PUBLISHED ON : ஜூன் 20, 2020

கடலுார் மாவட்டம், சிதம்பரம், பண்ணப்பட்டு, திருவள்ளுவர் பாடசாலையில், 1967ல், 6ம் வகுப்பில் சேர்ந்தேன். பள்ளி வளாகத்தில் தினமும் பிரார்த்தனை கூட்டம் நடக்கும்.
வகுப்பு ஆசிரியர் அரங்கநாதன், முறையாக பங்கேற்க வைப்பார்.
பிரார்த்தனை நிகழ்ச்சி முடிந்ததும் மாணவ, மாணவியரில் ஒருவரை மேடைக்கு அழைத்து, தெரிந்த குறள் ஒன்றைக் கூற சொல்வார் தலைமை ஆசிரியர். தவறில்லாமல் ஒப்பிக்க வேண்டும். உடனே, ஒரு ஆசிரியரை அழைத்து, அதை புரியும்படி விளக்கச் சொல்வார்.
ஒன்றையே திரும்பச் சொல்ல கூடாது என்பது விதி. எனவே, கூட்டம் முடிந்தவுடன், அன்று கூறியதை பட்டியலிட்டு கவனத்தில் கொள்வோம். இதன் மூலம் குறள்கள் மனதில் பதிந்தன. அவற்றின் பொருளையும் புரிந்து கொண்டேன்.
தற்போது, என் வயது, 65; யாராவது பிழையாக குறள் சொல்வதைக் கேட்டால் உடனே திருத்துவேன். குறள் மூலம் அறிந்த அறத்தை, வாழ்வில் கடை பிடித்து வருகிறேன்.
- இ.பாலகிருஷ்ணன், சென்னை.
தொடர்புக்கு: 98404 44035
