PUBLISHED ON : மே 09, 2014

அறையினுள்ளே குறட்டை ஒலி கேட்டது. ஓசைப்படுத்தாமல் கதவைத் திறந்தான். அங்கு ஓர் அழகிய பெண் உட்கார்ந்திருந்தாள். அவள் அரச குமாரியாகத் தான் இருக்க வேண்டும். அவள் மடியில் தனது தலையை வைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தது அந்தக் கொடிய மிருகம்.
மூன்றாவது வேட்டைக்காரன் தாமதிக்கவில்லை. அந்த மிருகத்தின் தலையை ஒரே வீச்சில் சீவித் தள்ளினான். தனக்கு விடுதலை கிடைத்ததில் அந்த இளவரசிக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. அந்த வீரனுக்குத் தன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பரிசாகக் கொடுத்தாள்.
அடுத்த அறையில் ஒரு கொடிய மிருகம் இளவரசியின் மடியில் தலை பதித்துத் தூங்கிக் கொண்டிருந்தது. அதையும் கொன்று அவளுக்கு விடுதலை அளித்தான். மூன்றாவது அரசகுமாரியின் மடியில் தூங்கிக் கொண்டிருந்தது இன்னொரு மிருகம். இரண்டு மிருகங்களைக் கொன்றவனுக்கு மூன்றாவது எம்மாத்திரம்? அதையும் கொன்று, மூன்று ராஜகுமாரி களையும் விடுதலை செய்துவிட்டான். ராஜகுமாரிகள் அந்த வாலிபனைக் கடவு ளுக்கும் மேலாக மதித்து வாழ்த்தி மகிழ்ந்து போயினர்.
மேலே வருவதற்கு அடையாளமாக மணியை ஒலித்தான். கூடை கீழே வந்தது. ஒவ்வொரு ராஜகுமாரி யாக அதில் ஏற்றி மூவரையும் மேலே அனுப்பினான். கடைசியில் தான் மேலே போக மணி ஓசை கொடுத்ததும் கூடை கீழே வந்தது. அப்போதுதான் குள்ளன் தன் அண்ணன்மார்களைப் பற்றி எச்சரித்தது நினைவுக்கு வந்தது குட்டித்தம்பிக்கு. ஆகவே, கூடைக்குள் ஒரு பெரிய கல்லைத் தூக்கி வைத்துக் கயிற்றை ஆட்டி மேலே இழுக்கும்படி சமிக்ஞை செய்தான். கூடை மேலே உயர்ந்தது. பாதி வழி போனதும் மேலே இருந்த அண்ணன் மார்கள் இருவரும் கயிற்றைத் துண்டித்து விட்டனர்.
இப்படி ஏதாவது நடக்கும் என்று அவன் எதிர்பார்த்தது நடந்தே விட்டது. கல்லுடன் கூடை பொத்தென்று கீழே விழுந்தது. ராஜகுமாரிகளுக்கு விடுதலை அளித்த தங்கள் தம்பியை ஒழித்துவிட்டோம் என்று மகிழ்ச்சி அடைந்தனர் அண்ணன்மார்கள்.
தங்களை மீட்டது யார் என்ற உண்மையைக் கூறினால், அவர்களைக் கொன்றுவிடுவதாகப் பயமுறுத்திப் பணிய வைத்து, அரண்மனையை நோக்கிப் பயண மானார்கள் இளவரசிகளுடன் அவ்விருவரும்.
'குள்ளனின் வார்த்தையைக் கேட்காமல் அண்ணன்மார்களுடன் வந்ததன் பலன் தான் இந்தப் பாழுங்கிணற்றில் பரிதாபமாகச் செத்து மடிய வேண்டியது' என்று வேதனை யுடன் சுற்றும், முற்றும் பார்த்தான் மூன்றாவது வேடன். அப்போது சுவரிலுள்ள ஒரு மாடத்தில் ஒரு புல்லாங்குழல் இருப்பதைக் கண்டான்.
'ஆமாம், இது இப்போது எதற்கு? இதை வாசித்தால் கேட்டு மகிழவோ, ஆனந்தப் பட்டு ஆடவோ இந்தப் பாழுங்கிணற்றில் யார் இருக்கின்றனர்?' என்று அலட்சியமாகக் கூண்டுப் புலியாக இங்கும், அங்கும் நடந்து கொண்டேயிருந்தான்.
