PUBLISHED ON : ஏப் 25, 2014
இயேசு ஆண்டவரின் இளமை காலத்தை பற்றி, 'பைபிளில்' கூறப்பட்டுள்ளது. பெற்றோருக்கு பணிந்து நடந்து, ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும், மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தவர். இயேசு பெருமானின் போதனைகளை கேட்டவர்கள், 'நாசரேத்தூர் தச்சனின் மகன் அல்லவா?' என அவரை வியந்தனர்.
இறை மகன் இயேசு, தந்தையின் நிலையில் இருந்த சூசை முனிவரோடு உழைப்பின் மேன்மையை போற்றி தச்சராகவும் விளங்கினார்.
இயேசு, மரியன்னை, சூசை முனிவர் எனும் மூவரைக் கொண்டது அந்தத் திருக் குடும்பம்.
வறுமையிலும் உழைத்து வாழ்வதில் இறை மகிழ்வை பெற்று அவர்கள் வாழ்ந்தனர் என்று மறைநூல் அறிஞர்கள் நவில்கின்றனர்.
'உழைக்க மறுப்போருக்கு உண்ண உரிமையில்லை' என முழங்கும் பவுல் அடியார், தான் பைபிளில் எழுதிய திருமுகத்தில் 'உழைப்போர், மனிதருக்கு உகந்தவராய் காட்டி கொள்ளாமல் ஆண்டவருக்கு அஞ்சி முழு மனதோடு வேலை செய்யுங்கள்' என்று கூறுகின்றார்.
முதலாளி- தொழிலாளி முரண்பாடுகளை களைய எண்ணிய அவ்வடியார், 'பணியாளர்களை தங்களுக்கு இணையாக நடத்துங்கள். விண்ணிலுள்ள ஆண்டவர் ஒருவரே தலைவர் என உணருங்கள்' என்று அறிவுறுத்துகிறார்.
அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட 'மே' தின கொண்டாட்டம், உலகம் முழுவதும் 1890ம் ஆண்டு முதல் பரவலானது.
சூசை முனிவரை 'தொழிலார்களின் பாதுகாவலர்' என்று வழிவழியாய் போற்றி வந்ததால், 'மே' தினத்தை தொழிலாளர்களின் பாதுகாவலர் சூசை தினம் என்று சிறப்பிக்கும் படி 1950ம் ஆண்டில் போப் அறிவித்தார்.
சென்னை அம்பத்தூரில், தொழிலாளர்களின் பாதுகாவலர் 'சூசை முனிவர்' பெயரில் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது.
இங்கே அனைவருக்கும் பயன்படும்படி சமூக நலக்கூடமும் உள்ளது. பத்து நாட்கள் சிறப்புற நடைபெறும் தொழிலாளர் சூசையப்பர் திருவிழா.
