PUBLISHED ON : மார் 03, 2017

அல்லியூர், என்னும் கிராமத்தில், ஏழை குடியானவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அழகிலும், அறிவிலும் சிறந்த மகள் இருந்தாள். அவள் பெயர் யாழ்விழி.
ஒருநாள்-
இளவரசனும், அமைச்சரும் காட்டிற்கு வேட்டையாட சென்றனர். நிறைய விலங்குகளை வேட்டையாடினர். மிகவும் களைப்படைந்த அவர்களுக்கு, தாகம் ஏற்பட்டது. தண்ணீர் குடிப்பதற்காக அருகில் உள்ள கிராமத்திற்குள் நுழைந்தனர்.
அங்கே யாழ்விழியின் தோழியர், கிணற்றில் தண்ணீர் எடுத்து கொண்டிருந்தனர். குதிரையிலிருந்து இறங்கிய இளவரசன் அவர்களை பார்த்து, “கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுங்கள்!” என்றான்.
அப்போது அங்கு வந்த யாழ்விழி, “இவர்களுக்கு யாரும் குடிக்க தண்ணீர் தராதீர்கள்,” என்றாள்.
அவளுக்கு அஞ்சிய தோழியர், யாரும் தண்ணீர் தர முன் வரவில்லை.
'நான் ஒரு இளவரசன் என்று தெரிந்தும், இப்படிச் சொல்கிறாளே...' என ஆச்சர்யம் அடைந்தான் இளவரசன்.
வேறு வழியில்லாத இளவரசனும், அமைச்சரும் அருகில் இருந்த மரத்தின் நிழலில் அமர்ந்தனர்.
சிறிது நேரம் சென்றது.
“இப்போது தண்ணீர் குடியுங்கள்!” என்று அன்புடன் கூறி, அவர்களிடம் பானையை நீட்டினாள் யாழ்விழி.
தாகத்தால் மடிந்துவிடும் நிலையில் இருந்ததால், மறுபேச்சின்றி இருவரும் தண்ணீரை வாங்கி குடித்தனர்; அவர்களது தாகம் தணிந்தது.
“எங்களுக்கு தண்ணீர் தர வேண்டாம் என்று எல்லாரையும் மிரட்டிய நீயே, இப்போது தண்ணீர் கொண்டு வந்து தருகிறாய். உன் செயல் வியப்பாக இருக்கிறதே...” என்று கேட்டான் இளவரசன்.
“ஐயா! நீங்கள் இருவரும் மிகவும் களைப்படைந்து இருந்தீர்கள். உங்கள் உடலெங்கும், வியர்வை வழிந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், உடனே தண்ணீர் குடித்தால், உங்களது உடல் நலம் கெடும். இளைப்பாறிய பின் குடித்தால், உடல் நலம் கெடாது. அதனால் தான் அப்போது, தண்ணீர் தர வேண்டாம் என்று தடுத்தேன்,” என்றாள் யாழ்விழி.
அவளது அறிவுப்பூர்வமான பதில், இளவரசனை வியப்படைய செய்தது. அதே சமயம், அவளின் அழகும் இளவரசனை கவர்ந்தது.
அரசரிடம் சொல்லி, யாழ்விழியை மணந்து, மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தான் இளவரசன்.
ஏழை வீட்டில் பிறந்திருந்தாலும், இந்த யாழ்விழி அக்காவிற்கு அறிவு இருந்ததால், இளவரசனையே மணக்கும் பாக்கியம் கிடைத்து விட்டது பார்த்தீர்களா... நீங்களும் புத்திசாலியாக இருங்க... உயர்ந்த இடத்திற்குப் போகலாம்.
