PUBLISHED ON : ஏப் 25, 2014

˜மசையின் மேலிருந்த உணவை வயிறு முட்ட உண்டன. பெரிதாக ஏப்பம் விட்டன.
நடந்த களைப்பு உண்ட மயக்கம் நான்கிற்கும் தூக்கம் வரத் தொடங்கியது. 'எங்கே நன்றாகத் தூங்கலாம்?' என்று அவை அந்த வீட்டை ஆராய்ந்தன.
அங்கிருந்த அடுப்பின் அருகே படுத்தது பூனை. கதவின் அருகே படுத்துக் கொண்டது நாய். பரணில் குறுக்காக இருந்த வாரையின் மேல் அமர்ந்தது சேவல்.
வீட்டிற்குள் இடம் இல்லாததால் வெளியே வந்தது கழுதை. அங்கிருந்த வைக்கோல் போரின் அருகே படுத்தது.
நான்கும் நன்றாகத் தூங்கத் தொடங்கின.
அஞ்சி ஓடிய திருடர்கள் ஓரிடத்தில் சந்தித்தனர்.
''அவை பேய்களாகவே இருக்கட்டுமே. அவற்றால் நம்மை என்ன செய்ய முடியும்? எதற்கும் அஞ்சாத நாம் பயங்கரமான ஓசையைக் கேட்டு அஞ்சுவதா? அங்கே சென்று என்ன நடக்கிறது என்று பார்ப்போம்,'' என்றான் திருடர் தலைவன்.
எல்லாரும் மீண்டும் அந்த வீட்டின் அருகே வந்தனர். வீட்டிற்குள் எந்த ஓசையும் எழவில்லை. அமைதியாக இருந்தது.
''ஒன்றும் இல்லாததற்கு நாம் அஞ்சி விட்டோம். நம்மில் யாராவது ஒருவன் வீட்டிற்குள் சென்று விளக்கை ஏற்றட்டும். பிறகு அனைவரும் செல்லலாம்,'' என்றான் திருடர் தலைவன்.
அவர்களில் ஒருவன் வீட்டிற்குள் செல்ல முயன்றான். அடி மேல் அடி வைத்து மெல்ல நடந்து வீட்டிற்குள் சென்றான். அங்கே இருட்டில் தட்டுத் தடுமாறினான்.
அடுப்பில் நெருப்பு இருக்கும். தீப்பற்ற வைத்து விளக்கை ஏற்றலாம் என்று நினைத்தான் அவன்.
அடுப்பு அருகே சென்றான். அங்கு படுத்திருந்த பூனையின் கண்கள் அவனுக்கு நெருப்பைப் போலத் தெரிந்தன. தன் கையிலிருந்த குச்சியைப் பூனையின் கண் அருகே கொண்டு சென்றான்.
தூக்கம் கலைந்ததால்,பூனை அவன் மேல் பாய்ந்தது. தன் கால் நகங்களால் அவன் முகத்தைப் பிராண்டியது.
பேய்தான் தன்னைத் தாக்குகிறதுஎன்று நினைத்த அவன், ''ஐயோ'' என்று அலறியபடி கதவருகே வந்தான். அங்கு படுத்திருந்த நாயை மிதித்து விட்டான்.
கோபத்துடன் விழித்த நாய், லொள் லொள் என்று குரைத்தபடியே அவன் காலைக் கடித்துக் குதறியது.
வலி தாங்க முடியாமல் அலறிய அவன் மேலும், கீழும் குதித்தான். வாரையின் மேல் இருந்த சேவலின் மீது அவன் கை பட்டது.
விழித்த சேவல் கொக்கரக்கோ என்று கூவியது. அவன் தலையில் பலமுறை கொத்தியது.
'ஐயோ! இந்த வீட்டிற்குள் எங்கும் பேய்களாக உள்ளன. தப்பிப்போம்' என்று நினைத்த அவன் வெளியே ஓடி வந்தான்.
வைக்கோல் போரின் அருகே படுத்திருந்த கழுதையின் மேல் விழுந்தான். விழித்த கழுதை காள் காள் என்று கத்தியபடி அவனை ஓங்கி உதைத்தது.
