PUBLISHED ON : ஜன 11, 2020

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, சாட்சியாபுரம், பெண்கள் உயர்நிலை பள்ளியில், 1974ல், 9ம் வகுப்பு படித்த போது, விடுதியில் தங்கியிருந்தேன். பள்ளி ஆண்டு விழாவுக்காக, மைதானத்தை சுத்தப்படுத்தச் சொன்னார் உடற்கல்வி ஆசிரியை புஷ்பவல்லி.
சுத்தம் செய்த போது, சில மரக்கன்றுகளை அறியாமல் பிடுங்கி விட்டேன். இதைக்கண்ட ஆசிரியை, 'ஒரு மரத்தையாவது உன்னால் உருவாக்க முடியுமா...' என கடுமையாக திட்டினார்.
மறு நாள், அதே இடத்தில், வேப்பம் கன்றை நட்டு கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தேன். பள்ளி படிப்பை முடித்த போது, நிழல் தரும் அளவு வளர்ந்திருந்தது.
பிரிவு உபசார நிகழ்வின் போது, அந்த மரம் வளர்ப்புக்காக பாராட்டி, பரிசு கொடுத்தார் தலைமை ஆசிரியை கெப்சிபாய். உடற்பயிற்சி ஆசிரியை, 'திட்டு வாங்கிதால் மரம் வளர்த்துள்ளாய்...' என வாழ்த்தினார்.
சில நாட்களுக்கு முன், அந்த பள்ளி வளாகத்துக்கு சென்றேன். அந்த மரம் மிகப்பெரிதாக வளர்ந்திருந்தது. அதனடியில், மாணவியர் மகிழ்ச்சியாக விளையாடி கொண்டிருந்தனர். என் கண்ணில் ஆனந்த கண்ணீர் பெருகியது.
அந்த மரத்தை வளர்க்க முடிந்ததை எண்ணி பெருமிதம் அடைந்தேன். திட்டிய ஆசிரியை நினைவாக, என் வீட்டின் முன், ஒரு மரத்தை வளர்த்து வருகிறேன்.
- பா.ஜெயலட்சுமி, விருதுநகர்.
தொடர்புக்கு: 99524 12918