தரைப் புழுதி, பட்டுப் போலானதுதான் மிச்சம். ஒரு வழியும் ஏற்படவில்லை. அடிக் கடி புல்லாங்குழலின் நினைவு மட்டும் வந்து கொண்டிருந்தது. வெறுப்புடன் அதை எடுத்து மூன்று ஒலிகளை உண்டாக்கினான். அடுத்த விநாடியே மூன்று குள்ளர்கள் வந்து அவன் முன்னே குதித்தனர். வியப்படைந்த வேட்டைக்காரன் வேகமாகப் பலவித ஒலிகளை உண்டாக்கினான். தொடர்ந்து ஒவ்வொரு ஒலிக்கும், ஒரு குள்ளன் வீதம் வந்து குழுமி விட்டனர். அத்தனை குள்ளர் களும் அவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்டனர்.
''நான் உடனே மேலே போகவேண்டும் என்றான் குட்டித்தம்பி. குள்ளர்கள் அவனுடைய தலை முடியை ஆளுக்குக் கொஞ்சமாகப் பிடித்துக் கொண்டு மேலே எழுப்பினர். அவர்களோடு அவனும் அந்தரத்தில் மிதக்கலானான். சில விநாடி களில் குள்ளர்கள் அவனை மேலே கொண்டு வந்து விட்டனர். குள்ளர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அரண்மனையை நோக்கிக் கிளம்பினான். அவன் நகரத்துக்கு வந்தபோது நகரில் திருமணக் கோலாகலம் திருவிழாவாக அமர்க்களப்பட்டு கொண்டிருந்தது. இளவரசிகளுக்கு நாளைக்குக் கல்யாணமாம்.
குட்டித் தம்பி, அவசரம் அவசரமாக அரண்மனைக்குள் புகுந்தான். மன்னர், ஓர் அறையில் தம் மூன்று குமாரிகளுடன் உட்கார்ந்திருந்தார். திடீரென்று அங்கு நுழைந்த அவனைக் கண்ட மூன்று அரசகுமாரிகளும் மகிழ்ச்சியால் திக்கு முக்காடிப் போய் மூர்ச்சையாயினர். 'அரசர் இதைத் தவறாகப் புரிந்து கொண்டு தம் பெண்களுக்குத் தீங்கு செய்ய வந்தவன்' என்று எண்ணி அவனைச் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். ராஜகுமாரி களுக்கு நினைவு திரும்பியதும், சிறையில் அடைத்திருக்கும் வாலிபனை விடுதலை செய்யும்படி கேட்டுக் கொண்டனர். காரணம் கேட்ட தந்தையிடம், ''உண்மையைச் சொல்வதில்லை என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறோம். அதைக் கூற முடியாது!'' என்று அழுதனர்.
இதில் ஏதோ சூது இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார் மன்னர்.
''என்னிடம் கூற வேண்டாம். இந்த அறையிலுள்ள குத்துவிளக்கிடம் கூறுங்கள். விளக்கு நம் குலதெய்வம் இல்லையா?'' என்று கூறி, அறையை விட்டு வெளியேறி அவர்கள் சொல்வதைக் கேட்கும்படியான ஓர் இடத்தில் மறைந்து கொண்டார். மூத்த இளவரசி நடந்தது நடந்தபடி விளக்குத் தேவதையிடம் கூறி முறையிட்டாள். மன்னருக்கு உண்மை தெரிந்தது.
உடனே மணமகனாகப் போகும் மூத்த சகோதரர்கள் இருவரையும் கைது செய்து கைகளிலும், கால்களிலும் கனமான சங்கிலி மாட்டிப் பாதாளச் சிறைக்குள் தள்ளினார். அங்கு அனுப்பப்படுபவர் மறுபடியும் வெளி உலகைப் பார்ப்பதே கிடையாதாம். சிறைப் பட்டிருந்த குட்டித்தம்பியை வரவழைத்து அவனுக்குத் தம் குமாரிகள் மூவரையும் மனைவியாக்கி மகிழ்ந்தார் மன்னர்.
முற்றும்.
