PUBLISHED ON : செப் 13, 2013

இதுவரை: மியூசிக் டைரக்டர் கோஸ்வாமியின் பங்களாவில் இசை கச்சேரி செய்தாள் வனிதா. இனி -
''இப்போது இந்தக் குழந்தைகளின் பாடலுக்கு நீ வயலின் வாசித்த முறையைப் பார்த்தேன். உனக்குள் ஒளிந்துள்ள திறமையை என்னால் காணமுடிகிறது. ஆகவே, உன் வருங்காலம் சிறப்பாக அமைய ஒரு ஏற்பாடு செய்ய உத்தேசித்துள்ளேன். என்னோடு வா...'' என்று வனிதாவை தன் அறைக்குள் அழைத்துப் போனார் கோஸ்வாமி.
எதற்காக இருக்கும் என்று காரணம் தெரியாமல் குழம்பினாள் வனிதா.
கோஸ்வாமி தன் இருக்கையில் போய் அமர்ந்து, தனது மேஜையின் இழுப்பறையைத் திறந்து ஒரு காகிதத்தை எடுத்தார்.
''வனிதா! உனக்கு இசைக் கல்லூரியில் சேர்ந்து வயலினில் தேர்ச்சி பெற விருப்பமா?'' என்று கேட்டார்.
வனிதா, தன் முன்னே, வண்ணப்பூக்கள் வாரி இறைக்கப்பட்டது போல் உணர்ந்தாள்.
''என் லட்சியம், கனவு, எல்லாமே வயலின் வாசிப்பதில் உயர்ந்து விளங்க வேண்டும் என்பதுதான். ஆனால், இசைக்கல்லூரியில் சேர்ந்து பயிற்சிபெறும் அளவுக்கு எனக்கு வசதியோ, வாய்ப்போ கிடையாதே!'' என்றாள்.
''அதைப் பற்றி உனக்குக் கவலை வேண்டாம்; அந்த எண்ணமிருந்தால் போதும். வசதி இல்லாத திறமைமிக்க கலைஞர்களுக்கு உதவுவதற்காக, ஓர் அறக்கட்டளையை நாங்கள் நடத்தி வருகிறோம். ஆண்டு தோறும் பல்வேறு இசைக் கல்லூரிகளுக்கு மாணவர் களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் இலவசமாக உயர் பயற்சி பெற ஏற்பாடு செய்கிறோம். அம்மாணவ, மாணவிகளுக்கான முழுச் செலவையும் இசைக் கல்லூரிகளுக்கு இந்த அறக்கட்டளை வழங்குகிறது. உதவித் தொகை பெறுவதற்குத் தகுதியான மாணவ-மாணவி களைத் தேர்ந்தெடுக்கும் பரீட்சை அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள் வதற்கான விண்ணப்பம்தான் இது. அந்த அறக் கட்டளையின் நிர்வாகக் குழுவில் நான் ஒரு அங்கத்தினர். உன்னை சிபாரிசு செய்து இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பு கிறேன். இசைக்கல்லூரியில் சேர்ந்து வயலின் கற்கிறாயா?'' என்று கேட்டார் கோஸ்வாமி.
வனிதாவிற்கு மகிழ்ச்சிப் பூரிப்பில் பேச்சே வரவில்லை. சிரமப்பட்டு பேசினாள்.
''இப்படியொரு அதிர்ஷ்டம் எனக்கு வருமென்று நான் கனவு கூடக் காணவில்லை சார். உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை!''
''டெஸ்டில் நன்றாக வயலின் வாசி... பரிசீலனை குழுவினர் உன்னைத் தேர்ந் தெடுக்கும்படி நடந்துகொள்... அதுபோதும்.
அன்று இசை விழாவில் நடந்து கொண்டது போல ஏமாற்றமளிக்க மாட்டாயே? சங்கர்லால் உன்னைப் பற்றி என்னிடம் ரொம்பப் பாராட்டினார். ஆனால், அன்று அவருக்கு நீ ரொம்ப ஏமாற்றமளித்து விட்டாய். அது போல இல்லாமல் விரைவில் நீ தேறினாயானால், எங்கள் அறக்கட்டளையிலிருந்து உனக்கு ஸ்காலர்ஷிப் வழங்குவதற்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன்!'' என்று விண்ணப்பத்தை தானே பூர்த்தி செய்து அதில், வனிதாவிடம் கையெழுத்தை வாங்கிக் கொண்டார்.
