PUBLISHED ON : ஜூன் 12, 2015

சென்றவாரம்: சின்னத்தம்பியும், அவன் அம்மாவும் வாண்டுவின் வீட்டிற்கு சென்றனர். வாண்டுவின் அம்மாவை அடித்த வீரர்களை தடுத்து நிறுத்திய சின்ன தம்பியிடம், அவ்வீரர்கள் விசாரணை செய்தனர். இனி-
அவனுக்கு கோபம் தலைக்கேறியது. இதை புரிந்து கொண்ட சின்னதம்பி இவன் அமைச்சரின் ஆள் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டான்.
''நீங்க குணாளரின் நண்பர்தானே?''
''இந்த வார்த்தை அந்த வீரன் நெஞ்சில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால், வெளிக் காட்டாமல் நான் யார் ஆளும் இல்லை. நாங்கள் தேடி வந்த இரு உளவாளிகளும் இப்போது எங்களுக்கு வேண்டும். அவர்கள் எங்கே ஒளிந்திருக்கிறார்கள். இல்லை உங்கள் உயிர் உங்களிடம் இல்லை.,''அந்த வீரன் சற்று வேகமாகவே பேசினான்.
''உங்களுக்கு கொஞ்ச மாச்சும் மூளை இருக்கா?'' சின்னதம்பி ஆவேசத்துடன் கேட்டான்.
''டேய் என்னடா சொல்றே!'' வீரன் அவனை அடிக்க கை ஓங்கினான். மற்ற வீரர்களும் தயாராக இருந்தனர்.
''கோபம் வேண்டாம். தங்களுடன் பேசு வதால் நாழி அதிகம் ஆகிக்கொண்டிருக்கிறது. ஆபத்தும் நம்மை நெருங்கி வந்து கொண்டி ருக்கிறது. அதற்குத்தான் சொன்னேன். நீங்கள் ஒன்றை யோசிக்கவில்லை. உங்களை எல்லாம் அழைத்து வந்த கப்பல்கள் சென்று விட்டன!'' என்றான் சின்ன தம்பி.
''இல்லை ஒன்று எறிந்து விட்டது. அதை நானே கண்டேன்!'' வீரன் கோபத்துடன் கூறினான்.
''ஆம். அது உங்கள் ராஜதந்திரியின் ஆலோசனைப்படி எரிக்கப்பட்டு விட்டது!''
''அப்படி என்றால் எங்கள் ராஜ தந்திரி எங்கே?''
''ராஜ தந்திரி மட்டும் அல்ல குறும்படைத் தலைவனும் எங்கள் தந்தையர்களுடன் பத்திரமாக உள்ளனர். விஜயபுரியின் வீரர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாலும் மன்னரின் உளவாளிகளின் கண்காணிப்பு அதிகம் இருப்பதாலும் எங்களை அனுப்பி உங்களுக்கு செய்தி சொல்ல சொன்னார்கள்!''
''அப்படி என்றால் அவர்கள் இருப்பது குணாளன் வீட்டிலா?''
'ஓ! சரியாக மாட்டிக்கொண்டான்!' என்று மகிழ்ந்த சின்ன தம்பி, இவன் தளபதியின் ஆள் என்பதை உறுதி செய்து கொண்டான்.
''ஆம். அய்யா சரியாக சொன்னீர்கள். அவர்கள் சொல்லும் வரை உங்களை எங்கும் பயணிக்க வேண்டாம் என்றும் இந்த குடிசை வீட்டிலேயே தங்கி இருக்கும் படியும் ஆணை யிட்டுள்ளார்கள். இதைக்கூறத்தான் நாங்கள் வந்தோம். ஆனால், விவரம் புரியாமல் தாங்கள் என் சிற்றன்னையையே அடித்து விட்டீர்கள்!''
''ஆம். எங்களுக்கு இட்ட உத்தரவு அப்படி. ஆனால் இப்போது நீ வேறு செய்தி கொண்டு வந்திருக்கிறாய். நான் அடித்ததற்கு வருந்து கிறேன்!'' என்றவன் வாண்டுவின் தாயிடம் கைகூப்பி நின்றான்.
அவளும் கண்களை துடைத்துக்கொண்டு உள்ளுக்குள் சின்னதம்பியின் திறமையை கண்டு வியந்தாள்.
