PUBLISHED ON : ஜூன் 14, 2013

இதுவரை: தன் அத்தை கூறியதையும் பொருட்படுத்தாமல் பரசுராமனின் கடைக்கு வேலைக்கு போனாள் வனிதா. அங்கு பரசுராமன் தேடிய பார்சல் கிடைத்தது. இனி -
சில வினாடிகள் ஏதோ யோசித்த பரசுராமன், பிறகு ஒரு காகிதத்தில் கோஸ்வாமியின் விலாசத்தை எழுதி அதையும், பார்சலையும் வனிதாவிடம் கொடுத்தார். பிறகு பஸ் கட்டணத்துக்காக மட்டுமல்லாமல், அவள் செய்யப் போகும் பணிக்காகவும், ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை அவளிடம் நீட்டினார்.
தன் வேலையை உறுதி செய்து கொள்ளுவதற்காக, ''இதை கோஸ்வாமி கிட்டே சேர்த்துட்டு, நான் இங்கே வரேன் சார்!'' என்றாள் முகத்தில் சிரிப்புடன்.
''வேண்டாம் குழந்தே... நீ வீட்டுக்குப் போ. உன் அத்தையோட கோபத்துக்கு ஆளாக வேண்டாம்!'' என்று கூறியபடி பரசுராமன், வனிதாவின் கண் கலங்குவதைக் காண விரும்பாதவராக தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்.
வனிதா தன் வேதனையை சிரமப்பட்டு விழுங்கிக் கொண்டு கடையிலிருந்து வெளியேறினாள்.
''அவர் மனசு மாறணும். கடவுளே! நான் இந்தக் கடையில் இசைக் கருவிகளுக் கிடையில் வேலை செய்வது மனசுக்கு எத்தனை நிம்மதியாக இருக்கு! என் வயலினை என் மனம் போல வாசித்து மகிழலாம்.... ஆண்டவா, அதை யாரும் வாங்கிக் கொண்டு போகக் கூடாது...'' இப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத நினைவுகள் அலைமோத, மலபார் ஹில்லை நோக்கி பஸ்சில் போய்க் கொண்டிருந்தாள் வனிதா.
மீண்டும் ஒருமுறை பரசுராமை சந்தித்து 'தன்னை வேலைக்கு அமர்த்திக் கொள்ளும்படி கேட்க வேண்டும்' என்று முடிவு செய்து கொண்டாள். நிச்சயம் அவர் மனம் மாறி என் விருப்பத்தைப் பூர்த்தி செய்வார் என்று நம்பிக்கையை வளர்த்துக் கொண்டாள்.
பரசுராமன் கொடுத்திருந்த விலாசத்தை கையில் வைத்துக் கொண்டு, பங்களாக்களை நோட்டமிட்டபடி நடந்து கொண்டிருந்தாள் வனிதா. பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி அது. பெரிய பெரிய பங்களாக்கள். பல மாடிக் கட்டடங்கள், அழகும், அமைதியும், பணக்காரத் தனமும் நிறைந்த பகுதி. விர் விர்ரென்று கார்கள் அவளைக் கடந்து போய்க் கொண்டிருந்தன. நடந்து செல்வோரையே காணோம்! பத்தொன்பதாம் இலக்கமுள்ள பங்களாவை அணுகினாள் வனிதா. அதுதான் கோஸ்வாமியின் வீடு. பல கார்கள் பங்களா வின் முன் நின்று கொண்டிருந்தன.
வனிதாவைக் கடந்து சென்றது ஒரு கார். போர்டிகோவில் போய் நின்றதும் அதிலிருந்து இறங்கினாள் தேவதை போன்ற ஒரு பெண். பிரபல சினிமா நட்சத்திரம். வனிதா அந்த முகத்தை இனங் கண்டு கொண்டாள்.
'இதைப் போல இன்னும் எத்தனை நடிகை-நடிகர்கள், தயாரிப் பாளர்கள் உள்ளே இருக்கிறார்களோ!' என்று வியந்துப் போனாள் வனிதா.
வரவேற்பாளராகத் தோன்றிய ஒருவரிடம் போய், ''இந்த பார்சலை கோஸ்வாமி அவர் களிடம் சேர்ப்பித்து விட வேண்டும். ரொம்ப அவசரம். அவசியம் உடனே தேவை என்று போன் செய்தார். ஆகவே, தாமதமில்லாமல் உடனே இதை அவரிடம் கொடுக்க வேண்டும்!'' என்று கூறி 'சிடி' அடங்கிய பார்சலை நீட்டினாள்.
