தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஆறாவது நீங்கதான்!

ஆறாவது நீங்கதான்!

ஆறாவது நீங்கதான்!


PUBLISHED ON : ஜூன் 19, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 19, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணதேவராயருக்குத் திடீரென்று ஒரு விபரீதமான ஆசை ஏற்பட்டது. தனது அமைச்சர் அப்பாஜியை அழைத்து, ''நம் தலைநகரான விஜயநகரை இன்று முழுவதும் நன்றாக சுற்றிப் பார்த்து, ஆறு அடிமுட்டாள்களின் முகவரியை தெரிந்து கொண்டு இன்று இரவுக்குள் நீங்கள் வரவேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.

அப்பாஜிக்கு இது குழப்பமான உத்தரவாக இருந்தது.

''முட்டாள்களின் முகவரி எதற்கு மன்னா?'' என்று கேட்டார்.

''மன்னராகிய தனது உத்தரவை செயல்படுத்துவதுதான் அமைச்சரின் பொறுப்பு என்றும், கேள்விகள் கேட்கக் கூடாது,'' என்றும் அவரது வாயை அடைத்து விட்டார் கிருஷ்ணதேவராயர்.

வேறு வழியின்றி முட்டாள்களைத் தேடி அலைந்தார் அப்பாஜி. ஒரு கழுதை மீது ஏறி வந்த ஒருவன், புல்லுகட்டைத் தன் தலையில் சுமந்து கொண்டிருந்தான். அவனிடம், ''புல்லுகட்டையும் கழுதையின் முதுகில் வைக்க வேண்டியதுதானே,'' என்று கேட்டார் அமைச்சர்.

அதற்கு அவன், ''வயதான கழுதை எவ்வளவு சுமையைத் தாங்கும்?'' என்று கோபத்தோடு கேட்டான்.

ஆக, முதன்முதலாக ஒரு முட்டாள் கிடைத்து விட்டான்.

பின்னர் ஒருவன் மரம் ஒன்றின் நுனிக் கிளையில் அமர்ந்தவாறு அதனை வெட்டிக் கொண்டிருந்தான்.

''இப்படி வெட்டினால் நீ கீழே விழுந்து விடுவாய். அந்தப் பக்கமாக அமர்ந்து வெட்டு,'' என்று அவனுக்கு யோசனை கூறினார்.

அதற்கு அவன், ''அப்படி நான் உட்கார்ந்தால் கீழே விழும் மரக்கிளையை தூக்கிக் கொண்டு போய்விடலாம் என்று பார்க்கிறீர்களா? நான் ஏமாற மாட்டேன்,'' என்று கூறியபடி தொடர்ந்து அப்படியே வெட்டத் தொடங்கினான்.

எனவே, இரண்டாவது முட்டாளும் கிடைத்து விட்டான்.

பாட்டி ஒருவர் கஷ்டப்பட்டு விறகுகளில் நெருப்பை எரிய வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். ஆனால், அது பற்றிக் கொள்ளவே இல்லை. அவரிடம் சென்று விவரம் கேட்டார் அப்பாஜி.

''நல்ல காய்ந்த விறகுதான். கொஞ்சம் மண்ணெண்ணை ஊற்றினால் இன்னும் நன்றாக எரியும். மண்ணெண்ணையும், தண்ணீரும் ஒரே நிறத்தில் தானே இருக்கிறது என்று தண்ணீரை ஊற்றினேன். ஆனால், நெருப்பு பற்ற மாட்டேன் என்கிறது,'' என்றார் அந்தப் பாட்டி.

'ஆஹா, மூன்றாவது முட்டாள் கிடைத்து விட்டார்' என்று மனதிற்குள் உற்சாகமாக கூறிக் கொண்டார் அமைச்சர். அப்புறம் ஒரு குளத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்த போது ஒருவன் குளித்து முடித்துவிட்டு கரையில் எதையோ தேடிக் கொண்டிருப்பதை பார்த்தார். அவனிடம் சென்று விவரம் கேட்டார்.

''எனது உடைகளையும், பணத்தையும் ஓரமாக வைத்துவிட்டு குளிக்கச் சென்றேன். குளித்து முடித்து விட்டு வந்து பார்த்தால் அதனைக் காணோம்,'' என்றான் அவன்.

''ஏதாவது அடையாளம் வைத்துவிட்டு குளிக்கச் செல்லக்கூடாதா?'' என்று கேட்டார் அமைச்சர்.

''அடையாளம் வைத்துவிட்டுத்தான் போனேன்,'' என்றான் அவன்.

''என்ன அடையாளம் வைத்திருந்தாய்?'' என்று கேட்டார் அப்பாஜி.

''ஒரு வெண் மேகம் ஆகாயத்தில் இருந்தது. அதன் நிழலைத்தான் நான் அடையாளமாக வைத்திருந்தேன்,'' என்றான் அவன் ரொம்ப புத்திசாலித்தனமாக.

நான்காவது முட்டாளும் கிடைத்து விட்டான். இன்னும் இரண்டு பேர் வேண்டும். ஆனால், அதற்குள் இருட்டத் தொடங்கிவிட்ட தால், அப்பாஜி அரண்மனைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

நேராக கிருஷ்ணதேவராயரிடம் சென்று நான்கு முட்டாள்களின் முகவரிகளையும், அவர்கள் எப்படிப்பட்ட முட்டாள்கள் என்பது பற்றிய விளக்கத்தையும் விரிவாகக் கூறினார் அமைச்சர் அப்பாஜி.

இதனைக் கேட்டு மகிழ்ந்த மன்னர், மேலும் இரண்டு முட்டாள்களை பற்றிக் கேட்டார்.

அதற்கு அப்பாஜி, ''ஒரு மகத்தான சாம்ராஜ்யத்தின் அமைச்சர் வேறு எந்த வேலையும் செய்யாமல் முட்டாள்களைத் தேடி அலைந்தது எத்தனை பெரிய முட்டாள்தனம்! ஆகவே, என்னை ஐந்தாவது முட்டாளாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்,'' என்று பணிவோடும், வெறுப்போடும் கூறினார்.

இந்த பதிலை ஏற்றுக்கொண்ட கிருஷ்ண தேவராயர், ''இன்னும் ஒரு முட்டாள் வேண்டுமே,'' என்று ஆழ்ந்த யோசனையுடனும், ஆர்வத்துடனும் கேட்டார்.

''தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் அரசே! ஒரு நாட்டின் அமைச்சருக்கு என்ன மாதிரியான வேலையை வழங்க வேண்டும் என்ற அடிப்படை உண்மை கூடத் தெரியாமல் இருப்பவர் தாங்கள். நாட்டில் அறிவாளிகள் பற்றிய விவரம் வேண்டும் என்று கேட்டால் அதில் ஒரு அர்த்தம் உண்டு. அதைவிடுத்து, முட்டாள்களைப் பற்றிய விவரத்தை சேகரித்துக் கொண்டு வருமாறு கூறுவது எத்தனை பெரிய முட்டாள்தனம்! எனவே, ஆறாவது முட்டாள் தாங்கள்தான் மன்னா,'' என்றார் பவ்யமாக.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us