PUBLISHED ON : செப் 21, 2018

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அடுத்த, திருவெண்காடு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், 1967ல், 5ம் வகுப்பு படித்தேன். தந்தை இறந்ததால், தவித்த என் வகுப்பு நண்பன், பென்சில், நோட்டுப்புத்தகம் வாங்குவதற்கே சிரமப்படுவான்.
அவன் உடன் பிறந்த, அக்கா இரண்டு பேர், படிக்க வசதியின்றி, வீட்டில் இருந்தனர். இதை அறிந்த, எங்கள் வரலாறு பாட ஆசிரியை, உஷா, மூத்த அக்காவை, வீட்டிற்கு அழைத்து, தையல் பயிற்சி கொடுத்தார்.
பயிற்சி முடிந்தவுடன், ஒரு தையல் இயந்திரத்தையும் வாங்கிக் கொடுத்தார். அந்த அக்கா, தையல் தொழில் செய்தார். உடன் தங்கைக்கும் தையல் பயிற்சி அளித்தார். என் நண்பனை நன்கு படிக்க வைத்தார்.
அவன் அரசு வேலையில் சேர்ந்து நல்ல நிலைக்கு வந்து விட்டான். அந்த குடும்பமே பிழைத்தது. என் வயது, 59. அந்த ஆசிரியையை, இன்று நினைத்தாலும் பெருமையாக உள்ளது. அவர் காட்டிய பாதையில், என்னால் முடிந்த உதவியை, செய்து மகிழ்ச்சி அடைகிறேன்.
- டி.செந்தில், சென்னை.
