தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/முழு பூசணிக்காய்! (சிறுகதை)

முழு பூசணிக்காய்! (சிறுகதை)

முழு பூசணிக்காய்! (சிறுகதை)


PUBLISHED ON : ஜூலை 30, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ணையார் பரமசிவனின் நிலத்திற்குப் பக்கத்தில்தான் பரோபகாரி பழனியின் நிலம் இருந்தது.

பண்ணையார் தன் நிலத்தில் கத்திரி, வெண்டை, தக்காளி போன்ற காய்கறி வகைகளைப் பயிரிட்டிருந்தார். பழனி தன் நிலத்தில் பூசணிக்காய் பயிரிட்டிருந்தான்.

தேவையான அளவு தண்ணீர் ஊற்றியும், முறையான உரங்களைப் போட்டும், சரியாகப் பராமரித்தும், பண்ணையாரின் காய்கறித் தோட்டத்தில் ஒரு செடியிலும் ஒரு பூக்கூட பூக்கவில்லை. பல செடிகள் கருகிக் கிடந்தன. பல செடிகள் துவண்டு தலையைத் தொங்கப் போட்டிருந்தன.

பழனியின் நிலத்திலோ பூசணிக்காய்கள் சாம்பல் வண்ணத்தில் பிரமாதமாகக் காய்த்து, தோட்டம் முழுவதும் வியாபித்து இருந்தன. அதைப் பார்க்கப் பார்க்க பண்ணையாருக்கு பற்றிக் கொண்டு வந்தது. கோபம் கொந்தளித்ததுக் கொண்டு எழுந்தது.

ஆத்திரம் கண்ணை மறைத்தது. ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று உள்ளம் துடித்தது. பண்ணையார் தன் நிலத்தின் வரப்பின் மீது நின்று சுற்றும் முற்றும் பார்த்தார்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் அரவமே இல்லை. பண்ணையார், பழனியின் நிலத்தில் இறங்கினார். ஒரு பெரிய பூசணிக்காயை லாவகமாகப் பறித்து, மேல் துண்டால் மறைத்து எடுத்து வந்து, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் மாட்டுவண்டியில் வைத்து விட்டு, முகத்தை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவர் அதிர்ந்தார்.

அதிர்ச்சிக்குக் காரணம் பரதேசி பெருமாள். யாரும் பார்க்க வில்லை என்ற துணிச்சலில், பழனியின் தோட்டத்திலிருந்து தான் ஒரு முழுப் பூசணிக்காயை திருடி எடுத்து வந்ததை, பரதேசி பெருமாள் பார்த்து விட்டான் என்பதை பண்ணையார் அப்போதுதான் உணர்ந்தார்.

பெருமாள் ஒவ்வொரு ஊரிலும் ஒருவாரம் தங்கி இருந்து பிச்சை எடுத்து உண்பான். எட்டாவது நாள் அடுத்த ஊருக்குப் புறப்பட்டு விடுவான். இப்படி ஒவ்வொரு ஊராக சுற்றிச் சுற்றி வருவதாலேயே பொருமாளின் பெயருக்கு முன்னால் பரதேசி என்ற அடைமொழி ஒட்டிக் கொண்டுவிட்டது. பரதேசி என்றால் தேசசஞ்சாரி, ஊர் ஊராகச் சுற்றுபவன் என்று பொருள்.

'இந்தப் பரதேசிப் பயல் ஊருக்குள் சென்று, நான் பழனியின் தோட்டத்திலிருந்து ஒரு பூசணிக்காயைத் திருடி இருக்கிறேன் என்று யாரிடமாவது உளறிக் கொட்டி விட்டால், தன் மானம், மரியாதை என்ன ஆவது' என்ற கிலி பிடித்துக் கொண்டது. அந்தப் பரதேசியிடமும் யாரிடமும் சொல்லாதே என்று சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அது இன்னும் விபரீதம். ஒவ்வொருவராகச் சென்று சொன்னாலும் சொல்வான்.

பண்ணையார் ஒரு முடிவுக்கு வந்தவராய், வண்டியில் ஏறி அமர்ந்தார். வண்டியை பங்களாவுக்கு விரட்டினார். பண்ணையாரின் வண்டி விரைவதையே பார்த்துக் கொண்டு மரத்தடியிலேயே நின்று கொண்டிருந்தான் பரதேசி. அவனது மனம் இப்படி யோசித்தது.