அதை வாங்கிக்கொண்டார் அந்த வரவேற்பாளர்.
''இதோ, இப்போதே இதை கோஸ்வாமி யிடம் கொடுத்து விடுகிறேன். நீ கவலை யில்லாமல் போகலாம்,'' என்று கூறி உள்ளே வேகமாக நடந்தார். அந்தச் சூழ்நிலையில் பிரமிப்பில் மிதந்தவளாக திரும்பிக் கொண்டி ருந்தாள் வனிதா.
அப்போது அவளைக் கடந்து வட்ட மடித்தபடி போய் போர்டிகோவில் கார்கள் நுழைந்தன. முதல் காரிலிருந்து இறங்கியது இந்திரஜித். வனிதாவுக்கு வியப்பான வியப்பு. இந்திரஜித் புகழ் பெற்ற பின்னணிப் பாடகர்; இசை அமைப்பாளர். அவர் வருவதானால் இன்று இங்கு ஏதோ இசை நிகழ்ச்சி இருக்கிறது. அதைக் காண முடியுமானால், கேட்க முடியு மானால் வனிதாவின் உள்ளம் உவகையினால் துள்ளியது. அடுத்த காரிலிருந்து வாத்தியக் கருவிகளுடன் இசைக் கலைஞர்கள் இறங்கி உள்ளே போய்க் கொண்டிருந்தனர்.
வனிதாவின் உள்ளம் பரபரத்தது. எப்படியும் அங்கு நிகழ இருக்கும் இசை நிகழ்ச்சியைக் காண வேண்டும் என்று தீர்மானித்தாள்.
'வீட்டுக்குப் போய் என்ன செய்யப் போகிறேன்? அத்தையின் கடுகடுத்த முகத்தையும், பேச்சையும் கேட்டு ஒடுங்கிப் போய்...' அங்கிருந்து வெளியேறும் எண்ணத்தைக் கைவிட்டாள். தன்னை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என்று அவளுக்குத் தெரியும். இசை நிகழ்ச்சியைக் காணும் ஆசை முதலிலேயே ஏற்பட்டிருந்தால், 'சிடி' பார்சலை தான் நேரிலேயே கோஸ்வாமியிடம் தரவேண்டும் என்று கூறி உள்ளே போயிருக்கலாம் அதை நழுவ விட்டாயிற்று. இனி உள்ளே போக முடியாது.
பங்களா தோட்டத்தின் ஒற்றையடிப் பாதை வழியாக பங்களாவைச் சுற்றி வரலானாள். பக்கவாட்டில் பங்களாவின் விசாலமான ஹால் தெரியும்படி பெரிய கண்ணாடித் தடுப்பு. ஹாலில் சினிமா உலகப் பெரும் புள்ளிகளும், நடிகைகளும், நடிகர் களும் இருக்கையில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு, முன்னே இசைக் குழுவினர் தங்கள் கருவிகளுடன் தயார் நிலையில் இந்திர ஜித்தும் கோஸ்வாமியும் கூட. இமைக்காத விழிகளால் இத்தனை யையும் பார்த்து பிரமித்துப் போனாள் வனிதா.
ஒரு குரோட்டன்ஸ் செடியின் மறைவில் நின்றபடி திறந்திருந்த சில கண்ணாடிக் கதவு களின் மூலம் உள்ளே பேசுவோரின் குரல் லேசாகக் கேட்டது.
அங்கே இருந்தபடியே இந்திரஜித்தின் பாடலை கேட்பதென்று தீர்மானித்தாள் வனிதா. பிறர் பார்வையில் படாதபடி, வசதியாக செடி மறைவில் ஒண்டிக் கொண்டாள். சற்று நேரத்தில் அங்கு குழுமி இருந்தவர்களின் பேச்சு சட்டென்று நின்றது. அமைதி நிலவியது. ம்... ம் என்று சுருதி சேர்க்கும் ஒலி எழுந்தது. வயலின் நாதம், கிளாரிநெட்டின் கீசல், பியானோவின் துள்ளல், தபலாவின் துடிப்பு... வனிதா மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டாள். பொங்கும் கடல் அலைகள் போல. மேலே மேலே இசை வெள்ளம் பெருக்கெடுத்தது. தன்னை மறந்தாள்; தன் சூழ்நிலையை மறந்தாள்; தன் பிரச்னைகளை மறந்தாள். நேரம் போனதே தெரியாமல் இசை மழையில் குளித்துக் கொண்டிருந்தாள் வனிதா.