பல குட்டிக் கரணங்கள் அடித்து விழுந்தான் அவன்.
''ஐயோ! செத்தேன்!'' என்று அலறியபடியே ஓட்டம் பிடித்தான்.
வெளியே நின்றிருந்த திருடர்கள் அவனைத் தடுத்து நிறுத்தினர்.
''என்ன நடந்தது? ஏன் அலறியபடியே ஓடி வருகிறாய்?'' என்று கேட்டனர்.
''ஐயோ! நான் எப்படிச் சொல்வேன்? நம் வீட்டில் எல்லா இடங்களிலும் பேய்கள் உள்ளன. எப்படியோ அவற்றிடம் இருந்து தப்பித்து வந்து விட்டேன். அதை நினைத் தாலே என் உள்ளம் நடுங்குகிறது. நாம் யாரும் இங்கே இருக்க வேண்டாம். எங்காவது ஓடி விடுவோம்,'' என்று பரபரப்புடன் சொன்னான் அவன்.
''உள்ளே என்ன நடந்தது? அமைதியாகச் சொல்,'' என்று கேட்டனர் அவர்கள்.
''நான் ஓசை எழுப்பாமல் மெல்ல நடந்து வீட்டிற்குள் சென்றேன். நான் வருவதை எப்படியோ அங்கிருந்த பேய்கள் அறிந்து விட்டன. எல்லாப் பேய் களும் எனக்காக அமைதியாகக் காத்திருந்தன.
இதை அறியாத நான் விளக்கு ஏற்றலாம் என்று அடுப்பின் அருகே சென்றேன்.
அங்கே படுத்திருந்த குட்டிப் பேய் ஒன்று என் மேல் பாய்ந்தது. தன் கூர்மையான நகங்களால் என் முகத்தைக் கிழித்தது. அதனிட மிருந்து தப்பித்த நான் வெளியே வர முயன்றேன். கதவருகே ஒளிந்திருந்த பேய் ஒன்று என்னைப் பார்த்து விட்டது. என் மேல் மோதிய அது பயங்கரமாகக் கத்தியது. கையிலிருந்த கத்தியால் என் கால்களைக் குத்தியது. வேதனை தாங்க முடியாமல் நான் துடித்தேன்.
மேலே இருந்த வாரையின் மேல் கை வைத்தேன். அங்கும் ஒரு பேய் இருந்து இருக்கிறது. பயங்கரமாகக் கத்திய அது என் தலையில் கொத்தியது. தப்பிக்க நினைத்த நான் வெளியே ஓடி வந்தேன். வைக்கோல் போரின் அருகில் பெரிய பேய் ஒன்று எனக்காகக் காத்திருந்தது. இதை அறியாத நான் இருட்டில் அதன் மேல் விழுந்து விட்டேன்.
அது என்னை ஓங்கி உதைத்தது. பல குட்டிக் கரணங்கள் போட்டேன். நான் சாகாமல் இருப்பது அதிசயம்தான்,'' என்று மூச்சிறைக்கச் சொன்னான்.
இதைக் கேட்ட அவர்கள் எல்லாரும் நடுங்கினர். ''இனி இங்கே இருக்க வேண்டாம். எங்காவது சென்று விடுவோம்!'' என்று முடிவு செய்தனர்.
அங்கிருந்து ஓட்டம் பிடித்த அவர்கள் மீண்டும் அங்கு வரவே இல்லை. பொழுது விடிந்தது. அந்த வீட்டில் எல்லா பொருள் களும் இருப்பதை நான்கு விலங்குகளும் பார்த்தன.
''நமக்கு இங்கே எந்தக் குறையும் இல்லை. இங்கேயே தங்கி விடலாம். மகிழ்ச்சியாக இருக்கலாம்,'' என்றது கழுதை.
மற்ற மூன்றும் அதற்கு ஒப்புக் கொண்டன.
நான்கும் அங்கேயே தங்கி விட்டன. எப்போதும் அவை மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டே அங்கு இருந்தன.
- முற்றும்.