''இன்னும் ஒரு வாரத்தில் உனக்கு இன்டர்வியூவிற்கு அழைப்புக் கடிதம் வரும். தைரியமாகக் கலந்து கொள்!'' என்று வனிதாவிற்கு உற்சாகமூட்டினார்.
''உனக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது,'' என்றார்.
நிதி திரட்ட வந்த குழந்தைகளிடம் ஆயிரம் ரூபாய் நோட்டொன்றையும் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தார் கோஸ்வாமி.
''வனிதா! தினமும் நன்றாக வயலின் பயிற்சி செய். இன்டர்வியூ பற்றிய விவரங்கள் கடிதத்துடன் வரும். டெஸ்ட்டில் கலந்து கொண்டு வெற்றி பெறு!'' என்றார்.
''ஆகட்டும் சார்! நான் இந்த வாய்ப்பை நிச்சயம் பயன்படுத்திக் கொள்ளுவேன்!'' என்றாள் வனிதா.
கோஸ்வாமி காட்டிய அன்பும், அவர் அறிவித்த செய்தியும் வனிதாவின் உள்ளத்தில் தாங்க முடியாத மகிழ்ச்சியை உண்டாக்கி இருந்தது. அவள் கால்கள் தரையில் படியாமல் ஆகாயத்தில் பறப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. அத்தைக்கு இந்த விஷயும் தெரியக் கூடாது என்ற எச்சரிக்கையும் அந்த மகிழ்ச்சி யினூடே குறுகுறுத்தது.
அவள் வீட்டுக்கு போன போது, லீலாவும் அவள் தோழிகளும் கூடத்தில் கும்மாள மடித்துக் கொண்டிருந்தனர். அத்தை வீட்டில் இல்லை. வனிதாவைக் கண்டதும், லீலா முகத்தை கடுப்பாக்கிக் கொண்டு, ''எங்கே போய் தொலைஞ்சே? நானும் என் தோழி களும் டிஸ்கோ ஆடி ரொம்பக் களைச்சுப் போயிருக்கோம். உடனே எங்களுக்கு காபி போட்டுக் கொண்டு வா, சீக்கிரம்!'' என்று உத்தரவுவிட்டாள்.
''இதோ கொண்டு வரேன் லீலா!'' என்று கூறியபடி சமையல் அறைக்குள் புகுந்தாள். பத்தே நிமிஷத்தில் டிரேயில் காபி கோப்பை களையும், பிஸ்கட்களையும் சுமந்தபடி லீலாவின் தோழிகளை உபசரித்தாள்.
லீலாவுக்கே வனிதாவின் சுறுசுறுப்பும், மகிழ்ச்சியும் வியப்பாக இருந்தது.
''என்ன வனிதா ரொம்பக் குஷியா இருக்கே... என்ன விஷயம்?'' என்று காபியை உறிஞ்சியபடியே கேட்டாள் லீலா.
வனிதாவுக்கு திக்கென்றாகிவிட்டது.
''குஷிக்கு என்ன இருக்கு? ஒன்றுமில்லே!'' என்றாள் வனிதா.
ஆனால், 'மனதுக்குள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். லீலா சந்தேகப்படும்படி என் முகம் சந்தோஷத்தை காட்டிக் கொடுத்து விட்டதே!' என்ற கவலை படர ஆரம்பித்தது.
ஆனாலும் பொங்கி வரும் உற்சாகத்தை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
மறுநாள் பரசுராமிடம், தனக்கு வரவிருக்கும் அதிர்ஷ்டத்தைப் பற்றிக் கூற போனாள்.
வனிதாவைப் பார்த்ததுமே அவர், ''வாம்மா! ரொம்ப சந்தோஷமாக இருக்கியே. என்ன விஷயம்?'' என்று கேட்டார்.
'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்களே அது எத்தனை உண்மை என்பதை உணர்ந்தாள் வனிதா. கோஸ்வாமி தன் மீது காட்டிய அன்பை, அக்கறையை பரசுராமிடம் அவள் தெரிவித்தாள்.
