PUBLISHED ON : டிச 18, 2015

சென்றவாரம்: நாட்டின் தளபதியும், குணாளனும் பேராசையில் கிடைத்த அனைத்தையும் மூட்டை கட்டினர். சிறுவர்களோ எதுவும் வேண்டாம் என்று கூறி உண்மையான பொக்கிஷத்தை பெரியவரிடம் கேட்டனர். இனி -
''ஆம். சிறுவர்களே நீங்களே பொக்கிஷம். சிறுவர்களாகிய நீங்கள் நினைத் தால் மட்டுமே மண்ணையும் பொன்னாக்க முடியும். பாலைவனத்தையும் உங்கள் நல்ல உழைப்பால் சோலை வனமாக்க முடியும். இந்த கள்ளம் கபடு அறியா பருவத்தின் உத்வேகத்தால் உணர்ச்சியால் அதற்கேற்ற கடின உழைப்பால் இந்த விஜயபுரி பொக்கிஷத்தை போல் ஆயிரம், ஆயிரம் பொக்கிஷங்களை உங்களால் உருவாக்க முடியும்.
''எனவே, சிறுவர்களே உங்கள் எழுச்சி யும், உள்ளக்கிளர்ச்சியும் மாசில்லா நேர்மையும், தூய உள்ளமும் அதன் மூலம் பெருக்கெடுக்கும் அன்பும் அனைவரையும் கட்டுவிக்கும். இதற்கு எதிரானவர்களை அடக்கி ஒடுக்கி இருக்கும் இடம் தெரியாமல் அழிக்கவும் செய்யும். இந்த சிறுவர்களின் சக்தியை ஒரு நாடு உணர்ந்தால்... அதை நல்ல வழியில் செயலிட்டால் எந்நாடுமே பொன்னாடுதான். அதற்கு அழிவும், பேராபத்தும் என்றுமே இல்லை.
''உங்களின் சுறுசுறுப்பான புத்தி, அதன் வாயிலாக தோன்றும் தெளிவான நற் சிந்தனை எந்த ஒரு பாவியையும் கட்டிப் போட்டு அவனை நல்வழிப்படுத்தும். இது உறுதி; இது சத்தியம்! இதுதான் இறைவன் இந்த உலகுக்கு விஜயபுரி பொக்கிஷ ரகசியத் தின் மூலம் காட்டு பேருண்மை.
''சதி இல்லாத சிந்தனையும், சூழ்ச்சியற்ற நேர்மதியும், வஞ்சகம் செய்யா நற்பண்பும், கெடு மதியில்லாத உண்மைதிறனும் கொண்டு சிறுவர்களாகிய நீங்கள் அல்லவா ஒரு நாட்டின் பொக்கிஷம்.
''ஆம் சிறுவர்களே! நீங்கள்தான் பொக்கிஷத்தின் ரகசியம். உங்களிடமே நேர்மை இருக்கும்; நாணயம் இருக்கும். அதற்கும் மேலாக, நாட்டுப்பற்று இருக்கிறது. உங்களால் மட்டுமே அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வல்ல சக்தி இருக் கிறது. உங்கள் சக்தி அனைத்தும் ஒன்று சேர்ந்தால்... அவை நல்ல வகையில் பயன் பட்டால்... உப்புக்கடல் நீரும் சர்க்கரை கடல் ஆகும். உங்கள் உழைப்பால் எதையும் சாதிக்க முடியும். உங்கள் எழுச்சிதான் இந்த உலகையே வாழ வைக்க வல்லது. இந்த பூமியின் மானிடர்களில் அரிய பொக்கிஷம் சிறுவர்கள்தான்.
''உங்களிடம் மட்டுமே பலன் எதிர்பாராது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதற்கான உழைப்பும் இருக்கும். ஈடற்ற வலிமையும், திடமான சிந்தனையும், தீட்சண்யமான கண்களும் உங்களிடம் மட்டுமே இருக்கிறது. இந்த உலகை ஆட்டி படைக்கும் சக்தி கொண்டவர்கள் நீங்கள்தான். உங்கள் சக்திக்கு ஈடு இணை எதுவுமே இல்லை. அதனால் மயன்களாகிய நாங்கள் சொல்கிறோம். ஒரு நாட்டின் பொக்கிஷம்... அந்த நாட்டின் இளமைதான். அதை நல்ல வகையில் பயன்படுத்துங்கள். இதுவரை யாருமே பொக்கிஷ ரகசியத்தை அறியவில்லை. ஆனால், சிறுவர்களாகிய நீங்கள் பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்படாமல் ரகசியத்தை அறிந்து கொண்டீர்கள். உங்கள் சக்தி உண்மைக்கு பயன்படுமானால்... அதுவே பெரும் பொக்கிஷம்.
