தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இரு ரத்தினங்கள்!

இரு ரத்தினங்கள்!

இரு ரத்தினங்கள்!


PUBLISHED ON : செப் 20, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 20, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீரத்தின் விளைநிலம் ராஜஸ்தானம். சாகஸங்கள் புரிவதில் சமர்த்தர்கள் ராஜபுத்திரர்கள். தன்மானங்காக்கத் தன்னுயிரையே தரக்கூடிய ஒப்பற்ற வீரர்கள். மாவீரன் ராணா சாங்காவின் மகன் உதய சிம்மன், உதவாக்கரையாக விளங்கினான். கேளிக்கைப் பிரியனாக வாழ்ந்தான். ராஜ புத்திர குலத்துக்கே ஓர் இழுக்காக வந்தவன் உதயசிம்மன்.

உதயசிம்மனின் ஆட்சியிலே மேவாரின் பல பகுதிகள் அக்பரின் ஆதிக்கத்துக்குள்ளாயின. 'வீரமற்ற மன்னன் வீணன்' என்று மக்கள் அவனை வெறுத்தனர்.

ஒருசமயம், அக்பரின் முற்றுகையி லிருந்து சித்தூரைக் காக்க முடியாமல், தன் மனைவி, பிள்ளைகளுடன் பத்திரமான இடத் துக்குத் தப்பியோடி விட்டான் உதயசிம்மன்.

நாட்டைக் காக்கும் பொறுப்பை, இரண்டு சின்னஞ்சிறுவர்களிடம் ஒப்படைத்து விட்டான். அவ்விருவருக்கும் அப்போது வயது என்ன தெரியுமா? பதினாறும், பதினேழும்தான். அவர்களில் ஒருவன் பெயர் ஜெய்மல்; மற்றவன் பெயர் புட்டா என்பதாகும்.

ராஜபுத்திரர்களின் போற்றுதலுக்கும், வணக்கத்துக்கும் உரிய சித்தூரைக் காக்கும் கடமை இந்த இரு சிறுவர்களுக்கும் கிடைத்தது. இத்தனை சின்னப் பையன்களிடம் ஒரு நகரைக் காக்கும் பொறுப்பை ஒப்புவிப்பார்களா...? என்று நீங்கள் கேட்கலாம். ராஜபுத்திரர்களின் புனிதமான தலைநகரைக் காக்கும் உரிமை, ராஜ குலத்தில் உதித்தவர்களுக்குத் தான் உண்டு.

மேவாரில் பதினாறு இனத்தவர்கள் மிக உயர்ந்த குடிப்பிறப்புடையோராக கருதுவர். அத்தகைய உயர் குடியில் வந்தவர்கள்தான் ஜெய்மல்லும், புட்டாவும்.

குடிமக்களைப் பேணிக் காக்காத, தாய் நாட்டின் பெருமையைக் காக்க அந்நியனோடு போராட சக்தியற்ற மன்னன், ஊரை விட்டு ஓடியதற்காக மக்கள் மகிழ்ச்சியே அடைந்தனர்.

'தாய் நாட்டை அந்நியனுக்கு அடிமையாக விடமாட்டோம். எப்படியும் எத்தனை உயிர்களைப் பலி கொடுத்தாகிலும் அதைக் காப்போம்!' என்று சபதம் மேற்கொண்டனர் வீர ராஜபுத்திரர்கள்.

புட்டாவின் தாய், தன் மகனுக்குக் காவியுடை அணிவித்துப் போர்களத்துக்கு அனுப்பி வைத்தாள். துறவிகள் அணியும் காவியுடை அல்ல இது. ராஜ புத்திர வீரர்கள் உடுத்தும் ஆரஞ்சு வண்ண ஆடை இது. இந்த ஆடை அணிந்தால், ஒன்று வெற்றி அல்லது வீர மரணம். தம் மகனைப் போர்க்களத்துக்கு அனுப்பிய அந்தத் தாய், சித்தூரின் வீர ராஜபுத்திர மங்கையர்களை ஒன்று சேர்த்தாள்.

