PUBLISHED ON : அக் 31, 2020

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல், எஸ்.ஆர்.என். அரசு உயர்நிலைப் பள்ளியில், 1971ல், 11ம் வகுப்பு படித்தபோது, ஒழுக்கத்தை கற்பித்து நல்வழிப்படுத்தி உதவினர் ஆசிரியர்கள்.
அனைத்து மாணவ, மாணவியரும், எஸ்.எஸ்.எல்.சி., இறுதி தேர்வில் நல்ல மதிப்பெண் பெற தீவிர முயற்சி எடுத்தார், தலைமை ஆசிரியர் சீதாராமன்.
இரவில் பள்ளி வகுப்பறையிலே, மாணவர்கள் தங்கி படிக்க ஏற்பாடு செய்தார். அதிகாலை தான் வீடு செல்ல முடியும். அவர் எண்ணத்தை புரியாத சிலர் இரவு வகுப்பை, 'கட்' அடித்து, சினிமாவுக்கு போவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இதை அறிந்து, தினமும் நள்ளிரவு, 12:00 மணிக்கு, பள்ளிக்கு செல்வார். படிக்கும் மாணவர்களை கண்காணிப்பார். வகுப்பறையில் இல்லாதவர்களை மறுநாள் இறை வணக்க கூட்டத்துக்கு பின் அழைப்பார். சக மாணவியர் முன், குச்சியால் அடித்து, தண்டனை வழங்கி நல்வழிப்படுத்துவார்.
அவரது அயராத கண்காணிப்பில், படித்து நல்ல மதிப்பெண் பெற்றோம். நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளோம்.
தற்போது, என் வயது, 64; அரசுத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். தலைமையாசிரியர் தெய்வமாகி விட்டாலும், குருவாக மனதில் நிற்கும் அவரது திருவடியை வணங்குகிறேன்.
- ஆர்.சுப்புலட்சுமி, விருதுநகர்.
தொடர்புக்கு: 95664 06714
