PUBLISHED ON : மே 30, 2020

மதுரை மாவட்டம், தேனுார் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1980ல், 8ம் வகுப்பு படித்தபோது நடந்த நிகழ்வு...
ஒருநாள் உடன் படித்த நாசரின் புத்தகப்பையில் இருந்த பென்சிலை எடுத்து, ஒளித்து வைத்திருந்தேன். மதிய உணவு இடைவேளைக்குப் பின் பென்சிலை தேடியவன், 'ஐயர் வாத்தியார்' என்ற கணித ஆசிரியரிடம் புகார் கூறினான். என்னை விசாரித்தவரிடம், 'எடுக்கவில்லை ஐயா...' என மறுத்தேன்.
என் புத்தகப் பையை சோதனை செய்து பென்சிலை கண்டுபிடித்தார். உரியவனிடம் கொடுக்க அறிவுரைத்தார். தர மறுத்து அடம் பிடித்தேன். பதட்டமின்றி யோசித்த ஆசிரியர், 'சரி... பென்சிலை இரண்டாக வெட்டி, ஆளுக்கு பாதியாக தரட்டுமா...' என்றார்.
நான் சம்மதித்தேன். அதை மறுத்து, 'முழுதாக வேண்டும்...' என அழுதான். இறுதியாக, 'திருடியதால் தான், பாதியாக இருந்தாலும் பரவாயில்லை என்கிறாய். ஆனால், வெட்ட சம்மதிக்காமல் முழுமையை கேட்கிறான் அவன்... பென்சில் அவனது தான்...' என்றபடி கொடுத்தார்.
பிறர் பொருளை அபகரிக்கக் கூடாது என, அன்றே முடிவு செய்தேன்.
இப்போது என் வயது, 51; அந்த பென்சில் ஏற்படுத்திய கீறல், வாழ்வில் அழியாத அறமாக உள்ளது.
- எஸ்.பாபு, மதுரை.
தொடர்புக்கு: 98657 79066