''உளவாளி வீரனே. ஒரு சின்ன வேண்டு கோள்!''
''என்ன கேளுப்பா?''
''தளபதியின் பல உளவாளிகளில் தாங்களும் ஒருவர். அதனால் தாங்கள் யார் என்ற விவரத்தை எங்களிடம் தெரிவிக்க வேண்டுகிறேன். நான் யாரிடம் விவரம் கூறினேன் என்பதை குணாளரிடம் கூற வேண்டும். அப்போதுதான்தான் சரியான நபரிடம் விவரம் கூறினேனா என்பதை அவர் உறுதி செய்து கொள்வார். உங்கள் ராஜதந்திரி வந்திருக்கும் விவரம் யாருக்கும் தெரியாது; தெரியக்கூடாது. நான் தவறான நபரிடம் கூறி யிருந்தால் என் தலை கொய்யப்பட்டு விடும். இல்லை கங்கையில் வீசி கொன்று விடுவர். அதனால் எங்கள் உயிர் வேண்டி கேட்கிறோம். தங்களை யார் என்று சொன்னால் உங்கள் தலைவருக்கு தெரியும். தயவு செய்து விவரம் கூறி எங்களை காப்பாற்றுங்கள்,'' உயிர் பிச்சை கேட்பது போல் கைகட்டி பவ்யமாக கேட்டான் சின்னதம்பி.
அந்த வீரன் யோசித்தான். சின்னதம்பி கூறியதில் பல உண்மைகள் இருந்ததால் சற்றும் யோசிக்காமல், ''கோட்டை வடக்கு காவல் வீரன் மெய்யப்பன்,'' என்று கூறி நிறுத்தினான்.
'ச்சீ... ஒருவன் குணாளன்; அடுத்தவன் மெய்யப்பன். ஆனால், செயலில் துரோகமே மிஞ்சி இருக்கிறது!' என்று நினைத்தான் சின்ன தம்பி.
''என்ன தம்பி யோசிக்கிறாய்!''
''இல்லீங்க. நாங்க பத்திரமா போகணும் இல்லியா. அதான் கவலை!''
''நீங்க எதுல போவீங்க?''
''கொஞ்சம் தள்ளி குதிரை நிறுத்தி இருக்கோம். அதில போவோம்!''
என்ன குதிரையா? அந்த வீரன் வாய் பிளந்தான்.
''ஆம். அதைக்கொடுத்ததும் தங்கள் ராஜதந்திரிதான்!''
''ஓ. அதையும் நீங்கள் பழக்கி வந்து விட்டீர்களா?''
''பின் காரியம் முக்கியம் இல்லையா. சரி. நாங்கள் போய் முழு விவரத்தையும் தங்கள் ராஜதந்திரியிடம் கூறி அவர் ஆலோசனை கேட்டு வருகிறோம். அதுவரை இங்கேயே இருங்கள். காட்டில் உள்ள பழங்களை பறித்து உண்டு உயிர் வாழுங்கள். அத்துடன் என் சிற்றன்னை வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டு ஏதாவது சமைத்து சாப்பிடுங்கள். நாங்கள் விரைவில் நல்ல செய்தியோடு வருகிறோம். சரியா!'' என்று கூறிவிட்டு கிளம்பினான் சின்னதம்பி.
வாண்டு தன் தாயின் கை பிடித்து, வாஞ்சனையுடன் கிளம்பினான்.
இப்போது அந்த வீரன் இவர்களை தொடர்ந்து வந்தான்.
''அம்மா எதுவும் பேசாதே. நான் அந்த சின்ன குதிரையில் வருகிறேன். நீங்கள் மூவரும் பெரிய குதிரையில் வாருங்கள்!''
''சரி. ஆனால், உன்னால் முடியுமா?''
''முடிந்துதான் ஆக வேண்டும். இல்லை நம் நால்வருக்கும் ஆபத்து தான்!''
அதற்குள் வீரன் அருகில் வந்து விட்டான்.
''ஓ கிளம்ப தயாராகிட்டீங்க! நீங்க என்ன சாதாரண ஆளுங்களா? எங்க ராஜ தந்திரியே குதிரை கொடுத்து அனுப்பி இருக்காரே!''
''ஆம்!'' என்ற மீனாட்சி சின்ன குதிரை யிடம் ஏதோ பேச அது தலையாட்டியது.
