PUBLISHED ON : மார் 13, 2021

என் வயது, 74; தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். நான் ஒரு படைப்பாளி; என் எழுத்துப் பணி, தமிழ் சேவைக்காக, தமிழக அரசு வழங்கிய, 'தமிழ்ச் செம்மல்' விருது பெற்றுள்ளேன்.
பல ஆண்டுகளாக சிறுவர்மலர் இதழைப் படித்து வருகிறேன்; என் பள்ளி அனுபவத்தை, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியில் இடம் பெறச் செய்து மகிழ வைத்தது.
பள்ளிகளில் சொற்பொழிவு ஆற்றும்போது, சிறுவர்மலர் இதழில் வரும் சிறுகதைகளை மாணவச் செல்வங்களிடம் எடுத்துரைப்பேன். அறிவை அள்ளித்தரும் அட்சயப் பாத்திரமாக பெருமை கொள்வேன்.
இதயத்தைக் கொள்ளைக் கொள்கிறது, 'இளஸ் மனஸ்!' பகுதி. சிறுவர், சிறுமியரின் கை வண்ணத்தை, 'உங்கள் பக்கம்' ஊக்குவித்து பாராட்டுகிறது. வாசகர்களை ஊக்குவிக்க, சன்மானம் தருவது பாராட்டுக்குக்குரியது.
கட்டுரைகள் அறிவைக் கனியாக்குகின்றன. எளிமையுடன் வெளிச்சம் காட்டி, அங்குராசு பகுதி இருளை நீக்குகிறது. இவற்றை கூறுவதில் அகமகிழ்கிறேன். சிறுவர்மலர் இதழ் மேலும் வளர வாழ்த்துகிறேன்.
- சு.லக்குமணசுவாமி, மதுரை.

