PUBLISHED ON : மார் 05, 2022

என் வயது, 84; மூன்று மொழிகளில் புலமை பெற்றுள்ளேன். பல திறன்கள் இருந்தாலும், குடும்பம் மற்றும் குழந்தைகளை பராமரிப்பதில் ஆர்வம் காட்டுவேன்.
சிறுவர்மலர் இதழை மாறாத விருப்பத்துடன் வாரந்தோறும் வாசித்து வருகிறேன். என் பேரன்கள் பள்ளி சென்று திரும்பும் முன், அனைத்து பகுதிகளையும் படித்து விடுவேன்.
பேரன்கள் திரும்பியதும், 'என்ன ஆச்சி... எல்லாம் படித்து விட்டாயா...' என்ற கேள்வி எழுப்புவர். மகிழ்வுடன் அவர்களுக்கு உணவு ஊட்டியபடியே, படித்த கதைகளை சுவாரசியமாக சொல்வேன்.
பேரன்கள், இப்போது பெரியவராகி விட்டனர். இன்று அவர்கள் கடைபிடிக்கும் ஒழுக்கம், பிறரிடம் காட்டும் மரியாதை, மதிக்கும் குணம் எல்லாம் சிறுவர்மலர் இதழ் மூலம் வந்தது. அதில் படித்த கதைகளை உணவுடன், உணர்வு கலந்து ஊட்டியதால் கிடைத்த பரிசு. இதை பெருமையுடன் கூறுகிறேன்.
சிறுவர்மலர் இதழின் சேவை, இளைய சமுதாயத்தினருக்கு என்றும் தேவையாக உள்ளது.
- சி.சங்கரகோமதி, மதுரை.
