், மருத்துவ முறையிலும் பயன்படுகிறதென தெரியுமா?
நமது தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக கரும்பை பயிரிட்டு வந்துள்ளனர். இலக்கியங்களும், பழந்தமிழ்ப் பாடல்களும் கரும்பை சிறப்பாக உரைக்கின்றன. கடைச் சங்க காலத்திற்கு முன்பேயே இந்தியர்கள் கரும்பை பற்றி நன்கு அறிந்திருந்தனர்.
கி.மு., 250ல் ஜாவா தீவிலிருந்து இங்கு கரும்பு வந்ததென சில இலக்கிய செய்திகள் கூறுகின்றன. கரும்பின் தாயகம் இந்தியா எனவும், நியூசினியா எனவும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.
சீனாவிலிருந்து பாரசீகத்திற்கு கரும்பு அறிமுகமானது. கி.பி., 5ம் நூற்றாண்டில் அரேபியாவுக்கும், கி.பி., 9வது நூற்றாண்டில் எகிப்திற்கும், கி.பி., 14ம் நூற்றாண்டில் மேற்கிந்திய தீவுகளுக்கும், பின் பிரேசில் மெக்சிகோ நாடுகளுக்கும் பரவியது.
மருத்துவர் கரும்பு!
* கரும்புச் சாறுடன், இஞ்சிச் சாறு கலந்து குடித்தால் வலிப்பு குணமாகும்.
* கரும்புச் சாறு உடல் சூட்டை குறைக்கும்.
* ஒரு கப் கரும்பு சாறுடன் சிறிதளவு வெல்லம், ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிட உடல் குளிர்ச்சி பெறும்.
* வெல்லம், மஞ்சள் தூளுடன் சில சொட்டு கரும்பு சாறை குழைத்து தீப்புண்கள் மேல் தடவ புண் ஆறும்.
* சர்க்கரை கலந்த நீரால் புண்களை கழுவி வர புண்கள் ஆறும்.
* சர்க்கரை வெப்பத்தை தரும்; சக்தியை கூட்டும்.
* கரும்புச் சாறுடன், இஞ்சிச்சாறு, எலுமிச்சை சாறு கலந்து அருந்தி வர, பித்தம் குறையும், உள்சூடு, குடல்புண், மூலம் போன்றவை குணமாகும்.
புண்களின் மேல் முதலுதவியாக சர்க்கரைப் பொடியை தூவலாம்.'பொங்கல் தினங்களில் கரும்பை கடித்து கடித்து தின்னுவோம். கரும்பு மட்டும் தான் நினைக்க நினைக்க வாயில் நீர் ஊறும். சுவைக்கும் போது இனிக்க இனிக்க வாயில் நீர் ஊறும்!'
ஹேப்பி பொங்கல்!