பின் சின்னதம்பியை கண் ஜாடையால் அதில் ஏற பணித்தாள்.
அவன் ஒரே தாவலில் அதில் ஏறினான். மீனாட்சி குதிரையை குனிய வைத்து வாண்டு வையும் அவன் தாயையும் ஏற்றி பின் அதன் விலாவில் லாவகமாக உதைக்கவும், அது வேகமாக தாவி ஓட அதை தொடர்ந்து சின்ன குதிரையும் பாய்ந்து சென்றது.
ஆச்சரியத்துடன் அந்த வீரன் அவர்கள் மறையும் வரை பார்த்தபடி இருந்தான்.
அப்போது எதிர் திசையில் இருந்து ஒரு பெரும் குதிரை வந்து நின்றது. அதில் இருந்து கம்பீரமாக இறங்கினான் குணாளன்.
மீனாட்சியின் குதிரை அதி வேகத்துடன் சென்று கொண்டிருந்தது. சின்ன குதிரையில் வந்த சின்ன தம்பிக்கு அம்மாவின் சிந்தனை ஓட்டம் புரியவில்லை.
'அம்மா என்ன நினைத்திருக்கிறாள். எதற்கு இந்த மலைப்பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆபத்து நிறைந்த பகுதியாயிற்றே. இங்கு பெரும் குரங்குகள் எல்லாம் இருக்கும் என்று அப்பா ஒருமுறை நம்மிடம் கூறியிருந் தாரே. இங்கு யாரும் செல்வதில்லையாமே. அப்படி இருக்க அம்மா இங்கு ஏன் வர வேண்டும்' என்று அவன் யோசித்த போதே, மீனாட்சி குதிரையை நிறுத்தினாள். ஒவ்வொரு வராக கீழே இறங்கினர். சின்னதம்பியும் இறங்கினான்.
''அம்மா இங்கு ஏன் வந்தாய். இது ஆபத்து நிறைந்த பகுதி என்று அப்பாவே ஒருமுறை கூறியிருக்காரே,'' என்று சின்னதம்பி கேட்டான்.
''எல்லாம் காரணமாத்தான். இனி நாம் நம் இருப்பிடம் செல்ல முடியாது. நீ உயிருடன் இருக்க மாட்டாய் என்று நினைத்திருக்கும் குணாளனுக்கும் தளபதிக்கும் அடுத்த குறிக் கோள் நம் கங்கை கரை குடிசைதான். அங்கு தங்கள் உளவாளிகளை நடமாடவிட்டு வேவு பார்க்க செய்வான். அதனால் இனி உன்னால் அங்கு இருக்க முடியாது. நீ இருப்பது தெரிந்தால் மீண்டும் அவர்களால் உன் உயிருக்கும் ஆபத்து வரக்கூடும். அத்தோடு குணாளன் பெயரை கூறி நீ அந்த வீரர்களிடம் இருந்து தப்பி வந்திருக்கிறாய். ஒரு உண்மை நமக்கு தெரிந்து விட்டது.
''அந்த மேலை நாட்டு வீரர்களில் ஒருவன் தளபதியின் ஒற்றன். அவன் நிச்சயம் உன்னை அந்த குணாளனிடம் காட்டி கொடுத்து விடுவான். எனவே, நாம் மனித நடமாட்ட மில்லாத அதே சமயம், மிருகங்கள் நடமாட்டம் இருக்கும் இந்த பகுதியில் இருப்பதுதான் நல்லது.
''நன்றி கெட்ட மனிதர்கள் மற்றும் தேசத் துரோகிகளைவிட இந்த மிருகங்கள் எவ்வளவோ மேல். நாம் இறப்பது உறுதி யானால் அது கேடு கெட்ட, நன்றி கெட்ட மனிதர்களால் இருக்கக்கூடாது. மாறாக, இந்த மிருகங்களாலேயே இருக்கட்டும்,'' என்று உணர்ச்சி பொங்க பேசவும், ''பலே பலே!'' என்று ஒரு குரல் கேட்டது.
அதிர்ச்சியுடன் அனைவரும் ஒலி வந்த திசையை நோக்கினர்.
பொக்கை வாய் சிரிப்புடன் ஒரு பைத்தியம் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.
- தொடரும்...
பூரணி
