PUBLISHED ON : செப் 12, 2020

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர், புனித அன்னாள் பள்ளியில், 2012ல், 7ம் வகுப்பு படித்தபோது, ஆசிரியையாக இருந்தார் குமுதவள்ளி. ஒருமுறை கரும்பலகையில், 1,000 என்று எழுதி இடையூறு செய்து கொண்டிருந்தேன்.
அன்புடன் அழைத்து, 'எழுதிய எண்ணின் மதிப்பு எவ்வளவு...' என்று கேட்டார். எளிமையான கேள்வி என்பதால் சற்று அவமானமாக உணர்ந்து, 'ஓராயிரம்...' என்றேன். உடனே கூடுதலாக ஒரு பூஜ்ஜியத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் எழுதி, 'இதன் மதிப்பு எவ்வளவு...' என்றார்.
'பத்தாயிரம்...'
உடனடியாக பதில் தந்தேன்.
இன்னொரு பூஜ்யத்தை, அந்த எண்ணின் இடப்பக்கம் எழுதி, 'இப்போது மதிப்பு எவ்வளவு...' என்று கேட்டார்.
'அதே பத்தாயிரம் தான்...'
கூறியதும் கண் சிமிட்டி புன்னகைத்தவாறே, 'முக்கியத்துவமற்ற எண், முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின் தொடரும்போது மதிப்பு கூடுகிறது. அதே எண், முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன் செல்ல முயலும்போது, மதிப்பேதும் இல்லாமல் ஆகிறது.
'அதுபோன்றது தான் ஆசிரியர் - மாணவர் உறவும்... மாணவன், ஆசிரியரைப் பின் தொடர்ந்தால் மதிப்பு கூடும். அதுவே தலைகீழாக அமைந்தால், பதில் உனக்கே தெரியும்...' என்று முடித்தார்.
'மரியாதையையும், சகிப்புதன்மையையும் பின்தொடர்ந்து பாருங்கள்; மனிதனாய் பிறந்ததற்கான மகத்துவம் புரியும்... கற்றவரை பின் தொடருங்கள், வாழ்வின் அர்த்தம் விளங்கும்...' என்று அறிவுரைத்தார்.
இப்போது, என் வயது 19; அந்த ஆசிரியையின் அறிவுரையை பின் தொடர்ந்து வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொள்கிறேன்.
- வீ.யுவராஜ், திருவள்ளூர்.
தொடர்புக்கு: 91717 15306
