PUBLISHED ON : ஜூலை 24, 2015

அரிகோவின் அதிசய அறுவை சிகிச்சை முறையைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று மருத்துவ விஞ்ஞானிகள் பலரும் தீர்மானித்தனர். அவர்களைப் பொருத்தமட்டில் இந்த விவகாரத்தை வேறொரு கோணத்தில் ஆய்வு செய்ய விரும்பினர்.
அதாவது, வலி எதுவும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்வது என்றால் வசியம் செய்யும் முறையால் மட்டுமே முடியும். அப்படியானால் சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பாக நோயாளிகளை வசியப்படுத்தும் சூட்சுமத்தை அரிகோ செய்து விட்டே, சிகிச்சையைத் தொடங்குவதாக அவர்கள் நிச்சயமாக நம்பினர்.
எனவே, இதுதொடர்பாக 'அவ்ரா' என்ற அமைப்பை ஆய்வுக் குழுவினர் நாடினர். 'அவ்ரா' என்றால், 'பிராணசக்தி ஆய்வுக் கழகம்' என்று பொருள். இந்தக் கழகம், மனித உடம்பைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாத ஒளிவட்டம் ஒன்றிருக்கிறது என்று கூறிவந்தது. மேலும், அந்த ஒளிவட்டத்தின் மின் சக்தியைக் கண்டுபிடிக்கும் நுண்ணிய கருவியை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தது.
பின்னர் ஒருவாறு முடிவுக்கு வந்தனர். நோயாளிகளை வசியம் செய்த பிறகு அறுவை சிகிச்சை செய்து பார்த்து அரிகோவின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவது என்று தீர்மானித்தனர். இந்த அபாயகர சோதனையை நடத்துவதற்கு அவர்களில் ஒரு மருத்துவருக்கு நிரம்ப பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
கண்புரை நோய் உள்ள நோயாளி ஒருவர் அழைத்து வரப்பட்டார். அவரை முதலில் அந்த மருத்துவர் வசியம் (ஹிப்னாட்டிசம்) செய்யத் தொடங்கினார். அவர் நன்கு வசியமானதும் ஒரு சாதாரண கத்தியை எடுத்து அவரது கண்ணிற்குள் மெதுவாக விட முயன்றார்.
அவ்வளவுதான். அந்த நோயாளி, 'அம்மாடி... ஆத்தாடி...'' என்று கூவி அலறியடித்துக் கொண்டு எழுந்து ஓடினார்.
ஆய்வுக் குழுவினர் அனைவரும் இதனைப் பார்த்து மிரண்டு போய்விட்டனர்.
''வசியமாவது, மண்ணாவது. கத்தியை விட்டு யார் கண்ணிலும் குடையவே முடியாது. அரிகோவிடம் வேறு ஏதோ மாய சக்தி இருக்கிறது. அது மனித சக்தியை விடப் பல மடங்கு பெரியது. ஆகவே, அவரது நடவடிக்கைகளை ஆய்வு செய்வது என்பது வெட்டி வேலை,'' என்று அவர்கள் தங்கள் முயற்சிகளைக் கைகழுவி விட்டு, தங்கள் வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டனர்.
டாக்டர் ஜோஸ் ஹார்டன்சியா டி மடியராஸ். இருதய நோய் வல்லுநர். இவரது நண்பரின் மனைவிக்கு குடலில் ஏதோ பிரச்சனை. எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் அடைப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டது.
அது பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட பிறகு தான் தெரிந்தது. அவருக்கு ஏற்பட்டிருந்தது புற்று நோய்க் கட்டி என்று. மீண்டும் அந்தப் பெண்மணிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போது தான், புற்றுநோய் வயிறு முழுவதும் பரவி வியாபித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, மருத்துவர்கள் நம்பிக்கை இழுந்து விட்டனர். இதற்கு மேல் எவ்வளவு உயரிய மருத்துவ சிகிச்சைகள் அளித்தாலும் இந்தப் பெண்ணை உயிர் பிழைக்க வைப்பது என்பது முடியவே முடியாது என்று தீர்மானித்தனர். எனவே, அவருக்கான சிகிச்சைகள் அனைத்தும் கைவிடப்பட்டன.
இதுபோன்ற தருணத்தில்தான் மடியராஸுக்கு அரிகோவைப் பற்றித் தெரியவந்தது. கடைசி முயற்சியாக நண்பரின் மனைவியை காங்கோனாய்க்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துப் பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தார்.
நோய் முற்றிய நிலையில் இருந்ததால் அவரைக் காரிலோ, ரயிலிலோ அழைத்துச் செல்வது உசிதமானதாக இருக்கவில்லை. எனவே, தனி விமானம் மூலம் அங்கு அழைத்து வரப்பட்டார். அரிகோவின் மருத்துவ கூடத்திற்கு அந்தப் பெண்மணியை அவரது கணவர் தூக்கியபடி வந்தார். கூடவே மடியராஸும் வந்தார்.
நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்தனர். பாரபட்சம் இல்லாமல் முதலில் வந்தவருக்கு முதல் சிகிச்சை என்று அங்கு மிகச் சரியாகவும், நேர்த்தியாகவும் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. இடையிடையே ஜெர்மன் மொழியில் அரிகோ உரக்க ஏதோ சொல்வது கேட்டது.