'பண்ணையார் ஒரு பூசணிக்காயைத் திருடி விட்டார் என்று சொன்னால் ஊரில் யாராவது நம்புவார்களா? ஏழை சொல் அம்பலம் ஏறுமா? அவரே பண்ணையார், அவரா ஒரு பூசணிக்காயைத் திருடி இருக்கப் போகிறார்? நீ பொய் சொல்லுகிறாய் என்று நமக்குக் கிடைக்கும் பிச்சை நின்று போனால் நாமல்லவா பட்டினி கிடக்க வேண்டும்.

'அதுவும் ஒருவாரம் இந்த ஊரில் இருந்தாக வேண்டுமே! சரி. கடவுள் விட்டவழி. வாயை மூடிக் கொண்டு மவுனமாக நாம் வந்த வேலையை மட்டும் பார்ப்போம்' என்று முடிவெடுத்து, மெதுவாக ஊருக்குள் நுழைந்தான்.

அங்கே-

முச்சந்தியில் பண்ணையார் வீட்டு வேலைக்காரன் நின்று கொண்டு, ''இதனால் சகலமானவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், இன்று முதல் நான்கு நாட்களுக்கு ஊரில் உள்ள அனைவருக்கும் பண்ணையார் விருந்து கொடுக்கிறார். இன்று கீழைத்தெரு, நாளை மேலைத் தெரு, மூன்றாம் நாள் வடக்குத் தெரு, நான்காம் நாள் தெற்குத் தெரு. எல்லாரும் தவறாம வந்திருந்து விருந்து சாப்பிட வேணும். இது பண்ணையார் உத்திரவு!'' என்று அறிவித்துக் கொண்டிருந்தான்.

ஊர் மக்கள் ஒருவரை ஒருவர் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டனர். 'என்ன சங்கதி? ஏன் பண்ணையார் திடீர்னு ஊர் மக்களுக்கு விருந்து கொடுக்கிறார்னு' ஒருவரை ஒருவர் பார்த்துக் கேட்டுக் கொண்டனர். யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை.

பரதேசி பெருமாள் மட்டும் பூடகமாக மனதிற்குள் சிரித்துக் கொண்டான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெருவாக நாலு நாளும், நாலு தெரு மக்களும் பண்ணையார் வீட்டுக்குச் சென்று வயிறு நிறைய விருந்து சாப்பிட்டு விட்டு வந்தனர்.

பரதேசி பெருமாள் மட்டும் அந்தப்பக்கமே தலைகாட்டவில்லை. ஒவ்வொரு நாளும் விருந்துக்குப் போகாத தெருவில் பிச்சையெடுத்து உண்டு பசியை தீர்த்துக் கொண்டான்.

''ஏம்பா! பண்ணையார் வீட்டுல விருந்து கொடுக்கறாங்களே, போய் அங்க சாப்பிடக் கூடாதா?'' என்று கேட்டவர்களிடம்,

''தாயே! அந்த விருந்து ஊர்க்காரங்களுக்குத் தான். ஊர் ஊராச் சுத்துற பரதேசிக்கில்லே!'' என்றான்.

''என்னமோ போ! நீயும் உன் வக்கணையும்!'' என்று சொல்லிக் கொண்டே பரதேசிக்குப் பிச்சை போட்டனர். பரதேசி அந்த ஊரிலிருந்து அடுத்த ஊருக்குப் புறப்பட்டுப் போகும் போது, வழியில் பண்ணையார் எதிர்ப்பட்டார்.

பண்ணையாரைப் பார்த்ததும் பரதேசிக்கு சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது. குலுங்கி குலுங்கிச் சிரித்தான்.

பண்ணையார், ''ஏண்டா! பரதேசி நாயே! எதுக்குடா என்னைப் பார்த்துச் சிரிக்குறே?'' என்றார்.

'இல்லை! ஒரு முழுப் பூசணிக்காயை திருடிட்டு, அதை சோத்தைப் போட்டு மறைச்சிருக்கியே! சிரிக்காம என்ன செய்ய?'' என்றான் பரதேசி.

பண்ணையார் உறைந்தார். முழுப்பூசணிக்காயை சோத்துல மறைக்க முடியுமா என்ற பழமொழி இப்படித்தான் உருவானது குட்டீஸ்...

***



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us