''ரொம்ப திருப்தியா இருக்கும்மா... இத்தனை திறமை இருந்தும் பிரகாசிக்க முடியாம கஷ்டப்படறியேன்னு ரொம்ப வேதனைப்பட்டேன். முகம், உள்ளத்தின் கண்ணாடி. உன் சந்தோஷமான முகத்தைப் பார்த்து எனக்கு எத்தனை மகிழ்ச்சியா இருக்குத் தெரியுமா?'' என்று பாராட்டினார்.
பள்ளியில் தன் அந்தரங்கத் தோழிகளிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டாள் வனிதா.
''டெஸ்டின் போது நீ வயலின் சிறப்பாக வாசிப்பது இருக்கட்டும். அவர்கள் உனக்கு பாஸ் மார்க் போடும்படி உன் தோற்றமும் இருக்க வேண்டும். இன்டர்வியூவின் போது அணிய ஒரு புது உடை வாங்கி அணிந்து கொள்,'' என்று யோசனை கூறினாள் ஒரு தோழி.
'இவளுக்கு என் நிலை தெரியாது. ஆனாலும், இது நல்ல யோசனைதான்' என்று நினைத்த வனிதா, அவளுடனேயே கடைக்குப் போய், தான் சிறுகச் சிறுக சேமித்த பணத்தில் ஒரு புது டிரஸ் வாங்கினாள். அதை அத்தை, லீலா கண்களில் படாமல் பத்திரப் படுத்தினாள். மாலை வேளைகளில் தன் வயலினை கொடுத்து வைத்துள்ள அந்த பெண்ணை வயலினோடு பார்க் வரும்படி ஏற்பாடு செய்தாள். தினமும் அந்தக் குழந்தைகளையே ரசிகப் பெருமக்களாக நினைத்துக் கொண்டு மிகுந்த ஈடுபாட்டுடன் வயலின் சாதகம் செய்யலானாள்.
தினமும் தபால்காரரை ஆவவோடு எதிர்பார்த்து வாசலிலேயே காத்திருந்தாள். 'அப்படி அவர் கொண்டுவரும் கடிதம் அத்தை கையிலோ, லீலாவின் கையிலோ போனால் ஆபத்தாயிற்றே!' என்று நடுங்கியது அவள் உள்ளம். அவள் துரதிர்ஷ்டம் அன்று தபால்காரர் அவளுக்காக, கடிதத்துடன் வந்த போது லீலா வீட்டில் இருந்தாள்.
''போஸ்ட்'' என்று குரல் கொடுத்ததும், வனிதாவுக்கு மூச்சே நின்று விடும் போலாயிற்று. 'பாவி மனுஷன்! நான்தான் வாசலிலேயே நிற்கிறேனே. பேசாமல் என்னிடம் கடிதத்தைக் கொடுத்து விட்டுப் போக வேண்டியதுதானே!' என்று ஆதங்கப்பட்டாள்.
நல்ல வேளை, அவளுக்கான கடிதத்தோடு இன்னொரு கடிதமும் இருந்தது. தபால்காரரின் குரல் கேட்டு லீலா வரும் காலடியோசை கேட்டதும், தன் கடிதத்தை மறைத்துக் கொண்டு அவளிடம் மற்றொரு கடிதத்தை மட்டும் நீட்டி னாள், தன் பதட்டத்தை வெளிக்காட்டாமல்.
''இரண்டு கடிதம் இருந்தது போலிருக்கே?'' என்றாள் கழுகுக் கண்கள் கொண்ட லீலா.
''இல்லியே... ஒரு கடிதம் தான் கொடுத்தார் போஸ்ட்மேன். அதுதான் இது,'' என்றாள் குரல் நடுக்கமின்றி வனிதா.
''ஓ!'' என்று அந்தக் கவரை பிரித்தபடி உள்ளே சென்றாள் லீலா. வனிதா நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி இசைக் கல்லூரிக் கடிதத்துடன் தன் அறைக்குள் போனாள்.
'தடக் தடக்' கென்று அடித்துக் கொண்டது நெஞ்சம். ஆவலோடு அதை அவசர அவசரமாக படித்துக் கொண்டிருந்தபோது, தடா லென்று கதவை திறந்து கொண்டு உள்ளே பாய்ந்தாள் லீலா!
''லீ...ல்லா!'' அதிர்ந்து போனாள் வனிதா.
- தொடரும்.