இவர்களது முறை வந்தபோது அந்தப் பெண்ணை மற்ற நோயாளிகளைப் பார்ப்பதைப் போலவே சாதாரணமாக வெறிச்சென்ற பார்வையால் பார்த்தார்.
அந்தப் பெண்ணின் கணவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவர் ஜெர்மன் மொழியில் சில சந்தேகங்களைக் கேட்டார். அதற்குச் சளைக்காமல் ஜெர்மன் மொழியிலேயே அரிகோவும் பதிலளித்தார். இது மருத்துவர் மடியராஸுக்கு லேசான அதிர்ச்சியைத் தந்தது.
அரிகோ படுவேகமாக இயங்கினார். அவரது கையில் இருந்த பேனா அத்தனை வேகமாக மருந்துகளின் பெயர்களைச் சீட்டு ஒன்றில் எழுதியது.
''இதோ, இந்த மருந்துகளை வாங்கிச் சாப்பிடு. குணமாகிவிடும்,'' என்று அந்தச் சீட்டை நீட்டினார் அரிகோ. உடனே அடுத்த நோயாளியைக் கவனிக்கத் தொடங்கி விட்டார்.
அந்த மருத்துச் சீட்டை அங்கிருந்த அல்டிமீரோவிடம் காட்டும்படி யாரோ கூறினார்கள். அந்த மருந்துகளின் பெயர்களை அழகாகத் தட்டச்சு செய்த அல்டிமீரோ, அதனை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்று தெளிவாக விளக்கிக் கூறி அனுப்பிவிட்டார். மடியராஸுக்கு இவை அனைத்தும் வியப்பாக இருந்தது. தலையையும் சுற்ற வைத்தது. அவர்கள் அடுத்த சில நிமிடங் களில் விமானத்தில் ஏறி சொந்த ஊருக்குத் திரும்பினர்.
விமானத்தில் சற்று ஓய்வாக இருந்த நேரத்தில் மருந்துச் சீட்டை வாங்கிப் பார்த்த மடியராஸ் அதிர்ந்து போனார். அதில் எழுதப்பட்டிருந்த மருந்துகள் என்ன தெரியுமா?
1.கானாமைசின், 2.ஓலோபின்டின், 3.நியூரோபின், 4.டெக்ஸ்டாசைன்,
இதில், கானாமைசின் என்ற மருத்து ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் சிறப்பு அனுமதி பெற்று அது ரியோ நகரில் தயாரிக்கப்படுகிறது. உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வல்லமை உடையது. அதே நேரத்தில், குடல் நோய்களுக்கும் முக்கிய மருந்தாகப் பயன்படுகிறது. எனினும் இதைப் பயன்படுத்தும் போது சில சங்கடமான உபாதைகள் ஏற்படக்கூடும்.
ஓலோபின்டின் என்னும் மருந்து ஜெர்மானிய நாட்டின் கண்டுபிடிப்பு. இதுவும் ரியோ நாட்டில் தயாரிக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை இதற்கும் உண்டு. துர்நாற்றம் அடிக்கும் வகையிலான சுவாச நோய், நுரையீரல் அழுகல் போன்றவற்றைக் குணப்படுத்தும் திறன் உண்டு. ஊசி வழியாக ஏற்றும் மருந்து இது.
நியூரோபின் மருந்து பிரேசில் நாட்டில் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு வைட்டமின் பி மாத்திரை. இதில் பி-12 சத்து அதிகம் இருக்கும்.
டெக்ஸ்டாசைன் மருந்தைப் பற்றி அவர் கேள்விப்பட்டதே இல்லை. அது எதற்குப் பயன்படும் என்றும் தெரியவில்லை. இப்படிப்பட்ட சாதாரண மருந்துகள் மோசமாகப் பரவிக் கிடக்கும் இந்த பயங்கரமான புற்றுநோயைக் குணப்படுத்தி விடும் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
ஆனாலும் மருத்துவ நிபுணர்கள் அனைவரும் கைவிட்ட நிலையில் இந்தச் சாதாரண ரக மருத்துகளை எடுத்துக் கொள்வதால் ஒன்றும் குடி முழுக போவதில்லை என்றும் அவருக்குத் தோன்றியது. எனினும் இதனை அளவிற்கு அதிகமாக உட்கொள்ள வேண்டும் என்று மருந்துச் சீட்டில் எழுதப் பட்டிருப்பது மட்டும் முட்டாள்தனமாகத் தெரிந்தது.
ஒருவாரம் கடந்த நிலையில் அந்தப் பெண் நன்றாக எழுந்து நடமாடத் தொடங்கிவிட்டாள் என்பது மட்டுமல்லாமல், அவள் எடையும் கணிசமாக அதிகரித்திருந்தது.
இது அவருக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது. இது எப்படி சாத்தியப்பட்டது என்பது பெருத்த வியப்பே.
கிட்டத்தட்ட பதினோரு மாதங்களுக்குப் பிறகு அந்தப் பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாகக் கிடந்தவள் என்பதை, யாருமே நம்பமுடியாத அளவிற்கு சுகப்பட்டிருந்தாள்.
தொடரும்...
