PUBLISHED ON : மே 30, 2020

சென்னை, முத்தியாலுபேட்டை, உயர் நிலைப்பள்ளியில், 1964ல், 6ம் வகுப்பில் சேர்ந்தேன். ஆங்கிலம் சுத்தமாக தெரியாது என்பதால் தவித்தேன். ஆரம்ப கல்வியை, சோழவந்தான் கிராமத்தில் கற்றிருந்தேன்.
முதல்நாளில், வகுப்பு ஆசிரியர் பூ.சக்கரவர்த்தி, 'கடந்த ஆண்டு படித்த மாணவர்களை சந்தித்து என்னைப் பற்றி அறிந்து வாருங்கள்...' என அனுப்பினார். 'கண்டிப்பானவர்; ஒழுங்கு குறைந்தால் அடி, உதைக்கு பஞ்சமிராது' என அறிந்து கலங்கினேன். பயத்தால், 'கிராமத்திற்கே செல்கிறேன்...' என்று வீட்டில் பிடிவாதம் செய்தேன்; பலன் இல்லை.
வகுப்பில் அடிக்கடி, 'நன்றாக, 'வாட்ச்' பண்ணுறீங்களா...' என்பார் ஆசிரியர். மாணவர்கள், 'நல்லா பண்ணுறோம் ஐயா...' என்று தலையை ஆட்டுவர். அதை, 'நேரம் காட்டும் கடிகாரம் செய்ய சொல்கிறார்' என்பதாக புரிந்திருந்தேன். அதன் விளைவாக, 'செய்முறை பற்றி எனக்கு எதுவும் தெரியாதே' என, பதறி குழம்பி திரிந்தேன்.
வேறு வழியின்றி மனப்பாடம் செய்தேன். காலாண்டு தேர்வு முடிவு வந்தது. நல்ல மதிப்பெண் பெற்றிருந்த என்னை மேடைக்கு அழைத்து பாராட்டினார் ஆசிரியர்.
அது தைரியம் தர, 'ஒரு சந்தேகம் கேட்கலாமா ஐயா...' என்றேன். சிரித்தபடியே சம்மதித்தார். உடனே, 'தினமும், 'வாட்ச் பண்ணுறீங்களா...' என பலமுறை கேட்கிறீர்களே... வாட்ச் பண்ண நீங்கள் கற்றுத்தரவில்லையே...' என, வெகுளியாக கேட்டேன்.
கலகல வென சிரித்தவர், 'இந்த சின்ன விஷயம் கூட புரியாமல், எப்படி மதிப்பெண் பெற்றாய்...' என்றபடி அடித்து துவைத்தார். அந்த நாளை மறக்க முடியவில்லை.
தற்போது, என் வயது, 68; சில மாதங்களுக்கு முன் அந்த ஆசிரியரை, அவரது இல்லத்தில் சந்தித்தேன். பாதத்தில் பணிந்து ஆசி பெற்று மகிழ்ந்தேன்.
- கி. வெங்கடகிருஷ்ணன், சென்னை.
தொடர்புக்கு: 97909 56566
