PUBLISHED ON : ஆக 16, 2013

முதல் ஸ்டோரி
ஒருநாள் இரவு. மூன்று வீரர்கள் தங்கள் குதிரைகள் மீது சவாரி செய்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு பாலைவனம் வழியே அப்போது போய்க் கொண்டிருந்தனர். ஒரு வறண்டு போன ஆற்றின் மணல் படுகைக்கு அவர்கள் வந்த போது, திடீரென்று எங்கிருந்தோ ஒரு அசரீரி கேட்டது.
''நில்லுங்கள்!'' என்று அதட்டலாக இருந்தது அந்த குரல்.
குதிரை வீரர்கள் அதிர்ந்து போய் அந்தக் கட்டளைக்குப் பணிந்து தம் குதிரைகளை இழுத்துப் பிடித்து நிறுத்தினர்.
அசரீரி தொடர்ந்து பேசியது.
''குதிரைகளை விட்டு இறங்குங்கள்!'' அதன்படியே மூவரும் குதிரைகளிலிருந்து இறங்கினர்.
மறுபடியும் அசரீரி சொல்லியது.
''மணலிலிருந்து கொஞ்சம் கூழாங்கற்களை எடுத்து உங்கள் பையில் போட்டுக் கொள்ளுங்கள்!''
மூவரும் அப்படியே செய்தனர்.
பிறகு அசரீரி, ''நீங்கள் மூவரும் நான் கட்டளை இட்டபடியே செய்தீர்கள். நாளை சூரியன் உதயமாகும் போது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியும், ஒரு சோகமும் உண்டாகும்! போய் வாருங்கள்,'' என்று சொல்லி அனுப்பியது.
மர்மமான அந்தப் பேச்சுப் புரியாமல் மூவரும் குழம்பினர். ஆனாலும் அசரீரியின் கட்டளையை ஏற்று, குதிரை மீது ஏறித் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.
மறுநாள் காலை சூரியன் உதித்த போது அவர்கள் தங்கள் பைகளில் கையை விட்டு, போட்ட கூழாங்கற்களை எடுத்து பார்த்தனர். ஆச்சரியத்தாலும், ஆனந்தத்தாலும் அவர்கள் திணறினர். ஏனென்றால் அந்தக் கூழாங்கற்கள் அத்தனையும் வைரக்கற்களாக மாறி இருந்தன. அசரீரி சொன்னபடி அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.
அடுத்தது, 'ஒரு சோகம் ஏற்படும்' என்று சொன்னதே அது என்னவாக இருக்கும் என்று யோசித்தனர்.
''அடடா! இப்படியாகும் என்று தெரிந்திருந்தால் இன்னும் நிறையக் கற்களை எடுத்திருக்கலாமே!'' என்றான் ஒருவன்.
உ டனே, மற்றவன் சொன்னான்.
''இப்போது புரிகிறது இதுதான் அந்த சோகம்!''
இது ஒரு பெரிய சோகம்தானே!
இரண்டாம் ஸ்டோரி
ஒரு காட்டில் வெட்டுக்கிளியும், எறும்பும் நண்பர்களாக இருந்தனர். கோடைக்காலம் வந்தால் போதும், எறும்பு ஓடியாடி தானியங்களை தன் பொந்தில் சேமித்து வைத்துக் கொள்ளும். கோடைக்காலத்தில் மரம் செடி கொடிகள் பூத்துக்குலுங்கும். ஆனால், எறும்பு அவற்றை வேடிக்கை பார்த்து நேரத்தை வீணாக்காது. ஆனால், வெட்டுக்கிளியோ அப்படியல்ல... கோடை காலம் முழுவதும் ஆடிப்பாடி வேடிக்கை பார்த்து பொழுதைச் செலவிடும். மழைக்காலத் திற்கு உணவு சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணமே அதற்கு கிடையாது.
மழைக்காலம் வந்தது. மழை கொட்டியது. விடாமல் கொட்டியது. வெளியே தலைநீட்ட வழி யில்லை. எறும்பு தன் பொந்துக்குள் புகுந்து கொண்டது. பசித்தபோது சேமித்து வைத்த உணவு தானியங்களைச் சாப்பிடுவதும், தூங்குவதும் என்று நிம்மதியாக சந்தோஷமாக காலத்தை ஓட்டியது. மழை அதன் வாழ்வை பாதிக்கவில்லை. பாவம் வெட்டுக்கிளி! பசியால் துடித்தது. பசி தாங்காமல் எறும்பிடம் சென்று உணவுப் பிச்சை கேட்டது.
''ஆமாம் வெட்டுக்கிளியே! கோடைக்காலத்தில் தானியங்களை சேமிக்காமல், என்ன செய்து கொண்டிருந்தாய்?'' என்று எறும்பு கேட்டது.
''நான் பாடிக் கொண்டிருந்தேன்!''
''அப்படியானால், மழைக்காலம் முழுவதும் ஆடிக்கொண்டிரு!''
''வயிறு பசிக்கிறது. பசியில் எப்படி ஆடிப்பாட முடியும்?''
''பசித்தால் சாப்பிடுவதுதானே!''
''சாப்பாடுதான் இல்லையே?''
''என்னிடம் உள்ளது. உன்னிடம் மட்டும் ஏன் இல்லை?''
''இந்த முறைமட்டும் உணவு கடனாகக் கொடு. அடுத்த முறை இப்படி வெட்டியாக ஆடிப்பாடி வீண்பொழுது போக்காமல், உணவுத் தேடிக் கொள்வேன். உன் கடனையும் திருப்பித்தந்து விடுவேன்,'' என்று உறுதியளித்தது வெட்டுக்கிளி.
''நீ உணவை திருப்பத் தர வேண்டாம். அடுத்த முறை இப்படி வந்து கேட்காமலிருந்தாலே போதும்,'' என்று கூறியது எறும்பு!''
தன் தவறை உணர்ந்து கொண்டது வெட்டுக்கிளி.
***