''மன்னன் நகரின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பை நம்மிடம் விட்டுவிட்டு ஓடிவிட்டான். வீர ராஜபுத்திரர்கள் நகரைக் காக்க உறுதி பூண்டு போர்க்களம் புகுந்துள்ளனர். அவர்களுக்கு உதவுவது நமது கடமை; தலைநகர் மாற்றான் வசப்பட்டால், கவுரவமான முறையில் தீக்குளித்து உயிர் துறப்பதற்கு தீ மூட்டக் கூட நமக்கு நேரம் இருக்காது. அந்நியனின் அடிமைகளாகி விடுவோம்.

''அந்த இழிநிலைக்கு இலக்காக விருப்பமில்லாதவர்கள், என்னுடன் போர்க்களத்துக்குக் கிளம்புங்கள். உயிரின் மீது ஆசை உள்ளோர் இங்கேயே இருக்கலாம்,'' என்றாள்.

ராஜபுத்திர பெண்கள் அத்தனை பேரும் கையில் ஆயுதமேந்தி, புட்டாவுடைய அன்னையின் ஆணையை ஏற்று, அவளைப் பின்தொடர்ந்தனர். அன்றையப் போரில் பல வீரர்களின் தாய்மாரும், மனைவிமாரும், தங்கள் வீரம் காட்டி, விண்ணுலகம் எய்தினர். மாதர்களின் வீரம் கண்ட கோழையும், வாள் எடுத்துக் கிளம்பினான் போர்களத்துக்கு. இதுவரையில், காணாத வகையில் சித்தூர் ரத்தினங்கள் போரிட்டன.

'ராஜபுத்திரர்கள் மரணத்தை விரும்புகிறவர்கள்' என்று அந்நியர்கள் வியந்து போற்றும் வகையில் இருந்தது அந்தப் போர்.

புட்டாவின் அன்னை கையில் வாளேந்தி விரோதியை வீழ்த்த முற்பட்டு வீழ்ந்தபின், புட்டாவின் வீரம் பன்மடங்காயிற்று. வாளைச் சுழற்றினான். பல தலைகள் உருண்டு வீழ்ந்தன. வெற்றிமுகம் காணும் போது விரோதிகள் அவனை வீழ்த்தி விட்டனர். புட்டாவின் இடத்தில் உடனே ஓடிவந்து நின்றான் ஜெய்மல். ராஜபுத்திர வீரர்கள் புதிய வேகம் கொண்டு போரிட்டனர். அன்றையப் போர் ஜெய்மல்லுக்கு வெற்றியாகவே முடிந்திருக்க வேண்டும். ஆனால், பாரதத்தின் விதி வேறு விதமாக இருக்கும்போது, வெற்றி எப்படிக் கிட்டும்? அக்பரின் பக்கமே, அதிர்ஷ்ட லட்சுமி இருந்தாள். அக்பரின் துப்பாக்கியிலிருந்து கிளம்பிய ஒரு குண்டு ஜெய்மல்லின் உயிரைக் குடித்துப் பசி அடங்கியது.

ஜெய்மல்லின் இடத்தை ஏற்றுப் போரை நடத்த வேறு யாரும் இல்லை. இரு கண்கள் போன்ற இரு ராஜபுத்திர ரத்தினங்களை இழந்த சித்தூர் வீரர்கள், நிலைகுலைந்து போயினர். இறந்த வீரர்களின் சிவப்பு உடைகள் நடை பாதையாக அமைய, அதன் மீது நடந்து சித்தூரினுள் புகுந்தார் அக்பர்.

ஆனால், அக்பரும் ஒரு மாவீரன் அல்லவா? அந்தப் போரிலே, ஜெய்மல்லும், புட்டாவும் காட்டிய வீரத்தை அவரால் மறக்கவே முடியவில்லை.

'பதினாறே வயதான இளைஞர்களான அவர்கள் எத்தகைய சாகசம் புரிந்தனர்? இத்தகைய இளைஞர்களைக் கொண்ட பாரதத்தை என்றைக்கு, நாம் வசப்படுத்திக் கொள்ளப் போகிறோம்?' என்று மலைக்கலானார்.

ஜெய்மல், புட்டா என்ற இளஞ்சிங்கங்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் படி செய்ய நினைத்தார். டில்லியில் உள்ள தன் அரண்மனை வாசலின் இரு பக்கங்களிலும் இரண்டு யானைகள் மீது அவ்விரு வீர வாலிபர்களும் அமர்ந்திருப்பது போன்ற சிலை வடித்து கவுரவித்தார் அக்பர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us