PUBLISHED ON : ஜூன் 26, 2021

என் வயது, 31; பெங்களூருவில், நெட்வொர்க்கிங் இன்ஜினியராகப் பணிபுரிகிறேன். சிறுவர்மலர் இதழை, 3ம் வகுப்பிலிருந்தே வாசித்து வருகிறேன். அப்போதெல்லாம், வெள்ளியன்று பள்ளி விட்டு வந்ததும்,சிறுவர்மலர் இதழை வாசித்த பின்தான் சீருடையையே மாற்றுவேன்.
தினமும் இரவில் தந்தையிடம், 'கதை சொன்னால் தான் துாங்குவேன்...' என, அடம் பிடிப்பேன். அவரும் சிறுவர்மலர் கதைகளைப் படித்து சொல்வார்.
ஏற்கனவே, அவற்றை படித்திருந்தாலும், மீண்டும் ஒருமுறை ரசித்து கேட்பது பசுமரத்தாணி போல் நினைவில் பதியும்.
பெங்களூருவில், தமிழ் இதழ்கள் விற்கும் கடையை தேடிப்பிடித்து, தினமலர் - சிறுவர்மலர் இதழை வாங்குகிறேன்.
படக்கதை, சிறுகதைகள், அங்குராசு, இளஸ் மனஸ் என, அனைத்தையும் ஆர்வமுடன் படிக்கிறேன். குழந்தைகள் வரையும் ஓவியங்களை ரசிப்பதுடன், புதிர்களையும் ஆவலுடன் செய்து பார்க்கிறேன்.
சிறுவர்மலர், என் போன்றவர்களுக்கும் எழுத வாய்ப்பு அளிப்பது கண்டு, மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
- ஆர்.மானசா, பெங்களூரு.

