PUBLISHED ON : டிச 19, 2020

கோவை மாவட்டம், போகம்பட்டி, இடையபாளையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1999ல், 8ம் வகுப்பு படித்த போது ஏற்பட்ட அனுபவம்...
மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்க்கவும், அரசியல் மீதான ஆர்வத்தை உருவாக்கவும் கவனம் எடுத்து செயல்பட்டார் தலைமை ஆசிரியர் பழனிசாமி. இதற்காக, 'பாலர் சபை' என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தார்.
மாத இறுதியில் நடக்கும் கூட்டத்தில், சுகாதாரம், பாதுகாப்பு, சத்துணவு, விவசாயம் மற்றும் கல்வி பிரிவுகளில், 'அமைச்சர்' என்ற பொறுப்பில் மாணவர்களை நியமிப்பர். ஒருங்கிணைக்க, முதல் அமைச்சராக ஒருவரை தேர்வு செய்வர். இந்த பொறுப்பு வகித்தவர்கள் தவறிழைத்திருந்தால் வினா எழுப்புவர். தவறு நிரூபிக்கப்பட்டால், மன்னிப்புக் கோர வேண்டும்.
முதல் அமைச்சர் பொறுப்புக்கு என்னை தேர்தெடுத்தனர். கூச்சம் காரணமாக மறுத்தேன். நல்ல அறிவுரை கூறி உற்சாகப்படுத்தினார் தலைமை ஆசிரியர்.
அவர் கூற்றுப்படி பயிற்சி செய்தேன். வியக்கும் வண்ணம் பொறுப்பை நிறைவேற்றினேன்.
என் வயது, 32; தனியார் பொறியியல் கல்லுாரியில் துணை பேராசிரியராக பணியாற்றுகிறேன். முன்னேற்றத்துக்கு தடையாக இருந்த கூச்சத்தை போக்கிய தலைமை ஆசிரியரை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்!
- ஜ.யோகேஷ் குமார், கோவை.
தொடர்புக்கு: 99522 63316