''இனி நாங்கள் மிகவும் மன மகிழ்வுடன் மறைகிறோம். இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் அனைவரும் உடனே வெளியேற வேண்டும். சின்ன தம்பியின் தாய் மற்றும் வாண்டுவின் தாய் அவர்கள் அருகிலேயே இருப்பர். நாளை பவுர்ணமி. மேலை நாட்டான் படையுடன் வருகிறான். எச்சரிக்கை. நான் ஒரு முறை மட்டும் உங்கள் மன்னருடன் பேசுவேன். அதற்கு பிறகு மயன் வம்சம் அழிந்து விடும். இனி நாடும், நாட்டு நலனும் உங்கள் கையில்,'' என்று கூறிய மயன் மறையவும், சிறுவர்கள் வேக வேகமாக திறந்த கதவு வழியாக வெளியே வந்தனர். அதே சமயம், பொக்கிஷம் காத்து இருந்த மாணிக்க மலை பல ஆயிரம் கூறுகளாக வெடித்து சிதறியது. எங்கும் ஒரே மண் துகள் கள். வாைன முட்டும் அளவுக்கு புழுதி படல மாக காட்சியளித்தது.
''சின்னதம்பி...'' என்று ஓடி வந்த மீனாட்சியும், வாண்டுவின் தாயும் இருவரையும் கட்டி உச்சி முகர்ந்தனர்.
''ஏய் தம்பிங்களா உங்களுக்கெல்லாம் என்னமோ ஆச்சுன்னு ரொம்ப பயந்துட் டோம்டா... ஆனா, அந்த பெரியவர்தான் எங்களை இங்க கொண்டு வந்து விட்டு கவலைபடாதீங்க. உங்க மகன்கள் பத்திரமாக வருவார்கள். குதிரையுடன் காத்திருங்கன்னு சொல்லி மறஞ்சுட்டாருடா. அப்புறம் என்ன நடந்துச்சுன்னே தெரியலே. சற்று நேரத்தில் ஏதோ பெரும் சத்தம். எங்க பார்த்தாலும் புழுதிப்புயல் மாதிரி ஒருவர் கண்ணுக்கு ஒருவர் புலப்படாதபடி வானையே மறச்சிடுச் சிடா அந்த புழுதி. இப்பதாண்டா எங்களுக்கு உயிர் வந்துச்சு.
''நீங்க நல்லா இருக்கீங்களா... அந்த பெரியவர் என்ன ஆனார். இங்க என்னடா நடந்துச்சு... உங்கள சுத்தி இவ்வளவு சிறுவர் கள் வேறு இருக்கிறார்களே.. நேத்து அடிச்ச மழையும், பேய் காற்றும், பெரும் இடியும், மின்னலும் எங்களை உருக்குலைச்சிடுச்சு. ஆனா, பெரியவர் உங்களை காப்பாத்துவார்னு தெரியும். சரி. இந்த சிறுவர்கள் எல்லாம் நேத்தே வந்திருப்பரே. இப்ப பகல் பொழுது ஆயிடுச்சே. இன்னிக்கு பவுர்ணமி வேற ஆச்சே. பெரியவர் என்ன ஆனாரு.அவர் ஏதாச்சும் உங்களுக்கு கட்டளை கொடுத்தாரா?'' கேட்டுக் கொண்டே போனாள் மீனாட்சி.
''அம்மா கவலை வேண்டாம். இந்த புழுதி கள் எல்லாம் சாதாரண புழுதிகள் அல்ல. மாறாக இத்தனை காலங்களாக மயன்களால் கட்டி காக்கப்பட்ட விஜயபுரி நாட்டின் பொக்கிஷங்களை உள் அடக்கிய மாணிக்க மலைதான். அதன் ரகசியம் நாங்கள் அறிந்து விட்டதால் அதன் தேவை இனி இல்லை என்று கூறிய பெரியவர் அதை தூள் தூள் ஆக்கி விட்டார். மேலும், அந்த பெரியவர் சாதாரண மனிதர் இல்லை. மாறாக இந்த நாட்டின் அறிய பொக்கிஷ ரகசிய மலையை உருவாக்கி இத்தனை காலங்கள் அதை தான் நாம் பல காரியங்களை சாதிக்க முடிந்தது. ஆனால், அவர் இப்போது அந்த ரகசியத்தை நாங்கள் அறிந்து கொண்டதால் மறைந்து விட்டார். ஆனால், ஒருமுறை மன்னருடன் பேசுவேன் என்று உறுதியளித்து இருக்கிறார். அம்மா...'' இப்போது சின்னதம்பி தேம்பி தேம்பி அழலானான்.
''ஏண்டா? என்ன நடந்தது? ஏன் இப்படி அழுகிறாய். பெரியவருக்கு யாராவது கெடுதல் செய்தார்களா இல்லை துன்புறுத்தினார்களா சொல்?'' அவள் குரலில் ஒரு பதட்டம் தெரிந்தது.
''பெரியவர் தெய்வத்துக்கு ஈடானவர். அவரை யாரும் எதுவும் செய்து விடமுடியாது. ஆனால், நமக்கெல்லாம் அந்த பெரியவரின் கட்டளைப்படி உதவி செய்து நம்மை காத்த, ராஜமந்தி எதிரியின் விஷ அம்புக்கு பலியாகிவிட்டது அம்மா!'' மீண்டும் அவன் தேம்பி அழ வாண்டுவும், இப்போது துக்கம் தாளாது அழுதான்.
