PUBLISHED ON : ஏப் 25, 2014

உழைப்பு என்பது வாழ்நாளெல்லாம் வருவது. உழைப்பிற்கு என ஒரு நாள், அது 'உழைப்பாளர் தினம்!' மே தினம்.
தமிழக மே தினம்:
தமிழ் நாட்டில் உழைப்பாளர்களின் தினமான 'மே' தின விழாவை வேர் ஊன்ற செய்தவர் சிங்காரவேலர் என்னும் சிந்தனையாளர். இன்றைய சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்குவது சிங்காரவேலர் பெயரில் அமைந்துள்ள கட்டடத்தில்தான்!
மே தினம் பற்றிய சிந்தனையை மக்கள் மத்தியில் நிலைப்படுத்தவே சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், 'மே தினப் பூங்கா' அமைந்துள்ளது.
மே தின கொடியேற்றம்!
இந்த உன்னத நாளை கொண்டாடி வரலாறு படைத்தவர் சிந்தனையாளர் சிங்காரவேலர். தமிழகத்தில் மட்டுமல்ல... இந்தியாவில் மட்டுமல்ல, ஏன், ஆசியக் கண்டத்திலேயே முதன் முதலாக இவ்விழாவை கொண்டாடி வரலாறு படைத்தவர் அவர்.
1923ம் ஆண்டில் மூவர்ணக் கொடியுடன் கத்தி அரிவாள் சின்னம் இடம் பெற்ற கொடியை ஏற்றி அந்த நாளை அவர் கொண்டாடினார். பிரிட்டிஷ் அரசு அதனை தண்டனைக் குரிய குற்றமாக அறிவித்தது. அவர் மீது கான்பூர் சதி வழக்கையும் தொடுத்தது.
1925ம் ஆண்டில் கான்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்த மாநாட்டின் தலைவரே சிங்காரவேலர்தான்.
தமிழகத்தில் இந்துஸ்தான் லேபர் கிசான் கட்சியை உருவாக்கினார். பல்வேறு இயக்கங்களோடும், அரசியலோடும் தொடர்புடைய இந்த அறிஞரை பெருமைப்படுத்த வேண்டுமென்றுதான் வட சென்னையின் மாவட்ட ஆட்சி தலைவர் மாளிகைக்கு அந்நாளைய ஆட்சியாளர்கள் 'சிங்காரவேலர் மாளிகை' என்ற பெயரை சூட்டியதுடன், அவரின் சிலையையும் அந்த மாளிகையின் உட்பகுதியில் நிறுவியுள்ளனர்.
சென்னையிலுள்ள 'நேப்பியர் பூங்கா' எத்தனையோ அரசியல் நிகழ்ச்சிகளை கண்ட ஒன்று. அக்காலத்தில் அந்த பூங்கா மக்களின் கிளர்ச்சி கூடாரமாக விளங்கியதை அறிந்தவர்கள் அந்த பூங்காவின் பெயரை மாற்றி 'மே தினப் பூங்கா' என்றே பெயர் மாற்றமும் செய்தனர்.
ஒவ்வொரு மே தினமும் வருகிற பொழுதும் அனைத்து தொழிலாளர்களும் திரண்டு ஊர்வலமாக வந்து தங்களின் மரியாதையை செலுத்துகின்றனர்.
