PUBLISHED ON : செப் 24, 2022

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி, ஜில்லா போர்டு ஆரம்ப பள்ளியில், 1948ல், 5ம் வகுப்பு படித்த போது, எங்கள் கிராமத்தில், படிப்பறிவு இல்லாதோரும், வறுமையில் வாடுவோரும் அதிகம் இருந்தனர்.தவறான பழக்க வழக்கங்களோடு சுற்றிய சிறுவர்களுடன் சேர்ந்து, படிப்பில் கவனம் செலுத்த மறந்தேன். எச்சரிக்கை விடுத்தும் திருந்தவில்லை.
ஒருநாள், என்னையும், மற்றொரு சிறுவனையும் கண்டித்து பலமாக அடித்தார், ஆசிரியர் வெங்கட்ரெங்கய்யர்.இதை அம்மாவிடம் கூறியதும், பதறியபடி சண்டைக்கு புறப்பட்டார். வழியில், காளியம்மன் கோவில் முன் குடியிருந்த சங்கரலிங்கம் என்பவர் தடுத்து நிறுத்தி, 'ஆசிரியரிடம் சண்டை போட கூடாது; திருத்துவதற்காக தான் அடித்திருப்பார்; பேசாமல் வீட்டுக்கு போ...' என சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
இரண்டு நாட்கள் நான் பள்ளிக்கு செல்லவில்லை. இதையறிந்ததும் அம்மாவுடன் என்னையும் அழைத்து, 'கெட்ட சகவாசம் உள்ளவர்களுடன் சேர்ந்து, படிப்பில் கவனமின்றி இருக்கிறான். அவனை நல்வழிப்படுத்துவதற்கு தான் அடித்து கண்டித்தேன். ஒழுக்கத்துடன் படித்தால் முன்னேற வழி உண்டு. அரசு வேலைக்கும் வாய்ப்பு இருக்கிறது...' என அறிவுரைத்தார்.
மறுநாளே பள்ளி சென்று படிப்பில் கவனம் செலுத்தினேன். சிறப்பாக படித்து ஆசிரியர் பணியில் சேர்ந்து, தலைமை ஆசிரியராக உயர்ந்து ஓய்வு பெற்றேன். எனக்கு, 85 வயதாகிறது; அந்த குருவின் அறிவுரையை மதித்ததால் வாழ்வில் உயர்ந்து மனநிறைவுடன் வாழ்கிறேன்!
- கே.வீரையன், திண்டுக்கல்.
