PUBLISHED ON : அக் 26, 2024

என் வயது, 65; தமிழக அரசு உள்ளாட்சி நிதித்தணிக்கைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். தினமலர் நாளிதழ் நீண்ட கால வாசகன். எல்லா வயதினரையும் கவர்ந்துள்ள சிறுவர்மலர் இதழ், நெகிழ்வு நிறைந்தது. முன் அட்டை முதல், கடைசி பக்கம் வரை சிறப்பு அம்சங்கள் நிறைந்துள்ளது. அதை படித்தபடியே பேரன், பேத்தியருடன் பொழுதை இனிமையாக்குகிறேன்.
பள்ளிக் கால நினைவுகளை, 'ஸ்கூல் கேம்பஸ்!' அசைபோட வைக்கிறது. நீதிநெறிகளை போதிக்கும், 'சிறுகதைகள்!' ஜொலிக்கின்றன. வண்ணப் படங்களுடன், 'தொடர்கதை!' சிறப்பாக ஈர்க்கிறது. சிறுவர், சிறுமியர் அறிவுத்திறனுக்கு ஏற்ற, 'புதிர்!' பகுதியும், புள்ளிகளை இணைத்து, வண்ணம் தீட்ட வைப்பது அருமையோ அருமை. மழலையர் கைவண்ணத்தில் மிளிரும் ஓவியங்களை, 'உங்கள் பக்கம்!' பகுதியில் கண்டதும் மனம் குதுாகலிக்கிறது. குட்டி மலர்களின் அழகிய புகைப்படங்கள் ரசிக்க வைக்கின்றன.
எல்லாரையும் சிரிக்க வைக்கும், 'மொக்க ஜோக்ஸ்!' அரிய தகவல்கள் அள்ளித்தரும், 'அதிமேதாவி அங்குராசு!' கட்டுரை மிளிர்கிறது. சிறுவர்மலர் இதழின், 'இளஸ்... மனஸ்...' அறிவுரைகள் முத்தாய்ப்பாக உள்ளன. மேலும், மனதைக் கவரும், 'மம்மீஸ் ெஹல்த்தி கிச்சன்!' உணவு செய்முறை அருமை. சீர், சிறப்புடன் வெற்றி நடை போட்டு வரும், சிறுவர்மலர் இதழை வாழ்த்துகிறேன்!
- ஆ.மாணிக்கம், கோவை.