கைத்தட்டல் ஓசை கனவுலகிலிருந்து அவளை நினைவு உலகுக்குக் கொண்டு வந்தது. இருள் கவியத்தொடங்கி விட்டது. நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த தினால் கால் வலிக்க ஆரம்பித்தது. அத்தையின் நினைவு வரவே, 'வீட்டுக்கு போனால் அத்தை எப்படிக் கத்தப் போகிறாளோ? என்ன செய்யப் போகிறாளோ?' என்ற பரபரப்பில் பயத்தில் அவசரமாக அங்கிருந்து கிளம்பினாள். பங்களாவின் முன்னால் தோட்டத்தில் யாருமே இல்லை. கார்கள் மட்டுமே மவுனமாக வரிசையாக, எல்லாரும் உள்ளே இசை நிகழ்ச்சியில் விருந்து ஏற்பாடுகளில் மூழ்கி இருக்க வேண்டும்.
வேகமாக, நடந்து வந்து கொண்டிருந்த வனிதாவின் கவனத்தை, பதுங்கிப் பதுங்கி வரும் இரு உருவங்கள் கொக்கி போட்டு நிறுத்தின. சட்டென்று, ஒரு செடியின் மறைவில் ஒதுங்கினாள் வனிதா. அந்த இரு உருவங் களையும் நோட்டமிட்டாள். அவர்கள் வனிதாவைக் கவனிக்கவில்லை. ஒருவன் சரசரவென்று மழைநீர்க் குழாயைப் பற்றிக் கொண்டு மேலே ஏறினான். மற்றவன் கீழே நின்றபடி கண்காணித்தான்.
''இவர்கள் திருடர்கள் போலிருக்கிறதே!'' என்று தடதடத்தது வனிதாவின் நெஞ்சம்.
புகழ்பெற்ற இசை அமைப்பாளர் கோஸ்வாமியின் வீட்டுத் தண்ணீர் குழாயின் வழியாக மேலே ஏறி முதல் மாடியின் ஒரு அறைக்குள் புகுந்தவனும், கீழே நின்று கொண்டு கண்காணிப்பவனும் திருடர்கள் தான் என்ற முடிவுக்கு வர வனிதாவுக்கு அதிக நேரமாகவில்லை. செடி மறைவில் நின்று கொண்டிருந்த அவள், சில வினாடிகள் அதிர்ச்சியினால் செயலற்றுப் போனாள். என்ன செய்யலாம் என்று புரியாமல் குழம்பிப் போனாள். அப்போது மேலே போனவன் ஜன்னல் வழியாக விலை உயர்ந்த புடவை மற்றும் சில ஆடைகளைச் சுருட்டிக் கீழிருப்பவனிடம் வீசலானான்.
வனிதா குழப்பத்தை உதறினாள். இங்கிருந்து கூச்சல் போட்டால், உதவிக்கு ஆட்கள் வருவதற்குள், அவர்கள் தன்னைத் தாக்கிவிட்டு, தப்பி ஓடி விடுவர். பங்களாவில் எல்லாரும் விருந்தை ரசிப்பதில் மூழ்கி இருக்கின்றனர்.
வனிதா பரபரப்போடு பங்களாவின் வாசலை நோக்கி ஓடினாள். கோஸ்வாமியின் சிடி பார்சலை அவரது வரவேற்பாளரிடம் கொடுத்தபோது, வராந்தாவின் மூலையில் டெலிபோன் இருப்பதைப் பார்த்தது நினை வுக்கு வந்தது. அத்தனை பெரிய வராந்தாவில் யாருமே இல்லை. காவல்காரன் கூட ஹாலில் குழுமியுள்ள சினிமாக்காரர்களை வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். வனிதா உள்ளே நுழைந்ததை கவனிக்கவில்லை. வனிதாவும் யாரைப் பற்றியும் கவலைப்பட வில்லை. டெலிபோனின் அருகில் ஒடினாள். அவசரக் காரியங்களுக்குப் போலீசின் உதவியை நாட கூப்பிடும் எண் அவளுக்குக் தெரியும். எண்களைச் சுழற்றினாள்.
- தொடரும்.