மீனாட்சியும், ராஜம்மாவும் மன வருத்தத் தில் கண்ணீர் சிந்தினர். பின் தன்னை ஒரு வழியாக சமாதானம் செய்து கொண்டாள் மீனாட்சி.
''தம்பி... ஒரு நல்ல காரியம் நடக்கும் போது சில கெட்ட நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும். ஒரு குரங்காக இருந்தாலும் அது நம் நாட்டு நலனுக்காக தன் பணியை செவ்வனே முடித்துதான் உயிர் துறந்திருக்கிறது. அதனால் அது போற்றப்பட வேண்டிய மரணம்தான். வருந்தினாலோ, அழுதாலோ அதன் வீரம் மாசுபட்டுவிடும். எனவே இனியும் தாமதிக்காமல் நீயும் உன் நண்பர்களும் என்ன செய்யப்போகிறீர்கள் என்று உடனே தீர்மானியுங்கள்.
''உங்களுக்கு ரகசியம் தெரிந்து விட்டதால் பெரியவர் பொக்கிஷத்தை அழித்து மறைந் தார் என்றும் கூறி இருக்கிறாய். அது என்ன ரகசியம். அதை வைத்து எப்படி நாட்டை காப்பாற்றப்போகிறாய். அது சம்பந்தமாக யோசி. ஒரு தீர்மானத்துக்கு வா. நாழி ஆகிக் கொண்டிருக்கிறது. இன்னும் உன் அப்பா வையும், வாண்டுவின் அப்பாவையும் காண வில்லை. அதனால் நம்மை சுற்றி பெரும் ஆபத்துக்கள் நிறைந்திருக்கும் போது உடனே காரியம் ஆற்றுவதுதான் புத்திசாலித்தனம்,'' என்றாள் மீனாட்சி.
''ஆம். சரியாகவே சொன்னீர்கள். ஒரு ராஜமந்தி தன் நாட்டுக்கடமையில் உயிர் துறந்திருக்கும் போது, நாம் இன்னும் ஒன்றுமே செய்யாமல் இருந்தால் அது எங்கள் தவறுதான். விஜயபுரியின் ரகசியம் நான் சொன்னால் உனக்கு புரியாது. அதை நாங்கள் செயலில் செய்து காட்டியபிறகுதான் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்,'' என்று உணர்ச்சி பெருக்கில் பேசிய சின்னதம்பி அனைத்து சிறுவர்களையும் பார்த்தான்.
அவன் செயலைக்கண்டு மீனாட்சியும், ராஜம்மாவும் மனம் மகிழ்ந்து அவனையே கவனித்தபடி இருந்தனர்.
''என் அருமை நண்பர்களே! நம்மீது உள்ள ஒரு நம்பிக்கையால்தான் பெரும் பொக்கிஷ மலையையே தூள்தூள் ஆக்கினார் மயன். எனவே, நாம் யார்? நம் வலிமை என்ன என்பதை உடனே நாம் காட்ட வேண்டும். எனவே, நாம் இன்று மாலை அனைவரும் படகுடன் கங்கை கடலில் கடக்கும் இடத்துக்கு சென்று காவல் இருக்க வேண்டும். கடலில் இருந்து கங்கை வழியாக யாரும் நம் நாட்டுக்குள் புகுவதை தடுக்க வேண்டும். உடனே புறப்படுங்கள்,'' என்று கட்டளை கொடுத்தான் சின்னதம்பி.
அள்ளக்கட்ட முடியாமல் அள்ளி கட்டிய பொன்னும், வைரமும், வைடூரியமும், மாணிக்கமும், முத்தும் வெறும் மண் ஆகிப் போய் பொக்கிஷ மலையே வெடித்து சிதறிய சம்பவத்தால் குலை நடுங்கி போன தளபதி மெல்ல தன் மீது உள்ள மண்ணையும், தூசியையும் தட்டிவிட்டபடி எழுந்தான். குணாளனும் பெரும் கோபம் கொண்டு வேகத்துடன் மண்புழுதியில் இருந்து எழுந்தான். மற்ற வீரர்களும் எழுந்தனர். தூரத்தில் சிறுவர் கூட்டத்தையும், இரு பெண்மணிகள் குதிரையுடன் நிற்பதையும் கண்ட தளபதி பெறும் சினம் கொண்டான்.
''குணாளா இந்த சிறுவர்கள்தான் இந்த கிடைத்தற்குரிய பெரும் பொக்கிஷமே மண் ஆகக் காரணமானவர்கள். உடனே நாம் அங்கு சென்று அவர்களை கொன்று இந்த மண்ணிலேயே புதைக்க வேண்டும்,'' என்று கோபம் பொங்க ஆவேசித்தான் தளபதி.
மண்ணில் புதைந்து சோர்ந்து போய் இருந்த வீரர்கள் எந்த உணர்ச்சியும் இல்லா மல் நின்று கொண்டிருந்தனர். தளபதி வேகமாக புறப்பட்டான். அவனுடன் குணாளனும், நல்லானும் செல்ல, வீரர்கள் வேண்டா வெறுப்பாக பின் தொடர்ந்தனர்.
- தொடரும்...
பூரணி
